மேட்டுப்பாளையம், டிச.15- ஊட்டி மலை ரயில் பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு காரணமாக, மேலும் 3 நாட்கள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு விடுத்த கனமழை எச்சரிக்கை காரணமாக, வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாட்கள் மலை ரயில் சேவையை ரத்து செய்து தென்னக ரயில்வே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக மலை ரயில் பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, மரங்கள் மற்றும் பாறைகள் விழுந்ததால் தண்டவாளம் சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து, மலை ரயில் பாதை சீரமைப்பு பணி நடைபெற்று வருவதாலும், மேலும் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை காரணமாகவும் டிச.17 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகவும், இதேபோல் குன்னூர்-ஊட்டி-குன்னூர் இடையிலான ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.