tamilnadu

போராட்ட அத்தியாயங்கள் நிரம்பிய கம்யூனிச இயக்கம்

‘ஜெய்பீம்’ இயக்குநர் ஞானவேலை கட்சியின் அரசியல் தலைமைக்குழுவே பாராட்டியுள்ளது. கம்யூனிஸ்ட்டுகளின் வீர வரலாறு நீண்ட காவியம். 1950இல் சேலம் சிறையில் 22 கம்யூனிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1968ஆம் ஆண்டு கீழ்வெண்மணியில் 44 தலித் மக்கள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர். தீண்டாமைக் கொடுமை, நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக போராடிய களப்பால் குப்பு சேலம் சிறையில் விஷம் வைத்து கொல்லப்பட்டார். வாச்சாத்தி வழக்கில் 269 வன, வருவாய், காவல்துறையினருக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தது செங்கொடி இயக்கம். கம்யூனிஸ்ட்டுகளின் போராட்ட அத்தியாயத்தில் ஒன்றை திரைப்படமாக பதிவு செய்த இயக்குநர் மற்றும் கலைஞர்களுக்கு நன்றி. திரைப்படம் வெளியான பிறகு, பாமக கடுமையாக தாக்கியது.

நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அப்போது பேசிய இயக்குநர் ஞானவேல், “10, 15 நாட்களாக படாதபாடு படுகிறோம். மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்குகிறது. கம்யூனிஸ்ட்டுகளாகிய நீங்கள் வாழ்நாளெல்லாம் எப்படி போராடுகிறீர்கள். அதை புரிந்து கொள்ள முடியவில்லை” என்றார். குற்றம் செய்தவர்களின் சாதி அடையாளத்தை பதிவு செய்துள்ளது போல், பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடியவர்களின் சமூகத்தை ஏன் பதிவு செய்யவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த இயக்குநர், “பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடுகிறவர்களை கம்யூனிஸ்ட்டாக காட்டியுள்ளேன். ஒருவர் இடதுசாரியாக மாறும் போது, அவரிடமிருந்து சாதி உள்ளிட்ட அடையாளங்கள் அற்றுவிடுகிறது” என்று குறிப்பிட்டார். நமது தத்துவத்தை எளிமையாக புரியும் படி காட்சிப்படுத்தியுள்ளார்.

ராஜாகண்ணுவாக நடித்த மணிகண்டன் ஒரு பேட்டியில், “கம்யூனிஸ்ட்டுகளின் மன உறுதியை கண்டு வியந்து போனேன். அவர்கள் ஏற்றுக் கொண்ட சித்தாந்தம்தான் அவர்களுக்கு மன உறுதி தருகிறது. நாமெல்லாம் வாழ்க்கைக்கு 90 விழுக்காடு, வேலைக்கு 10 விழுக்காடு நேரத்தை ஒதுக்குகிறோம். கம்யூனிஸ்ட்டுகள் மக்களுக்காக போராட 90 விழுக்காடு, குடும்பத்திற்காக 10 விழுக்காடு நேரத்தை ஒதுக்கிறார்கள்” என்றார். விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க முயற்சித்த சமயம், மக்களவையில் இடதுசாரி உறுப்பினர்களை பார்த்து பிரதமர், “இவர்களெல்லாம் பிழைப்புக்காக போராடுகிறவர்கள்” என்றார். மக்கள் வாழ்வதற்காக போராடுகிறார்கள்; கம்யூனிஸ்ட்டுகள் போராடுவதற்காக வாழ்கிறார்கள். கம்யூனிஸ்ட்டுகளின் நூற்றாண்டு வரலாற்றில் ஏராளமான போராட்ட அத்தியாயங்கள் உள்ளன. அதில் ஒன்று திரைப்படமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கம்யூனிச இயக்கம் செய்த ஏராளமான தியாகங்களை, பங்களிப்பை திரைப்படமாக்க வேண்டும்.