tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

தனியார் பேருந்து மோதி பைக்கில் சென்றவர் பலி

தஞ்சாவூர், தெற்கு வீதி மாட்டுமேஸ்திரி சந்து பகுதியை சேர்ந்தவர் நரசராம்பட்டேல் (45). இவர், அப்பகுதியில் மின்சாதன பொருட்கள் விற்பனை கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில், சனிக்கிழமை பட்டுக்கோட்டைக்கு தனது பைக்கில், நரசராம்பட்டேல் சென்றார். பின்னர் மீண்டும் தஞ்சாவூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது, புதுப்பட்டினம் பிரிவு சாலை பகுதியில், முன்னால் சென்ற காரை முந்திச் செல்ல முயன்றார். அப்போது, தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்று கொண்டு இருந்த மீரா என்ற தனியார் பேருந்து, பைக் மீது மோதியது. இதில் நரசராம்பட்டேல் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார்.  இதுகுறித்து தகவலறிந்த தாலுகா காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நரசராம்பட்டேல் உடலை கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். மேலும், தப்பியோடிய தனியார் பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்

ஆமணக்கு காயை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

அய்யம்பேட்டை அருகே, காவலூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.  இந்தப் பள்ளியில் இதே ஊரைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் மகன்கள் ஹரிவரதன்(6), ஹரித்(8), மகாதேவன் மகன்கள் தாவிதன்(8), தர்ஷிதன்(6), அய்யா பிள்ளை மகன் ராகுல்(9),கணேசன் மகன் ராஜேஷ்(8 ) ஆகியோர், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை, இவர்கள் பள்ளிக்கு அருகில் இருந்த ஆமணக்கு காயை சாப்பிட்டதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படவே, மெலட்டூரில்  உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். பின்னர், அவர்களுக்கு மீண்டும் வாந்தி, மயக்கம் ஏற்படவே, ஹரிவர்தன், ஹரித், தாவிதன், தர்ஷிதன், ராகுல் ஆகிய 5 மாணவர்கள் தஞ்சாவூர் ராஜா மிராசுதார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அய்யம்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.