தஞ்சாவூர், மே 29 - தஞ்சை அருகே பலத்த மழையால் சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதால் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கோடை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து காணப்படுகிறது. மேலும் குறுவை சாகுபடிக்கான பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மே 26 அன்று தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. மாலையில் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. இந்த மழை காரணமாக தஞ்சையை அடுத்த ராராமுத்திரக் கோட்டை கிராமத்தில் கோடைப் பருவ நெற்பயிர்கள் கதிர் வந்த நிலையில், பலத்த மழையால் சாய்ந்து சேத மடைந்தன. இதன் காரணமாக ஏறத்தாழ 200 ஏக்கரில் கோடை பருவ நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல, அம்மாப்பேட்டை பகுதியிலும் கதிர் முற்றி அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், ஏராளமான ஏக்கரில் நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் கூறுகையில், ‘‘பாதிக்கப்பட்ட பயிர்களை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து விவ சாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.