மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும் என்று ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை பல ஆண்டுகளாக கிடப்பில் வைத்து ஒன்றிய அரசு காலதாமதம் செய்வதாகவும், விரைவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிமுடிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஸ்கர் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதன் விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞர், மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு தற்போது டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், கோவிட் ஊரடங்கு காரணமாக தான் பணிகள் தாமதமானதாகவும், 2026ஆம் ஆண்டுக்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிமுடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, "மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது; கொரோனாவை காரணம் காட்டாதீர்கள். கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? எப்போது கட்டி முடிப்பீர்கள்" என ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சரமாரி கேள்வி எழுப்பியது. பின்னர் இது தொடர்பாக விரிவான அறிக்கையை ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.