தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கம் 7ஆவது திரைப்பட விழாவில் புதுக்கோட்டையில் திரையிடப்பட்ட படம் “கூழாங்கல்”. இதன் இயக்குநர் வினோத்ராஜ் மற்றும் கலை ஞர்கள் திரைத்துறைக்குப் புதியவர்கள்; ஆனால் இவர்களது “கூழாங்கல்” கலை நேர்த்தியிலும் கதைசொல்லும் முறையி லும் தமிழ்த் திரைத்துறைக்கு முற்றிலும் புதிய படம். மக்களின் மலின ரசனைக்குத் தீனி போட்டுக் கல்லாக்கட்டும் வணிக சினிமா ஒருபுறம்; தனிமனிதப் பிரச்னை களைக் கலைநேர்த்தியுடன் முன்வைத்து பரிவுணர்ச்சி, நம்பிக்கையின்மையைத் தூண்டுவதோடு நின்று கொண்டு கலைப் படம் என்று பீற்றிக்கொள்ளும் படங்கள் மறுபுறம்.
“கூழாங்கல்” ஒரு குடும்பப் பிரச் னையை முன்வைக்கிறது; ஆனால் கதையின் உள்ளடுக்கில் பற்றிப் புகைந்து கொண்டிருக்குக்கும் சமகால சமூகப் பிரச்சனையைத் தொட்டுக் காட்டுகிறது; அரசு நிர்வாகத்தின் கோளாறுகளையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சமூகப் போராளிகளுக்குக் கலை ஒரு ஆயுதம்; அது ஐயனார்கோவில் வெட்டரி வாள் போன்றதல்ல; அது மின்னாமல் முழங்காமல் தாக்கும் உயர்தொழில்நுட்ப ஆயுதம் போன்றது என்பதற்கு எடுத்துக்காட் டான படம் “கூழாங்கல்.” கவிதை பெரிதும் படிமங்களால் ஆனது; திரைப்படம் கவிதை மொழியைத் தழுவிய காட்சிமொழியால் ஆனது. தமிழ் இலக்கியங்கள் நிலம், பொழுது என்ற கருப்பொருளையும் தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் என்ற உரிப்பொருளையும் பின்னணியாகக் கொண்டு பொருள் விளக்குவன. 70 நிமிடங்கள் ஓடும் “கூழாங்கல்” வசனங்களைச் சில நிமிடங்களில் முழுவதுமாகச் சொல்லிவிட முடியும். ஆனால் முழுப்படக் கதையையும் நீரற்று வறண்ட பாழ்நிலவெளியும் தகிக்கும் கோடையும்தான் விவரிக்கின்றன.கூடவே எலிகளைப் பிடித்துச் சுட்டுத்தின்று பசியாறும் வறிய மக்களின் காட்சி பார்வை யாளர் அடிவயிற்றில் பனிக்கட்டியெனச் சுடுகிறது.
பட்டினத்தார் கைக்கரும்பாக, கசப்பும் வெறுப்பும் கொண்டவர் களையும் கனிவு கொண்ட மனிதர்களையும் ஒருசேர (juxtaposition) வைத்து கூழாங்கல் கதை சொல்கிறது. படத்தின் நாயகன் ஏழை அல்ல; ஆனால் குடிகாரன்; மூர்க்கன். சண்டை உக்கிரமடையும் போதெல்லாம் மனைவி கோபித்துக்கொண்டு் தம்பி வீட்டுக்குப் போவது தொடர்கதை. “கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப்போனாளாம்; அங்கே ஒருகொடுமை நின்று ஆடியதாம்” என்பது போல பிறந்தவீட்டில் நாத்தனார் அனல் காட்டுகிறாள்.
மனைவியுடன் பேசுவதற்காக என்றே பள்ளிக்கூடத்திலிருந்த தன் மகனை அந்தக் குடிகாரத் தகப்பன் இழுத்துப் போகிறான். போகும்போது சிற்றுந்துப் பயணம். போன இடத்தில் மச்சினனுடன் சட்டை கிழிபடக் கைகலப்பாகிறது. அப்பன் மீதான ஆத்திரத்தில் ரூபாய் நோட்டை சிறுவன் கிழித்தெறிய கையில் காசின்றி உச்சி வெயிலில் அப்பனும் மகனும் கால்நடையாய் ஊர்திரும்புகிறார்கள். நடையான நடை; அது கேமராவின் கவிதை நடை. இவர்கள் இருவரும் இந்தப்பாத்திரப் படைப்புக்கெனச் செதுக்கிச் செய்தது போன்ற நடிகர்கள். பள்ளி ஆசிரியை சிறுவனை மொபட்டில் ஏற்றிக்கொள்ளும் பரிவு; இத்தனை கொடுமைகளுக்கும் இடையே யும் தன் தங்கைக்கு ஒரு பொம்மையைக் கொண்டுவந்து கொடுக்கும் சிறுவனின் பாசம்; பசியிலும் தாகத்திலும் வந்துசேர்ந்த தகப்பன் ஒருசெம்புத் தண்ணீரை மண்டு கிறான்.அவசரகதியில் சோற்றை அள்ளிப் போட்டு விழுங்குகிறான்.அப்போது தயங்கியபடி வரும் மகனைப் பார்க்கை யில் முரடனான அவன் மனதிலும் குற்ற வுணர்ச்சி எழுகிறது.கையிலெடுத்த சோற்றுக் கவளம் வாய்க்குப் போக வில்லை. பாலை நிலத்தின்பசுமைக் காட்சிகள் இவை.
“குடி குடிகெடுக்கிறது” என்பதைக் கதை கோடிட்டுக் காட்டும் அதேவேளை ஒருகுடம் தண்ணீருக்கு ஊற்றுப் ப்போட்டு அகப்பையில் சேந்த பதுமை களாய்க் காத்திருக்கும் பெண்களைக் காண்கிறோம்.நிலவுக்கு மனிதனை அனுப்பும்திட்டங்கள்.இங்கே குடிநீருக்கு இலவுகாத்த கிளியென மக்கள். நல்ல நகைமுரண். “கிளக்” “கிளக்” என்று நீர்க்குடங்கள் மெதுவாக நிரம்புகிற சப்தமும் தொண்டை அடைத்த பார்வையாளர்கள் மிடறு விழுங்கும் சப்தமும் ஒன்றாக படம் நிறை வடைகிறது.