கொல்கத்தா, ஜுன் 22 - மேற்குவங்கத்தில் திரிணாமுல் கட்சிக் குண்டர்களின் வன்முறையை முறியடித்து இடதுமுன்னணி முன்னேறுகிறது. மேற்குவங்கத்தில் ஜூலை 8 அன்று நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. இந்நிலையில் எதிர்கட்சிகளை வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் திரிணாமுல் காங்கிரஸ், குண்டர்கள் மூலமாக வன்முறையை ஏவி கொடூரமான தாக்குல் நடத்தியது. வேட்புமனு தாக்கல் துவங்கிய முதல் நாளான ஜூன் 9 அன்று காங்கிரஸ் ஊழியரும்,வேட்பு மனு தாக்கலின் இறுதி நாளான ஜூன் 15 அன்று சோப்ராவில் இரண்டு இடதுசாரிகள் மற்றும் பாங்கூரில் இந்திய மதச்சார்பற்ற முன்னணி ஊழியர் ஒருவர் என நான்கு எதிர்க்கட்சியினர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் சோப்ராவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்திருந்த சிபிஎம் நிர்வாகி மன்சூர் ஆலம் ஜூன் 21 அன்று சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார். இவ்வாறு எதிர்க்கட்சியினரை வேட்புமனு தாக்கல் செய்ய விடாமலும், வன்முறையை முறியடித்து வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள் மீது கொலை தாக்குதலையும் திரிணாமுல் குண்டர்கள் நிகழ்த்தி வருகிறார்கள். மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் “திரிணாமுல் காங்கிரஸால் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாத மற்றும் வன்முறை அரசியலை” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வன்மையாக கண்டித்துள்ளார்.
‘ஜனநாயகத்தின் புதை குழி’
“மாநில காவல்துறையின் ஒரு பகுதி திரிணாமுல் கும்பல்களுக்கு ஒத்துழைக்கிறது; மாநில தேர்தல் ஆணையம் முற்றிலும் செயலற்றதாகவும் பொறுப்பற்றதாகவும் உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக மாற்றிவிட்டது; மேற்கு வங்கத்தை ஜனநாயகத்தின் புதைகுழி என்றே கூறலாம்” என்று மம்தா அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முகமது சலீம் கடுமையாக விமர்சித்துள்ளார். தோல்வி பயத்தில் எதிர்க்கட்சிகளே இல்லாமல் போட்டியின்றி வெற்றி பெற வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு எதிர்க்கட்சி வேட்பாளர்களை வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் தடுக்க முயற்சித்தது, குறிப்பாக பெண்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.ஆனால் இடதுசாரிகள் கூட்டணி இம்முறை பொதுமக்களோடு கைகோர்த்து திரிணாமுல் கட்சியின் வன்முறைகளை எதிர்த்து 70,000 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை பிர்பும் மாவட்டத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் இதே போன்ற வன்முறை வெறியாட்டத்தை நடத்தி, ‘திரிணாமுல் காங்கிரஸ் எந்த ஒரு போட்டியும் இன்றி 93 சதவீத இடங்களை ‘கைப்பற்றியது’ இம்முறை அதே மாவட்டத்தில் திரிணாமுல் குண்டர்களின் தாக்குதலை பொது மக்களுடன் இணைந்து முறியடித்து இடதுசாரிகள் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் போட்டியிடுவது திரிணாமுல் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
இதற்கிடையில் மேற்குவங்கத்தில் தேர்தலை ஜனநாயகப் பூர்வமாக நடப்பதை உறுதி செய்ய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மேற்குவங்கம் முழுவதும் மத்திய காவல் படைகளை அனுப்ப கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை மாநில தேர்தல் ஆணையம் ஏன் பின்பற்றவில்லை, ஜனநாயகப் பூர்வமாக தேர்தல் நடப்பதை உறுதிசெய்ய சுயேச்சையான முடிவு எடுக்க மாநில தேர்தல் ஆணையம் ஏன் தயங்குகிறது என்று நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு கேள்வி எழுப்பியது.மேலும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தது.