tamilnadu

img

தலைமைப் பண்பு இல்லாமல் அடுத்தடுத்து தவறுகள் தற்கொலை மிரட்டல் மூலமாகவே பாஜக கூட்டணியில் சேர வைத்தார்!

தலைமைப் பண்பு இல்லாமல் அடுத்தடுத்து தவறுகள் தற்கொலை மிரட்டல் மூலமாகவே பாஜக கூட்டணியில் சேர வைத்தார்!

அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

விழுப்புரம், மே 29 - பாஜக நிறுவனர் ராமதாஸ் - செயல் தலைவர் அன்புமணி இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை; அவரை 35 வயதில் ஒன்றிய அமைச்சராக்கி நான் தவறு செய்து விட்டேன்; அவர் வளர்த்த கிடா மார்பில் பாய்ந்த கதையாக, அன்புமணி எனக்கே எதிராக நடந்து வருகிறார்; கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கிறார்; 2024-இல் தற்கொலை மிரட்டல் விடுத்துத் தான், பாஜக-வோடு பாமகவை கூட்டணி சேர வைத்தார்; என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை ராமதாஸ், செய்தியாளர்கள் மத்தியில் போட்டு உடைத்துள்ளார்.  பாமகவிற்குள் தந்தை ராமதாஸ் - மகன் அன்புமணி இடையே, கடந்த 6 மாதங்களாகவே புகைச்சல் இருந்து வந்தது. டிசம்பர் 28 அன்று  நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் முதன்முறையாக இது வெளிச்சத் திற்கு வந்தது. பேரன் முகுந்தனுக்கு இளைஞரணி தலைவர் பதவியை ராம தாஸ் அறிவித்தபோது, மேடையி லேயே ராமதாசுக்கும் அன்புமணிக்கும் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக, ஏப்ரல் 10 அன்று பாமக தலைவர் பதவி யிலிருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், தன்னையே தலைவராக அறிவித்துக் கொண்டார். மே 11 அன்று நடைபெற்ற சித்திரை முழுநிலவு மாநாட்டில் மோதல் தீவிரமானது. அன்புமணிக்கு எச்சரிக்கை விடுத்து ராமதாஸ் தாக்கிப் பேசினார். இதை யடுத்து ராமதாஸ் கூட்டிய பாமக மாவட்டச் செயலாளர் கூட்டத்திற்கு அன்புமணி அழைக்கப்படவில்லை. அவரது ஆதரவு மாவட்டச் செயலாளர்களும் 7 பேர் கலந்து கொள்ளவில்லை. எனினும், ராமதாஸ் – அன்புமணி இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு சுமூகத் தீர்வுகாணப் படும் என பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி சமாளித்து வந்தார். இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், தைலாபுரத்தில் மே 29 அன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “தவறு செய்தது அன்புமணி அல்ல; 35 வயதில் அவரை ஒன்றிய அமைச்சராக்கி நான்தான் தவறு செய்துவிட்டேன். இதை ஆதாரத்துடன் ஒளிவு மறைவின்றி நடந்ததை அப்படியே வெளிப்படுத்துகிறேன். மேடை நாகரிகமற்ற அன்புமணி “கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் நடைபெற்ற பொதுக்குழுவில் என்ன நடந்தது என்று உலகமே பார்த்தது; வீட்டில் எனக்கு உதவியாகவும், கட்சியில் அன்புமணிக்கு உதவியாகவும் இளைஞர் அணித் தலைவராக முகுந்தனை நியமித்து அறிவிப்பு வெளியிட்டேன். சுவரில் வீசிய பந்து போல, உடனே மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தது சரியான செயலா? முகுந்தனை இளைஞர் சங்கத் தலைவராக அறிவித்தபோது மைக்கை தூக்கி டேபிளில் வீசியது சரியான செயலா? பொதுக்குழு மேடையில் என் தலை மீது அன்புமணி மைக்கை போடாதது தான் குறை. பாமக எனும் அழகான கட்சியை கண்ணாடி போல் ஒரேநாளில் நொறுக்கினார் அன்புமணி. அழகான, ஆளுயர கண்ணாடியான கட்சியை ஒரு நொடியில் உடைத்தார். தலைமைப் பண்பு இல்லை “பாமகவிற்கு அன்புமணி களங்கம் ஏற்படுத்திவிட்டார்; ‘வளர்த்த  கிடாவான அன்புமணி என் மார்பில் பாய்ந்து விட்டார். தலைமைப் பண்பு  அன்புமணிக்கு கொஞ்சம் கூட இல்லை. ஜி.கே. மணியின் மகன் தமிழ்  குமரனின் நியமனத்தை அன்புமணி கிழித்து போட்டார். வளர்த்த கிடாவே மார்பில் வீறுகொண்டு பாய்ந்ததில் நான் நிலைகுலைந்து போய்விட்டேன். அன்புமணி தொடர்ந்து கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து பல தவறுகளை செய்து வந்தார். பாஜக கூட்டணிக்காக மிரட்டல் 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேண்டும் என்று விரும்பினேன். அன்புமணியும், எடப்பாடி பழனிசாமியிடம் பேசி கூட்டணியை உறுதி செய்திருந்தார். அதிமுக - பாமக கூட்டணி என்பது இயல்பான கூட்டணி. இது அமைந்திருந்தால் பாமக 3, அதிமுக 7 இடங்களில் வென்றிருக்க கூடும். ஆனால், அன்புமணி மற்றும் சௌமியா இருவரும் திடீரென தைலாபுரம் வந்து பாஜக கூட்டணிதான் வேண்டும் என்று காலைப் பிடித்து அழுதனர். இருவரும் நீண்ட நேரம் அழுததால் என்னால் வேறு ஒன்றும் செய்ய இயல வில்லை. மேலும், பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்றால் நீங்கள்தான் எனக்கு கொள்ளி போட வேண்டும் என்று அன்புமணி கூறினார். அனுதாப நாடகம் ஆடுகிறார் கட்சியில் யாருடைய ஆலோசனைகளையும் அன்புமணி ஒருநாளும் ஏற்றதே இல்லை. பனையூர் அலுவலகத்தில் என்னை வந்துபாருங்கள் என்று அன்புமணி கூறியது சரியா? 4 சுவற்றுக்குள் பேச வேண்டிய விஷயத்தை நடுவீதிக்கு கொண்டு வந்தது யார்? பாமக வளர்ச்சிக்கு இடையூறாக பல தவறுகளை அன்புமணி செய்தார்; தன் தாயின் மீதே பாட்டிலை தூக்கி அடித்தவர் அன்புமணி. அனைத்தையும் செய்து விட்டு, தான் செய்த செயலை மறைத்து கட்சியினரிடமும், மக்களிடமும் அனுதாபம் பெற அன்புமணி முயற்சி செய்கிறார். என்னை குற்றவாளியாக்கி அனுதாபம் தேடப் பார்க்கிறார். இவ்வாறு ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

முகுந்தன் பதவி விலகல்  

ராமதாஸின் இந்த செய்தியாளர் சந்திப்பு முடிந்த சில மணி நேரத்தில், பாட்டாளி இளைஞர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக- ராமதாஸின் பேரன் முகுந்தன் அறிவித்தார். இதுகுறித்து பாமக செயல் தலைவர் என்று அன்புமணிக்கு கடிதம் எழுதிய முகுந்தன், “பாமக இளைஞரணியான பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவராக கடந்த 2024 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டேன். சொந்த காரணங்களுக்காக அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.