tamilnadu

img

அரசே மணல் குவாரிகளைத் திறக்க வேண்டும்

கிரஷர் உரிமையாளர்கள், செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலையை ஏற்றுவதால், அரசே மணல் குவாரிகளைத் தொடங்கி நடத்த வேண்டும் என்றார். தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளன மாநிலத் தலைவர் செல்ல ராஜாமணி.  புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கிரஷர்களில் இருந்து பொருட்களை ஏற்றிச் செல்லும்போது அதற்கான போக்குவரத்து பாஸ், அரசு இலவசமாக வழங்கும் நிலையில், கிரஷர் உரிமையாளர்கள் ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் பெற்றுக் கொண்டு வழங்குகின்றனர் எனப் புகார் எழுந்தது. இதனைக் கண்டித்து கடந்த பிப். 10 ஆம் தேதி முதல் புதுக்கோட்டையில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  இந்நிலையில், திங்கள்கிழமை லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் செல்ல ராஜாமணி தலைமை வகித்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மு.அருணாவை, லாரி உரிமையாளர் சங்கத்தினர் சந்தித்து புகார் தெரிவித்தனர். கிரஷர்களில் போக்குவரத்து பாஸ் கட்டணமின்றி வழங்க அறிவுறுத்தப்படும் என்றும், தொடர்ந்து கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த வேலைநிறுத்தப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்ல ராஜாமணி, தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகள் செயல்படவில்லை. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, கிரஷர் குவாரிகளில் உற்பத்தி செய்யப்படும் கட்டுமானப் பொருட்களின் விலையை உயர்த்தும் நோக்கில் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனர். இதனால், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்குத் தீர்வு காண வேண்டுமானால், அரசே மணல் குவாரிகளைத் திறந்து நடத்த வேண்டும். சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.