tamilnadu

img

கிராமப்புற வேலை உறுதி திட்டத்திற்கு நிதியைக் குறைப்பதா?

புதுக்கோட்டை, பிப்.5-  கிராமப்புற வேலை உறுதி திட்டத்திற்கு  நிதி ஒதுக்கீட்டை வெட்டிக் குறைத்துள்ள மோடி அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்தார். புதுக்கோட்டையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாட்டையொட்டி சனிக்கிழமை யன்று பேரணி-பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இதில் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:  புதுக்கோட்டை நகரின் வீதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் செங்கொடி ஏந்திவந்த காட்சியை மக்கள் வியந்துபார்த்த வண்ணம் இருந்தனர். இது சிவப்பு வண் ணத்தில் அச்சடிக்கப்பட்ட கொடி அல்ல. கடந்த  75 ஆண்டுகால உழைப்பாளி மக்களின் ரத்தத்தில் தோய்த்து எடுத்த கொடி.

சாதாரண  ஏழை, எளிய உழைப்பாளி மக்களுக்காக நாம் நடத்தியிருக்கின்ற  போராட்டங்கள் சாதாரணமானவை அல்ல. குறைந்தபட்ச கூலிச் சட்டம் சாதாரணமாக கொண்டுவரப்படவில்லை. அரைப்படி நெல் கூலி உயர்வுக்காக 44 உயிர்களைப் பலி கொடுத்த வெண்மணி தியாகிகளின் ரத்தத்தில் கொண்டுவரப்பட்டது இந்தச் சட்டம். தோழர்கள் பி.சீனிவாசராவ், அமிர்த லிங்கம், மணலி கந்தசாமி பி.எஸ்.தனுஷ்கோடி உள்ளிட்டோரின் மகத்தான போராட்டங்கள் காரணமாக பண்ணை அடிமை முறை ஒழிக்கப்பட்டது. குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.  புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இனாம் நிலப் பிரச்சனைக்காக பல வீரம்செறிந்த போராட்டங்களை நாம்  நடத்தியுள்ளோம். செங்கொடி தலைமை யிலான போராட்டத்தால்தான் தமிழ்நாட்டில்  இனாம் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 154 கிராமங்கள் இனாம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மீட்டுக்கொடுக்கப்பட்டது.

மோடி ஆட்சியில் சாதாரண மக்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பாவது இருக்கிறதா? மக்களிடம் வாங்கும் சக்தி இருக்கிறதா? மக்களி டம் வாங்கும் சக்தி இல்லாமல் எப்படி தொழில்  வளர்ச்சி ஏற்படும். மாற்று பொருளாதாரக் கொள்கை நாட்டில் வரும்பொழுதுதான் நாடு முன்னேற்றப் பாதையில் செல்லும். விவசாயத்தில் அனைத்துப் பணிகளுக்கும்  இயந்திரங்கள் வந்துவிட்டன. இதனால் கோடி க்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் வேலையின்றித் தவிக்கின்றனர்.  மேற்குவங்கம் போல, கேரளா போல,  திரிபுரா போல தமிழ்நாட்டில் நில உச்ச வரம்புச் சட்டத்தின் கீழ் நிலம் பகிர்ந்தளிக்கப் படவில்லை. டிரஸ்ட் என்ற பெயரில், வெறும் பெயருக்கு கோவில்களை உருவாக்கி அதை நிர்வகிக்கும் பொறுப்பு என்கிற பெயரில் தமிழ்நாட்டில் பெரும்பகுதியான நிலங்கள் ஏற்கனவே நிலம் வைத்திருந்தவர்கள் வசமே இருக்கின்றன. 

கோவில் நிலங்களை உழுபவருக்கு சொந்தமாக்குக!

6 தலைமுறையாக கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு இன்னமும் குடிமனைப் பட்டா கிடைக்கவில்லை. ஒரு கிராமமே கோவில் பெயரில் இருக்கிறது. அங்கு ஒரு  பள்ளிக்கூடம் கட்ட முடியவில்லை. மருத்துவ மனை கட்டமுடியவில்லை. கோவில், மடங்களுக்குச் சொந்தமான நிலங்களை உழுபவனுக்கே சொந்தமாக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குற்றவாளிகள் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்து ஈனச் செயலில் ஈடுபட்டது யாராக இருந்தாலும் உடனடியாக கைதுசெய்யப்பட வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த எல்லாவற்றையும் மாற்றி விட்டோம். ஆனால், சாதி மட்டும் இன்னமும் இந்த சமூகத்தை ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பொதுக்கூட்டத்திற்கு முன்பு செய்தி யாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: 

நிரந்தர வேலையின்றி விவசாயத் தொழிலாளர்கள் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக் கான குறைந்தபட்சக் கூலி கூட இல்லாத நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தநிலையில், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டம்  ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்கு வதற்கு வழி செய்தது. ஆனால், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு சராசரியாக 40 நாள் கூட வேலை வழங்குவதில்லை. இந்த நிலையில், அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட தொகையையும் குறைத்து ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். இது மேலும் இத்திட்டத்தை சீர்குலைக்கவே வழி செய்யும். எனவே, நிதி ஒதுக்கீட்டைக் குறைத்த நடவடிக்கையைக் கண்டித்து தமிழ்நாட்டில் ஒத்த கருத்துள்ள கட்சிகள், அமைப்புகளை இணைத்து போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். ஈரோடு இடைத்தேர்தலுக்காக அதிமுக வின் அணிகள் அனைத்தும் பாஜக தலை வர் அண்ணாமலையை சந்திக்கவே செல்கிறார்கள். அவர் அதிமுகவின் குருவா?  தற்போது நீதிமன்றம் ஒரு வழிக்காட்டி யிருக்கிறது. பொது வேட்பாளர் ஒருவரை நீதிமன்றம் சொன்னால் அனைத்துப் பிரிவின ரும் இணைந்து தொகுதிக்குள் சென்று வேலை செய்யப் போகிறார்களா? எனவே, அதிமுக இணைந்து செயல்படுவது சாத்தியமில்லை. தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆளுமை கலைஞர் கருணாநிதி. அவருக்கு ஏற்கெனவே ஒரு நினைவிடம் இருக்கிறது. இருந்தபோதும் இன்னொரு நினைவிடம் அமைப்பதில் தவ றில்லை. அந்த நினைவிடத்தை சர்ச்சைக் குள்ளாகாத வகையில் அமைக்க வேண்டும்’’ என்றார்.