தேர்தலையொட்டி மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து, சுற்றுச்சுவர் மட்டும் எழுப்பப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள் ஏதும் நடைபெறாமல் இருந்த நிலையில், தேர்தலையொட்டி மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"மக்களவைத் தேர்தலுக்காகவே மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை துவங்குகிறது ஒன்றிய அரசு.
பல திட்டங்களை துவக்கி வைப்பதற்காக மூன்று முறை தமிழ்நாடு வந்த பிரதமர், மதுரை எய்ம்ஸ் பணிகளை துவக்கி வைக்காததற்கான காரணம் என்ன?
இது தேர்தல் நேர கண்துடைப்பு நாடகம். மக்களை ஏமாற்றும் நடவடிக்கை.
ஒரு ரகசிய திட்டத்தைப் போல மதுரை எய்ம்ஸின் கட்டுமானப்பணி இன்று துவக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பிரதமர் மதுரைக்கு வந்தார். அப்பொழுது அவரை வைத்து துவக்கி இருக்கலாம்.
அடிக்கல் நாட்டு விழாவுக்கும் திட்டத்தின் துவக்க நிகழ்வுக்கும் இடையே 5 ஆண்டு என்ற புதிய சாதனையை தேசம் அறிந்திருக்கும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.