ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன்!
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பேட்டி
திருச்சிராப்பள்ளி, மே 19- திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திங்களன்று ஸ்ரீரங்கம் அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. குறைந்த மருத்துவர்களைக் கொண்டு பல்வேறு சாதனைகளை செய்து, பிற மருத்துவமனைகளுக்கு முன்னோடியாக இருந்து வரும் இந்த மருத்துவமனையை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வேன். இந்த மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை போன்றவை உள்ளன. அதற்கு விரைவில் தீர்வு ஏற்படுவதற்குத் தேவையான நடவடிக்கைகளுக்கு துறைசார்ந்த அமைச்சர் மற்றும் அதிகாரிகளோடு கலந்து ஆலோசிக்கப்படும். இங்கு அறுவை சிகிச்சை செய்யும் அறைகள் இரண்டு இருந்தன. அதில் ஒன்று தற்போது பழுதாகி இருப்பதால் 50 சதவீத அறுவை சிகிச்சையாக இங்கு குறைந்துள்ளது. விரைவில் அந்த அறுவை சிகிச்சை அறையை மேம்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும். மருத்துவமனையில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளது. குறிப்பாக பிரசவ வார்டு பகுதிகளில் பாதுகாவலர்கள் இல்லை. குழந்தை திருட்டு போன்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் போதிய பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீரங்கத்தில் மின் துண்டிப்பு ஏற்பட்டால், மருத்துவமனைக்கு உடனடியாக ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் கிடைப்பதில் சிரமம் உள்ளது. ஆட்டோமேட்டிக் மின்மாற்றியை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நாடாளுமன்ற உறுப்பினராக எனது மேம்பாட்டு நிதியிலிருந்து என்னென்ன செய்ய முடியுமோ அதை அனைத்தையும் நிச்சயம் செய்து தருவேன். ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு எதிரே பேருந்து நிலையம் வர இருப்பதால் அதன் மூலம் பல்வேறு இடையூறுகள் மருத்துவமனைக்கு ஏற்படும். ஆகையால் நவீன கட்டமைப்புடன் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையை போக்குவரத்து இடையூறு இல்லாத பகுதிக்கு மாற்றம் செய்ய அமைச்சரிடம் வலியுறுத்த உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது மருத்துவர்கள் மற்றும் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, டி.டி.சி. சேரன், கவுன்சிலர் அப்பீஸ் முத்துக்குமார், திமுக பகுதிச் செயலாளர் ராம்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.