tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மாற்றுத்திறனாளிகள்  சங்க புதிய  கிளை துவக்கம்

கும்பகோணம், ஜுன் 6-  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில், கும்பகோணம் மாநகரம் மாத்தி பகுதியில் கிளை மாநாடு நடைபெற்றது. கிளை மாநாட்டிற்கு துரைக்கண்ணு தலைமை ஏற்றார். புதிய மாத்தி பகுதி கிளையின் தலைவராக துரைக்கண்ணு, செயலாளராக ரேவதி, பொருளாளராக  கங்கையம்மாள் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில், சத்தியமூர்த்தி, சங்கர், கலைச்செல்வி சேதுராமன், சரவணன், தோப்பு முருகன் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில், கும்பகோணம் மாநகர தலைவர் ஏ.பாரூக் வாழ்த்திப் பேசினார், மாவட்ட துணைத்தலைவர் பழ. அன்புமணி நிறைவுரையாற்றினார்.

மோசடி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம்  சிபிஐ அலுவலர்கள் அசல் ஆவணங்கள் சேகரிப்பு

தஞ்சாவூர், ஜுன் 6-   தஞ்சாவூர் வட்டாட்சியர் பின்புறம் உள்ள அலுவலகக் கட்டிடத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சிறுசேமிப்பு மற்றும் முதலீடு என்ற பெயரில் பொதுமக்களிடம் ரூ.1,500 கோடி மோசடி செய்தது. இது தொடர்பான வழக்கில் அசல் ஆவணங்களை பெறும் முகாம் நடைபெற்று வருகிறது.  மத்தியப் பிரதேசம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த பரிவார் டெய்ரீஸ் அண்ட் அல்லைட் லிமிடெட் மற்றும் பிடிஏ அறக்கட்டளை பெயரில், திரட்டப்பட்ட நிதி, வைப்புத் தொகைகள் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ வழக்குகளை பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மேற்கண்ட நிறுவனத்தில் பணம் செலுத்திய மக்களிடமிருந்து அசல் ஆவணங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி, சிபிஐ அலுவலர்கள் கடந்த மே மாதம் முதல், சென்னை, திருத்தணி, காஞ்சிபுரம், பெரம்பலூர், தஞ்சாவூர், ஈரோடு, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் பணம் செலுத்தியதற்கான அசல் ஆவணங்களை சேகரித்து வருகின்றனர். அந்த வகையில், தஞ்சாவூரில் கடந்த திங்கட்கிழமை முதல் மேற்கண்ட நிறுவனத்திடம் பணம் செலுத்திய முதலீட்டாளர்களிடம் இருந்து அசல் ஆவணங்களை வாங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னையிலிருந்து, சிபிஐ ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் வந்த குழுவினர், தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள கட்டடத்தில் அசல் ஆவணங்களை வாங்கி, அதை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆவணங்கள் பெறும் முகாம், தஞ்சாவூரில் வரும் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல்நாள், தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த முகாமில் நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் திரண்டு வந்து ஆவணங்களைக் கொடுத்தனர்.

இருசக்கர வாகனம் மோதி  முதியவர் உயிரிழப்பு

தஞ்சாவூர், ஜுன் 6-  தஞ்சாவூர் அருகே, நாஞ்சிக்கோட்டை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஆர். ரெங்கராஜ் (75). இவர் மே 26 ஆம் தேதி பிற்பகல் நாஞ்சிக்கோட்டை பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த இரு சக்கர வாகனம் இவர் மீது மோதியது. இதனால், பலத்த காயமடைந்த ரெங்கராஜ் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு புதன்கிழமை மாலை உயிரிழந்தார். இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.