tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மேல்மங்கலம்  ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளியில்  ஆண்டு விழா

அறந்தாங்கி, ஏப்.27-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மேல்மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.  இந்த ஆண்டு விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் இங்கர்சால் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அறந்தாங்கி வட்டாரக் கல்வி அலுவலர் நடராஜன் கலந்து கொண்டு  இப்பள்ளியில் 1330 திருக்குறள் பயின்று, வரும் கல்வி ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடைபெற இருக்கும் திருக்குறள் போட்டியில் தேர்வாக உள்ள ஐந்து மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் கேடயம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் எஸ்.எம்.சி உறுப்பினர்கள், பிடிஏ நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள், பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நான்கு வழிச்சாலைக்கான பணிகளால்  புத்தேரி பகுதியில்   போக்குவரத்து மாற்றம்

நாகர்கோவில். ஏப். 26- நாகர்கோவில், புத்தேரி பகுதியில் நான்கு வழிச் சாலைப் பணிகள் நடப்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் விபத்துக்கள் நிகழும் அபாயம் உள்ளது. சாலைப்பணிகள் நடைபெறுகின்ற கீழ புத்தேரி பகுதியில் கனிமங்களை ஏற்றிச்செல்லும்  கனரக வாகனங்கள் செல்லும் இரு வழிப்பாதை மேம்பால பணி நடைபெறுகிறது. இதனால் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் காலை 6 மணி முதல் தினசரி இந்த வழியாக செல்லும் வாகனங்கள் மற்றும் கனிம வளங்கள்  ஏற்றிச் செல்லும் வாகனங்கள் இடையே விபத்துக்கள் நிகழும்  சூழ்நிலை உருவாகி வருகிறது. இதுதொடர்பாக  பல்வேறு  கோரிக்கை மனுக்கள் அளித்து, அறவழிப் போராட்டங்கள் நடத்தப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விபத்துகளை தவிர்க்க அரசும் மாவட்ட நிர்வாகமும்  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குமரியிலிருந்து வட்டக்கோட்டைக்கு  சொகுசு படகு சேவை  மீண்டும் துவக்கம்

நாகர்கோவில், ஏப்.27- கன்னியாகுமரியிலிருந்து வட்டக் கோட்டைக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சொகுசு படகு சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது. 75 பயணிகளை ஏற்றிச் செல்லும் இந்த குளிரூட்டப்பட்ட படகு, ஒரு மணி நேர கடல் பயணத்தை வழங்குகிறது. 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க வட்டக் கோட்டையை ரசிக்கலாம். ஒரு நபருக்கு ரூ.450 கட்டணத்தில்,  கடல் அழகையும், பழமையான கோட்டையையும் அனுபவிக்கலாம். சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு அற்புத அனுபவமாக அமையும் என்று பயணிகள் தெரிவிக்கின்றனர்.