tamilnadu

img

இளம் திரை இயக்குநர்களின் நெஞ்சில் கனல் கூட்டும் கபாடியாவின் வெற்றி - சேதுசிவன்

இந்த ஆண்டிற்கான 2024 கேன்ஸ் திரைப்பட விழாவில் பாயல் கபாடியாவின், “ஆல் வி இமேஜின் அஸ் லைட் திரைப்படம் கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றதன் மூலம் இந்திய சினிமா மீண்டும் உலக அரங்கில் தனது முத்திரையைப் பதித்துள்ளது. அதுமட்டுமல்லால் கடந்த 30 ஆண்டுகளில் இந்தியத் திரைப்படம் ஒன்றிற்கு கிடைத்த முதல் வெற்றியாக பாயல் கபாடியா பெற்ற வெற்றி அமைந்துள்ளது.

அவர் இயக்கிய அந்த திரைப்படம் மும்பை யில் இரண்டு கேரள செவிலியர்கள் தங்கள் வாழ்க்கையை வழிநடத்தும் அழுத்தமான கதையைப் பேசுகிறது. இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கதம் ஆகி யோர் நடித்துள்ளனர். கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரு படம் திரையிடப்படுகிறது என்றாலே அந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் எந்த தடையும் இன்றி திரையிடப்படும் தரத்தை பெற்றுவிடும் என கூறுவார்கள். அது மட்டு மல்ல, அது ஒட்டு மொத்த உலகின் கவனத்தை யும் நொடிப் பொழுதில் ஈர்த்து விடும்.  கபாடியா இந்த விருது பெற்ற பிறகு,  ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது பெற்ற ஒலி வடிவமைப்பா ளரான ரசுல் பூக்குட்டி ஒரு முக்கிய தகவலை  தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.  அந்த பதிவு கபாடியாவின் போராட்டத்தை யும், இந்திய அரசியல் மற்றும் சமூகச் சூழ லில் திறமையான கலைஞர்கள் கண்டுகொள் ளப்படாமல் இருக்கும் தொடர் நிலையையும் நமக்கு காட்டுகிறது. அப்பதிவில் கபாடியாவின் வெற்றியைப் பாராட்டியுள்ள அவர், கபாடியா போன்ற திற மையான கலைஞர்களை வளர்ப்பதில் இந்திய  திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம்  (FTII) ஆற்றிய பங்கைப் பற்றியும் குறிப் பிட்டுள்ளார்.

கபாடியாவின் வெற்றி அவரது தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல, இந்திய திரைப்படம் மற்றும்  தொலைக்காட்சி நிறுவன முன்னாள் மாண வர்களின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்று என  அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் கேன்ஸ் பட விழாவுக்கு அவரது திரைப்படத்தை அனுப்ப பிரதான இந்திய திரைப்படத் துறையோ, அரசாங்கமோ எந்த உதவியும் செய்யவில்லை என்பதையும் வெளிப்படையாக விமர்சித்து பதிவிட்டிருந்தார். அதனுடன் கேன்ஸில் கபா டியா பெற்றுள்ள இந்த வரலாற்று வெற்றிக் கும் பிரதான திரைப்படத் துறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை தெள்ளத் தெளி வாக பூக்குட்டி கூறியுள்ளார்.  ஒரு மாணவர் இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களாக கூறப்படுகிற ஐஐஎம், ஐஐடி அல்லது எய்ம்ஸில் படித்தார்கள் என்றால், சர்வதேச நிறுவனங்களில் பொறி யாளர், மேலாளர்,மருத்துவர் என ஆகிவிடு வார்கள். ஆனால் திரைப்படக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர் கலை வடிவ போராட்டத்தை  மேலும் வலுப்படுத்தும் போராட்டக்காரராகி விடுவார்.  பாயல் பெற்றுள்ள இந்த வெற்றியில் முக்கி யமான ஒன்று அவர் இந்திய திரைப்படப் பள்ளி யின் முன்னாள் மாணவர் என்பது மட்டுமல்ல அவர் பங்கேற்ற முக்கியமான போராட்டமும் அதில் அங்கம் வகிக்கிறது. 

கபாடியா பயின்ற இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் கஜேந்திர  சவுஹான் என்ற தீவிர வலதுசாரி ஆதர வாளரை அப்பொறுப்பிற்கு தகுதி இல்லாத வரை தலைவராக நியமித்த போது கபாடியா உள்ளிட்ட பல மாணவர்கள் 139 நாள் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தை நடத்தி னர். அதனால் போடப்பட்ட வழக்கை இன்று  வரை அவர்கள் எதிர் கொண்டு வருகின்றனர்.  அந்தப் போராட்டத்தின் காரணமாக கபாடியாவின் கல்வி உதவித் தொகை ரத்து செய்யப்பட்டது மற்றும் அவருக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்து மன உளைச்சல் உள்ளிட்ட கடுமையான பாதிப்புகளை இந்த அரசு ஏற்படுத்தியது. எனினும் அவர் தனது கடுமையான உழைப்பினாலும் திறமையினாலும் கடுமை யாகப் போராடி “ஆஃப்டர்நூன் க்ளவுட்ஸ்” என்ற 13 நிமிட குறும்படத்தை இயக்கினார். இந்த குறும்படம் 2017 ஆம் ஆண்டு நடந்த 70 ஆவது கேன்ஸ் சர்வதேச விழாவில் போட்டிப் பிரிவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  தற்போது கபாடியா பெற்றுள்ள வெற்றி ஒட்டு மொத்த இந்தியாவுக்கே பெருமை சேர்ப்பது மட்டுமல்ல, மக்களின் இன்பமும் துன்பமும் நிறைந்துள்ள வாழ்வையும், சபலங்களையும் அழுக்குகளையும், அன்றாட ஓட்டங்களையும் எதார்த்தமாக திரையில் நமது கண்முன்னே காட்சிப்படுத்த பல கனவு களோடு பயணித்துக்கொண்டிருக்கும் ஓராயி ரம் இளம் இயக்குநர்களின் நெஞ்சில் எரியும் கனலை மேலும் கூட்டியுள்ளது என்றே கூற லாம்.