அறந்தாங்கி, பிப்.4- விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஜன.31 மற்றும் பிப்.1 ஆகிய இரண்டு நாட்கள் இரண்டாவது திருக்குறள் மாநில மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ் திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 16 மாணவ மாணவிகளுக்கு கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ச.முத்துமதி, தமிழ் திறனறி தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம், மாநாட்டில் கலந்து கொண்டு பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரைப்போட்டியில் ஆவுடையார் கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பவிதா, மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்து, மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டுச் சான்றிதழைப் பெற்றார். இருவருக்கும் பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன், உதவி தலைமையாசிரியர் ஸ்டாலின், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் தமிழரசி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.