அதிமுக வெளிநடப்பு
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (ஏப்.4) கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரத்தில், ஒரு பிரச்சனை குறித்து எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர முயன்றார். இந்த பொருள் குறித்து ஏற்கனவே துணைத் தலைவர் எழுப்பினார். அப்போது மறுத்துவிட்டேன். அன்றைக்கு நீங்கள் வரவில்லை. மீண்டும் அதுகுறித்து பேச முடியாது என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு அனுமதி மறுத்தார். அப்போது, அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பி எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து வெளிநடப்பு செய்வதாக கூறிய எடப்பாடி பழனிசாமி பேரவையில் இருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து, அதிமுகவினர் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்யவில்லை.
பேரவையில் எதிரொலித்த ‘ எம்புரான்’
மலையாளத் திரைப்படமான ‘ எம்புரான்’ படத்திற்கு ஆதரவு தெரிவித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் , ‘நாடு இதுவரை கண்டிராத மிகக் கொடூரமான இனப்படுகொலைகளில் ஒன்று 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரம்’ என குறிப்பிடுவதால் சங் பரிவார் தலைவர்கள் கோபமடைந்துள்ளனர் என்று பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்து சில சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றிருப்பதால் தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அந்த காட்சிகள் நீக்கப்பட்டன. இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் ‘எல்2 எம்புரான்’ பட சர்ச்சை காட்சிகள் குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்கையில், “அந்தக் காட்சி சென்சாரில் கட் செய்யவில்லை. படம் வெளியே வந்த பிறகு இந்த செய்தி வெளியே வந்து, அதன் பிறகு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது பின்பு தான் அந்தக் காட்சி நீக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
மூக்கையா தேவருக்கு மணிமண்டபம்
“அகில இந்திய பார்வர்டு பிளாக் தலைவர் பி.கே.மூக்கையா தேவருக்கு 103-ஆவது பிறந்தநாள். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் 1923-ஆம் ஆண்டு ஏப்ரலில் பிறந்தவர். இளம் வயதில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நம்பிக்கையைப் பெற்று பார்வர்ட் பிளாக் கட்சியில் இணைந்தார். சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் 1952-ஆம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அதன்பிறகு 1957, 1962, 1967, 1971, 1977 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து உசிலம்பட்டி தொகுதியில் வெற்றி வாகை சூடினார். 1971-ஆம் ஆண்டு இராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர். அவரை சிறப்பிக்கும் வகையில், உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும்”என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார்.
சேலம் - கொச்சி சாலை விரிவாக்கப்படுமா?
கேள்வி நேரத்தில், சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் எல் அண்ட் டி (பைபாஸ் சாலை) விரிவாக்கம் செய்யப்படுமா? என்று சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர். ஈஸ்வரன் எழுப்பிய வினாவுக்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு,“இந்த சாலை தொடர்பாக எல் அண்ட் டி நிறுவனத்திடம் 2032 வரை சாலை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 6 இடங்களில் எல் அண்ட் டி நிறுவனம் சுங்க கட்டணம் வசூலித்து வருகிறது.இந்த சாலையை அரசுக்கு வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் எல் அண்ட் டி நிறுவனம் பணம் கேட்டுள்ளனர். ரூ.199 கோடியை ஒன்றிய அரசிடம் இந்த வாரம் ஒப்படைத்ததும் சாலை பெறப்படும். அதன் பின் ஒன்றிய அரசு தமிழக அரசிடம் வழங்கினால் நாம் பணிகளை தொடருவோம், இல்லையெனில் ஒன்றிய அரசே பணி மேற்கொள்ள வலியுறுத்தப்படும்”என்றார்.
கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை
திமுகவின் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், “கொடைக்கானலில் நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வார இறுதி நாட்களில் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் மாற்றுப்பாதை அமைக்கும் பணி எந்த அளவில் உள்ளது”என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் எ.வ.வேலு, “கொடைக்கானலுக்கு இந்தியா முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கிறார்கள். அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்கு, மாற்றுப்பாதைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணிகள் முடிந்தவுடன் முதலமைச்சர் அனுமதி பெற்று மாற்றுப்பாதை அமைக்கும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்”என்று பதிலளித்தார்.
கலப்படமற்ற ஆவின் பால் : அமைச்சர்
பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், “தமிழ்நாடு அரசின் ஆவின் பால், பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, கலப்படமற்ற என்ற சான்று பெற்ற பிறகே, விற்பனைக்கு செல்கிறது. தற்போது உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி, உற்பத்தியாளர்கள் பயன்பெறுகிறார்கள். வங்கிக் கணக்கில் ஊக்கத்தொகை வழங்கப்படுகின்றன. எனவே, இடைத்தரகர்கள் சிக்கல் இல்லை, ஊழலுக்கும் வழியில்லை. தமிழ்நாட்டில் மிகக்குறைந்த விலையில் பால் விநியோகம் செய்யும் ஒரே நிறுவனம், ஆவின் நிறுவனம். இந்த நிறுவனத்தின் சார்பில் ரூ.560 கோடிக்கு மேல், உற்பத்தி பொருட்கள் விற்பனையாகிறது. அதில் பால்கோவா, பன்னீர், மோர், இனிப்பு, ரொட்டி, ஐஸ்கிரீம் போன்றவை அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. ரூ.10 கோடி மதிப்பீட்டில் பால் மற்றும் பால் உப பொருட்கள் விற்பனையை அதிகரிக்க 500 ஆவின் பாலகங்கள் புதிதாக தொடங்கப்படும். விழுப்புரம், வேலூர், மாதவரம் ஆகிய இடங்களில் உள்ள பயிற்சி நிலையங்களில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு நுண்கடன் வழங்கும் திட்டத்தில் வெண் நிதி திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் 23 அறிவிப்புகளையும் புதிதாக வெளியிட்டார்.