tamilnadu

img

தெரு ஓரத்தில் ஒரு குட்டி நாய் - உதயசங்கர்

தெருவின் ஓரத்தில் ஒரு குட்டி நாய் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அதன் குட்டி வால் தானாக ஆடிக் கொண்டிருந்தது. கார், பைக், சைக்கிள், எல்லாம் வேக வேகமாகப் போய்க் கொண்டிருந்தன. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், எல்லோரும் அவசர அவசரமாகப் போய்க் கொண்டிருந்தனர். குட்டி நாய் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தது. வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் மேலே கீழே

முதலில் வேடிக்கையாகத் தான் இருந்தது. பிறகு கழுத்து வலிக்கத் தொடங்கியது. கொஞ்சநேரம் அமைதியாக நேரே பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் முடியவில்லை. மறுபடியும் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்க்கத் தொடங்கியது. குட்டி நாயை யாரும் பார்க்கவில்லை. அந்தக் குட்டி நாய் எங்கே இருந்து வந்தது? யாருக்கும் தெரியாது. அந்தக் குட்டி நாய் எப்படி வந்தது? யாருக்கும் தெரியாது. அந்தக் குட்டி நாய் எதற்காக அங்கே உட்கார்ந்திருக்கிறது? யாருக்கும் தெரியாது. அந்தக் குட்டி நாய் எங்கே தங்கியிருக்கிறது? யாருக்கும் தெரியாது. அந்தக் குட்டி நாய் சாப்பிட்டதா? யாருக்கும் தெரியாது. எங்கோ பிறந்தது. எப்படியோ வளர்ந்தது. எதை எதையோ சாப்பிட்டது. யாரும் அதைத் தொட்டதில்லை. யாரும் அதற்கு உணவு போட்டதில்லை. யாரும் அதன் தலையைத் தடவிக் கொடுத்ததில்லை. யாரும் அன்பாக ஒரு வார்த்தை சொன்னதில்லை.

த்தோ த்தோ த்தோ என்று யாரும் அழைத்ததில்லை. ஏன்? அந்தக் குட்டி நாய்க்கே தெரியாது.  தெருவின் அந்தப் பக்கம் ஒரு பூனைக்குட்டி போனது. பௌவ் பௌவ் பௌவ் பௌவ் குட்டி நாய் குரைத்தது. குட்டி நாயின் பௌவ் பௌவ்வைக் கேட்ட பூனைக்குட்டி “ மியாவ் மியாவ் மியாவ் மியாவ்..” என்று கத்தியது. வண்டிகளின் சத்தத்தில் பூனைக்குட்டி யின் சத்தம் கேட்கவில்லை. பூனைக்குட்டி ஓடி விட்டது. அந்தப் பக்கம் போனால் என்ன? நாய்க்குட்டி யோசித்தது.  ஏன் தான் இவ்வளவு இரைச்சல் போட்டுக் கொண்டு வண்டிகள் ஓடுகின்றன?

குட்டி நாய்க்குப் புரியவில்லை. குட்டி நாய் அப்படியே கீழே உட்கார்ந்து யோசிக்கத் தொடங்கியது. யாருமே அதைப் பார்க்கவில்லை. குட்டி நாய்க்கு வருத்தமாக இருந்தது. அது தன்னைக் கடந்து போகிறவர் களைப் பார்த்து பௌவ் பௌவ் என்று கீச்சிட்டது. யாரும் தலையைத் திருப்பிக் கூடப் பார்க்கவில்லை. அப்போது பையன் முதுகில் பள்ளிக் கூடப்பையைச் சுமந்து கொண்டு வந்தான். அவன் எந்த அவசர மும் இல்லாமல் மெதுவாக நடந்து வந்தான்.  குட்டி நாய் அவனைப் பார்த்தது. அவனும் குட்டி நாயைப் பார்த்தான். ச்ச்சோ ச்ச்ச்ச்.. என்று விரலை ஆட்டி அழைத்தான்.

குட்டி நாய்க்கு மிக்க மகிழ்ச்சி. அது வேகவேகமாக வாலை ஆட்டியது. உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து அந்தப் பையனைப் பார்த்து ஓடியது. அவன் பள்ளிக்கூடப்பையிலிருந்து ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்தான். குனிந்து உட்கார்ந்து ஒரு பிஸ்கெட்டை எடுத்துக் கொடுத்தான். குட்டி நாய்க்கு மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. ம்ஞீம் ம்ஞீம் ம்ஞீம் என்று மகிழ்ச்சியில் முனகியது. அந்தப் பையன் எழுந்து இரண்டடி நடந்தான். குட்டி நாய்க்குப் போவதா? வேண்டாமா? என்ற குழப்பம் ஏற்பட்டது. அவன் திரும்பிப் பார்த்து குட்டி நாயை த்தோ த்தோ என்று அழைத்தான். துள்ளிக்குதித்துக் கொண்டு குட்டி நாய் அவன் பின்னால் ஓடியது.  பௌவ் பௌவ் பௌவ் பௌவ்!