tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பாபநாசம்  தேர்வு நிலை பேரூராட்சி  மன்றக் கூட்டம்

பாபநாசம், ஜுன் 2-  தஞ்சாவூப் மாவட்டம் பாபநாசம் தேர்வு நிலை பேரூராட்சி மன்றக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு  தலைவர் பூங்குழலி  தலைமை வகித்தார். செயல் அலுவலர் குமரேசன், துணைத் தலைவர் பூபதி ராஜா முன்னிலை வகித்தனர்.  இதில், பாபநாசம் பேரூராட்சியில் 15 ஆவது நிதிக் குழு மானிய திட்டப் பணிகள், பொதுநிதி திட்டப் பணிகள், சிறப்பு சாலை திட்டப் பணிகள், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டப் பணிகள், பள்ளி மேம்பாட்டு மானிய திட்டப் பணிகள் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்றுவது என தீர்மானங்கள் நிறைவேறின. இதில் கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர், பேரூராட்சி உதவியாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பூட்டியிருந்த வீட்டின் கதவை  உடைத்து நகை, பணம் திருட்டு

தஞ்சாவூர், ஜுன் 2-  தஞ்சாவூர் அருகே, பிள்ளையார்பட்டி பாலகிருஷ்ணா நகர் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(50). இவர் கடந்த சனிக்கிழமை மாலை தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு மயிலாடுதுறையில் நடந்த உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்காக சென்றார். பின்னர், மே 1 ஆம் தேதி மாலை வீட்டிற்குத் திரும்பி வந்தார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 10 சவரன் தங்க நகைகள், வெள்ளி விளக்கு மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து, செந்தில்குமார் தமிழ் பல்கலைக்கழக காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் உதவி ஆய்வாளர் விஷ்ணு மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த ரேகைகளை தடவியல் நிபுணர்கள் பதிவு செய்தனர். காவல்துறை மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதுகுறித்து, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலை தடுப்பு கட்டையில்  லாரி மோதி  2 வாலிபர்கள் பலி:  ஓட்டுநர் படுகாயம்

தஞ்சாவூர், ஜுன் 2-  தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஜெகன்மோகன் நகரைச் சேர்ந்த காளிராஜ் (26), தஞ்சை பிள்ளையார்பட்டி பழைய ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த அருண்குமார் (22), ஒரத்தநாடு தாலுகா மருங்குளம் பகுதியை சேர்ந்த சதீஷ் கண்ணன்(40) ஆகிய மூன்று பேரும் ஞாயிறன்று மாலை திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இருந்து, பிராய்லர் கோழிகளை லாரியில் ஏற்றிக்கொண்டு, அதனை தஞ்சாவூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக தஞ்சாவூர் நோக்கி புறப்பட்டனர்.  லாரியை சதீஷ் கண்ணன் ஓட்டினார். அவர் அருகில் காளிராஜ், அருண்குமார் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.  இந்த லாரி திங்கள்கிழமை காலை தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது.  அப்போது, திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்புக் கட்டையில் மோதியது. இந்தக் கோர விபத்தில் காளிராஜ், அருண்குமார் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஓட்டுநர் சதீஷ் கண்ணன் பலத்த காயமடைந்த உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இது குறித்து தகவல் அறிந்த தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலத்த காயமடைந்த சதீஷ் கண்ணனை மீட்டு, சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்தில் பலியான காளிராஜ், அருண்குமார் ஆகியோர் உடல்களை மீட்டு, உடற்கூறாய்வுக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோரிக்கை

பாபநாசம், ஜூன் 2- தஞ்சாவூப் மாவட்டம் பாபநாசம் அருகே, உத்தா ணியில் பயணிகள் நிழலகம்  முன்புறம் செடிகள் வளர்ந்துள்ளன. செடிகளை அப்புறப்படுத்தி, நிழல கத்தை சீர்செய்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.  இதேபோல், சுந்தரப் பெருமாள் கோவில் அருகே,  சோழன் நகரில் உள்ள பய ணியர் நிழற்குடை முன்பும் செடிகள் வளர்ந்துள்ளன. இதையும் சீர் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில்  5 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருச்சிராப்பள்ளி, ஜுன் 2-  தற்போது பரவும் கொரோனா அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நலமுடன் உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  இருந்தபோதும், தமிழக அரசு கூறியபடி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது என்றார்.