tamilnadu

img

கே.வி.ஆலங்குளத்தில் சாதி ஆதிக்க கும்பல் அருந்ததிய இளைஞர் மீது தாக்குதல்

கே.வி.ஆலங்குளத்தில் சாதி ஆதிக்க கும்பல்  அருந்ததிய இளைஞர் மீது தாக்குதல்

சிபிஎம், தீ.ஒ.முன்னணி கண்டனம் - கைது செய்யக் கோரிக்கை

தென்காசி, ஜூன் 22- தென்காசி மாவட்டம், கே.வி.ஆலங்குளத்தில் சாதி ஆதிக்க கும்பல்  அருந்ததிய இளைஞர் மீது தாக்குதல்  நடத்தியுள்ளது. இச்சம்பவத்தை கண்டித்துள்ள சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.           தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கே.வி.ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த சண்முகம்-மாரியம்மாள் தம்பதியரின் மகன் பூபதி, பட்டியலின அருந்ததி யர் வகுப்பைச் சேர்ந்தவர். இவர் ஜூன் 20 வெள்ளியன்று இரவு புளியங்குடியில் இருந்து கே.வி.ஆலங்குளத்திற்கு ஆட்டோவில் வந்து இறங்கியுள்ளார்.பின்னர் ஊருக்குள் செல்ல தெரு வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது சாதி ஆதிக்கப் பிரிவைச் சேர்ந்த கருப்பையா என்பவர், பூபதி யிடம், இந்நேரம் உனக்கு தெரு வழியா என்ன வேலை? நீ யாருடைய பையன் என கேட்டுள்ளார். அதற்கு பூபதி, அண்ணா நான் மாரியம்மாள் மகன் எனக் கூறியுள்ளார்.  அதற்கு கருப்பையா,  அண்ணா என்று யாரை கூப்பிடுகிறாய். நீ என் கூட பிறந்தவனா, உன் அப்பா, அம்மா என் கூட பிறந்தாங்களா  என சாதியைச் சொல்லி  திட்டியதோடு மட்டுமல்லாமல், வேறு சில நபர்களை அழைத்துக்கொண்டு பூபதியை கடுமையாக தாக்கி யுள்ளனர். இதனால் பூபதிக்கு காது, மூக்கு வழியாக ரத்தம் வந்துள்ளது. இதனை அறிந்த பூபதியின் பெற் றோர் உடனடியாக அவரை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சேர்ந்தமரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிபிஎம்,தீ.ஒ.முன்னணி நேரில் ஆறுதல்

பாதிக்கப்பட்ட பூபதியை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் அசோக் ராஜ், மாவட்ட துணைச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உ.முத்துப்பாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினர் செல்வின், சங்கரன்கோவில் வட்டாரக்குழு உறுப்பினர் செந்தில் ஆகியோர் நேரில் சந்தித்து,நடந்த விபரங்களைக் கேட்டறிந்து, ஆறுதல் கூறினர். பூபதியை தாக்கிய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, தாக்கியவர்களை எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.