தொடரும் பலத்த மழையால் 500 ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு
தஞ்சாவூர், மே 19- தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3 ஆவது நாளாக பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த கோடை பருவ நெற்பயிர்கள் சாய்ந்தன. இதேபோல, எள் பயிர்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளன. மாவட்டத்தில் ஏற்கெனவே மே 16, 17 ஆம் தேதிகளில் பெய்த மழையால் வாழை, வெற்றிலை பயிர்கள் சாய்ந்து பாதிக்கப்பட்டன. தொடர்ந்து, மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால், மாவட்டத்தில் ஏறத்தாழ 600 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த கோடை பருவ நெற் பயிர்கள் சாய்ந்துவிட்டன. இதில், அதிகபட்சமாக அம்மாபேட்டை வட்டாரத்தில் ஏறக்குறைய 500 ஏக்கரில் சாய்ந்துள்ளன. இதேபோல, தஞ்சாவூர், பூதலூர், திருவோணம், கும்பகோணம், திருப்பனந்தாள் ஆகிய வட்டாரங்களிலும் இப்பாதிப்பு உள்ளது. திங்கள்கிழமை பகலில் வெயில் நிலவியதால், வயலில் தேங்கிய தண்ணீரை வடிய வைப்பதற்கான முயற்சிகளை விவசாயிகள் மேற்கொண்டனர். என்றாலும், மகசூல் குறைவும், வருவாய் இழப்பும் ஏற்படும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் தெரிவித்ததாவது: மாவட்டத்தில் பல பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அனைத்து பயிர்களும் அறுவடைக்கு தயாராகி இருந்த நிலையில், சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக கதிர்கள் அனைத்தும் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால், கடன் வாங்கி நடவு செய்த விவசாயிகள், கடனை எப்படி திரும்பச் செலுத்துவது என்ற வேதனையில் ஆழ்ந்துள்ளனர். எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் கோடை மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களைக் கிராம வாரியாக வேளாண் துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் மூலம் கணக்கெடுப்பு செய்து, ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும்” என்றனர். இதேபோல், திருவையாறு வட்டாரத்தில் பரவலாக எள் பயிர் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால், 10 நாட்களில் அறுவடைக்கு தயாராகி வந்த எள் பயிர்களில் ஏறத்தாழ 750 ஏக்கரில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், எள் சாகுபடி விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து எள் சாகுபடி விவசாயிகள் தெரிவித்ததாவது: திருவையாறு வட்டாரத்தில் அந்தணர்குறிச்சி, கஸ்தூரிபாய் நகர், தில்லைஸ்தானம், விளாங்குடி, புனவாசல், பெரும்புலியூர், ஆச்சனூர், சாத்தனூர், செம்மங்குடி, அணைக்குடி உள்ளிட்ட இடங்களில் எள் பயிர்கள் மழையால் தண்ணீர் சூழ்ந்தது. இதனால், ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்யப்பட்டுள்ள நிலையில், வேரறுந்து வீணாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் வருவாய் மூலம் அடுத்து குறுவை சாகுபடியைத் தொடங்கவும், குழந்தைகளுக்குக் கல்விக் கட்டணம் செலுத்தவும் திட்டமிட்டிருந்த நிலையில், இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
உளுந்து, பருத்தி...
மேலும், இதேபோல், மாவட்டத்தில் உளுந்து 80 ஏக்கரிலும், பாபநாசம், அம்மாபேட்டை, திருவிடைமருதூர் ஆகிய வட்டாரங்களில் ஏறத்தாழ 300 ஏக்கரில் பருத்தியும் உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 300 ஏக்கரில் பயிர்களைத் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.