tamilnadu

img

உழைக்கும் மக்கள் அனைவரும் ஆதிகுடிகளே: சீமானுக்கு பதிலடி

சென்னை, மார்ச் 9- தலித் அருந்ததியர் மக்களை ‘வந்தேறிகள்’ என சீமான்  கூறியதற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் வாழ்கிற தலித் அருந்ததியர் மக்களில் 100 விழுக்காட்டினர் உழைக்கும் மக்களே. வேளாண்மை, கட்டிடத் தொழில், முறைசாராத் தொழில்கள் போன்ற துறை களில் தங்களது இணையற்ற உழைப்பின் மூலமாக தமிழ்நாட்டை வளப்படுத்திக் கொண்டிருக்கிற உழைப்பாளி மக்கள் தலித் அருந்ததியர் மக்கள்.  கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கத்திற்கு எதிரான குறுநில மன்னர்களின் படையெடுப்புகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் என்பதற்கு ஒண்டிவீரன், கந்தன் பகடை, முத்தன் பகடை, பொட்டிப் பகடை போன்ற மாவீரர்களின் பெயர்கள் இன்றைக்கும் வரலாற்றுத் தடமாக இருக்கிறது. 1947 தேச விடுதலையின்போது அன்றைய சென்னை ராஜதானி என்று அழைக்கப்பட்ட இன்றைய தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் வாழ்ந்த வர்கள், 1956 நவம்பரில் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதும் தமிழ்நாட்டின் நிலப் பரப்பில் வாழ்ந்தவர்கள்.1967ல் தமிழ்நாடு என்று  பெயர் வைக்கப்பட்டபோதும் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்கள். எனவே, தமிழ்நாட்டின் மிக நீண்ட வரலாற்றுப் பயணத்தில் இணைந்து நிற்பவர்கள் அருந்ததியர்கள் எனும் உழைக்கும் ஆதி குடிகள்.

இம்மக்கள் மீது வன்மம் கொண்டு ‘வந்தேறிகள்’ என நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் பேசி வருவது கண்டிக்கத் தக்கது.  உணர்ச்சிவசத்தினாலோ தெரியாமலோ சீமான்  இவ்வாறு தெரிவித்ததாக கருதிவிட முடியாது.   மாநில உரிமை, மக்களின் நல்வாழ்வு போன்ற நேர்மையான அரசியல் விழுமியங் களில் அக்கறை கொண்டுள்ள பகுத்தறிவு முற்போக்கு அரசியல் சிந்தனை கொண்ட வர்களைக் கவர்ந்து, குறிப்பாக பாஜக-விற்கு  எதிரான வாக்குகளை சிதறடிப்பதே தமிழ்நாட்டில் நாம் தமிழர் செய்துகொண்டிருக்கிற அரசியல் பணி என்பது தான் உண்மை.  பாரதிய ஜனதா கட்சி பேசிவருகிற போலி இந்து தேசியத்தால், இந்து மதத்தை பின்பற்றுகிற உழைப்பாளி மக்கள் எள் முனையளவும் பயனடைந்துவிடமுடியாது. அதே போல் தான் நாம் தமிழர் இயக்கம் பேசிவருகிற போலி தமிழ்த் தேசியத்தாலும் தமிழ்நாட்டு உழைப்பாளி மக்கள் பயனடைந்து விட முடியாது. பாஜகவின் இந்து தேசியமும் நாம் தமிழரின் தமிழ்த் தேசியமும் போலியானது என்பது மட்டுமல்ல, அவை இரண்டும் கைகோர்த்து, உழைக்கும் மக்களை வஞ்சித்து வருகின்றன என்பதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  பாரதிய ஜனதா கட்சியின் அரசியலை தமிழ்நாட்டில் நிலைநிறுத்துவதற்கு சீமான் முயன்றுவருகிறார் என்கிற அரசியல் புரிதலோடு, நாம் தமிழர் இயக்கத்தை தமிழ்நாட்டு இளைஞர்கள் புறக்கணித்திடவேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழகத்து இளைஞர்களை கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.