“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” குடவாசல் வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்” திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன் முகாமிட்டு கள ஆய்வு மேற்கொண்டார். குடவாசல் வட்டத்தில் 63 வருவாய் கிராமங்களில் நடைபெற்ற உங்களை தேடி, உங்கள் ஊரில் முகாமில் 165 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன. புதன் காலை 9 மணி முதல், வியாழன் காலை 9 மணி வரை மாவட்ட ஆட்சியர், தங்கி கள ஆய்வில் குடவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் பரமரிக்கப்பட்டுவரும் அலுவலக பதிவேடுகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். குடவாசல் பேரூராட்சிக்குட்பட்ட வணிக வளாகம், குடவாசல் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளி விவரப் பதிவேடுகள் மற்றும் உள்நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்து, மகப்பேறு பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, கட்டு கட்டும் அறை, சித்த மருத்துவ பிரிவு, ஆய்வகம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அரசு அலுவலங்களில் ஆய்வு நடைபெற்றது. ஆய்வில், அனைத்து துறை அரசு உயர் அலுவலர்களும் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் முகாமிட்டு மக்களிடம் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தனர். ஆய்வின்போது, குடவாசல் வட்டாட்சியர் ராஜாராமன், குடவாசல் பேரூராட்சி மன்ற தலைவர் முருகேசன் மகாலட்சுமி துணைத்தலைவர் குணசேகரன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
பேராவூரணியில்பேருந்து நிழற்குடை, சென்டர் மீடியனில் மின்விளக்கு அமைக்க கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி 11 ஆவது வார்டு முதன்மை சாலை, பட்டுக்கோட்டை சாலையில், பேருந்து நிழற்குடை மற்றும் சென்டர் மீடியனில் மின்விளக்கு அமைக்க வேண்டும் என பேரூராட்சி மன்ற உறுப்பினர் மகாலட்சுமி சதீஷ்குமார் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜாவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில், பேராவூரணி பேரூராட்சி 11 ஆவது வார்டு முதன்மை சாலை மற்றும் பட்டுக்கோட்டை சாலையில் பேருந்து நிழற்குடை இல்லாமல் பேருந்துக்காக காத்திருக்கும் பெரியோர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சாலை விரிவாக்கத்தின்போது பழமையான மரங்கள் வெட்டப்பட்டதால் சாலையில் நிழல் என்பதே இல்லாத நிலை உள்ளது. கோடைகாலம் துவங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு, உடனடியாக இரண்டு இடங்களிலும் பேருந்து நிழற்குடை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை விரிவாக்கம் செய்து சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு, இரண்டு வருடங்களைக் கடந்தும், பலமுறை கோரிக்கை விடுத்தும் செயல்படுத்தப்படாமல் உள்ள சென்டர் மீடியனில், போதிய மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், வயதான பெரியோர்கள் வாகனங்கள் ஓட்ட முடியாமலும் சாலையை கடக்க முடியாமலும் சிரமப்படுகின்றனர். எனவே, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றித்தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.