tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

செந்துறையில்  2 ஆவது நாளாக  ஆட்சியர் கள ஆய்வு

அரியலூர், ஜுன் 27-  அரியலூர் மாவட்டம் செந்துறை வருவாய் வட்டத்தில் 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில், பல்வேறு அரசு அலுவலகங்களில் ஆட்சியர் பொ.ரத்தினசாமி கள ஆய்வு  மேற்கொண்டார். ஆனந்தவாடி, ஆ. சோழன்குறிச்சி, உஞ்சினி, நல்லம்பாளையம், திடீர்குப்பம் உள்ளிட்ட கிராமங்களிலுள்ள அரசுப் பள்ளிகள், ஊராட்சிமன்ற அலுவலகங்கள், நியாய விலைக் கடைகள், மேல்நிலை ஆகியவற்றை பார்வையிட்ட அவர், அங்குள்ள பதிவேடுகளை ஆய்வு செய்தார். பின்னர், திடீர்குப்பம் பகுதியிலுள்ள மாணவியர் நல விடுதிக்கு சென்று, உணவு தயாரிக்கும் சமையல் கூடங்கள், விடுதியில் தங்கி பயிலும் மாணவியர்களின் எண்ணிக்கை, கழிவறைகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, மாணவியர்களுக்கு தொடர்ந்து உணவினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாரித்து போதிய அளவில் வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தினார்.ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரா.சிவராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மின் கணக்கீடு  இயந்திரம் பொருத்த  லஞ்சம்: மின் ஊழியர் கைது

அரியலூர், ஜுன் 27-  அரியலூர் மாட்டம் பெரிய திருக்கோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவர், தனது புதிய வீட்டுக்கு மின் கணக்கீடு இயந்திரம்(மீட்டர் பாக்ஸ்) பொருத்துவதற்கு, தேளூர் துணை மின் நிலைய வணிக உதவியாளர் மு. சாமிநாதன்(46) என்பவரை அண்மையில் அணுகியபோது, அவர் ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத வீரமுத்து, மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல் துறையில் புகார் அளித்தார். இதையடுத்து, காவல் துறையினர் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய ரூ.500 பணத் தாளை பெற்றுக் கொண்ட வீரமுத்து, அதனை மின் வணிக உதவியாளர் சாமிநாதனிடம் வியாழக்கிழமை கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ஹேமசித்ரா தலைமையிலான காவல் துறையினர், சாமிநாதனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் லஞ்சம் பெற்றது உறுதியானது. இதையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ரயில் முன் பாய்ந்து  வாலிபர் தற்கொலை

குழித்துறை ,ஜூன் 27- மார்த்தாண்டம் அருகே ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். மேல்பாலை மாங்காலை பகுதியைச் சேர்ந்த சுதர்சன் இவரது மகன் சிவ பிரசாத் 34 பெயிண்டர் கடன் தொல்லையில் அவதிப்பட்டு வந்தார் சிவபிரசாத் வீட்டில் அடிக்கடி பணம் கேட்டு வந்தார் பெற்றோர் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்து வந்தனர். இதனால் மனமுடைந்த சிவப்பிரசாத்  குழித்துறை ரயில் நிலையம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வேலைவாய்ப்பு முகாம்:  அரியலூரில் பிரச்சார  வாகனம் தொடக்கி வைப்பு

அரியலூர், ஜுன் 27-  பெரம்பலூர், அரியலூர் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் பெரம்பலூர் அருகேயுள்ள  மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை  நடைபெறவுள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்து அரியலூரில் பிரச்சார வாகனம் வியாழக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியர் பொ. ரத்தினசாமி, அரியலூர் மாவட்ட மக்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமை அறிந்து கொள்ளும் வகையில், பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடக்கி வைத்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சாகுல் ஹமீது, வட்டாட்சியர் முத்துலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில்  முதிர்வுத்தொகை பெறாதவர்கள்  விபரம் இணையத்தில் பதிவேற்றம்

தஞ்சாவூர், ஜுன் 27-   தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, 18 வயது பூர்த்தியடைந்தும் முதிர்வுத்தொகை பெறாத தகுதியான பெண் குழந்தைகளின் விவரம், சமூக நல ஆணையரகத்திடமிருந்து 3 பட்டியல்களாக வரப்பெற்று, http://thanjavur.nic.in என்ற தஞ்சாவூர் மாவட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  எனவே, இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பெண் குழந்தை பயனாளிகள், தங்களது அசல் வைப்புத்தொகை ரசீது, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், பயனாளியின் வங்கி கணக்கு புத்தகம் நகல் மற்றும் பயனாளியின் புகைப்படம் ஆகியவற்றுடன், மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு முதிர்வுத்தொகை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

பைக் மோதி வியாபாரி பலி

தஞ்சாவூர், ஜுன் 27-  தஞ்சை கோரிக்குளம் பனங்காட்டைச் சேர்ந்த சத்யராஜ்(37) என்ற வியாபாரி, சம்பவத்தன்று தஞ்சை வண்டிக்காரத் தெரு நாகை சாலையோரம் காய்கறி வாங்கினார். பின்னர் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த தனது மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது.  இதில் தூக்கிவீசப்பட்ட சத்யராஜ் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்யராஜ் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தஞ்சை நகர போக்குவரத்துப் பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்