லயன்ஸ் கிளப் சார்பில் 43 ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா
பாபநாசம், ஜுன் 24- பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் 43 ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஆர்.டி.பி கல்லூரி கலையரங்கில் நடந்த விழாவிற்கு லயன்ஸ் கிளப் தலைவர் செந்தில் தலைமை வகித்து வரவேற்றார். சேவை அறிக்கையை செயலாளர் பன்னீர் செல்வம் வாசித்தார். முன்னாள் மாவட்ட ஆளுநரை இயக்குநர் செல்வராஜன் அறிமுகம் செய்து வைத்தார். இதில், முன்னாள் மாவட்ட ஆளுநர் முஹம்மது ரபி பங்கேற்றுப் பேசி, பாபநாசம் லயன்ஸ் கிளப்பின் 2025-2026 வருடத்தின் தலைவராக ஜெகதீசன், செயலராக சிக்கந்தர் பாட்சா, பொருளாளராக கணேசன், இரண்டாம் துணைத் தலைவர் நவநீத கிருஷ்ணன், இயக்குநர்களாக ஆறுமுகம், சம்பந்தம், நூர் முஹம்மது, ராஜா முஹம்மது உள்ளிட்ட நிர்வாகிகளை பணியேற்கச் செய்தார். இதில், வங்காரம்பேட்டை கண் கொடுத்த பெருமாள் கோவில் திருப்பணிக்கு ரூ.1 லட்சம், மாற்றுத் திறனாளிக்கு சைக்கிள் மற்றும் பாபநாசம் அதன் சுற்று வட்டாரப் பகுதி பள்ளிகளில் 10, 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களில் வந்த மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு, ஏழ்மை நிலையில் உள்ள 10 பேருக்கு தலா 10 கிலோ அரிசி மூட்டை, ஒருவருக்கு ஊன்று கோல், 3 மாணவர்களின் மேற்படிப்பிற்கு உதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மண்டலத் தலைவர் திருமாறன், வட்டாரத் தலைவர் முத்தமிழ்ச் செல்வம், செயல் அலுவலர் ஸ்டாலின் பீட்டர்பாபு, மாவட்ட அலுவலர் சுப்ரமணியன், நிர்வாக அலுவலர் ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை இயக்குநர்கள் ஆறுமுகம், சம்பந்தம், பாண்டியன் தொகுத்தனர். தலைவர் ஜெகதீசன் ஏற்புரையாற்றினார். செயலர் சிக்கந்தர் பாட்ஷா நன்றி கூறினார்.
திருநங்கைகளின் கல்விச் செலவு அனைத்தையும் அரசே ஏற்கும்
புதுக்கோட்டை, ஜுன் 24- திருநங்கைகளின் கல்வி கனவை நிறைவேற்றுவதற்காக உயர்கல்வி பயிலும் திருநங்கைகள் அனைவருக்கும் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், உள்ளிட்ட அனைத்து கல்வி தொடர்பான கட்டணங்களையும் ‘தமிழ்நாடு அரசே” ஏற்கும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவிக்கையில், “திருநங்கைகள் எந்த வகையான பள்ளிகளில் படித்திருந்தாலும் உயர்கல்வி பயிலும்போது, அவர்கள் புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்களில் பயனடைய ஏதுவாக, இத்திட்டங்களில் பயன்பெறுவதற்கான தகுதி வரம்புகளில் திருநங்கை, திருநம்பி, இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து மூன்றாம் பாலினத்தவர்கள், அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை, தமிழ் வழிக் கல்வியில் படித்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை முற்றிலும் தளர்வு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் திருநங்கை, திருநம்பி உள்ளிட்ட அனைத்து மூன்றாம் பாலினத்தவர்களும் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தால் வழங்கப்படும் அடையாள அட்டையை சான்றாக சமர்ப்பித்து பயன்பெறலாம்’’ என்றார்.