சிபிஎம் தலைமையில் பொதுமக்கள் குடங்களுடன் ஆர்ப்பாட்டம்
குடிநீர் குழாய் அமைத்திடுக!
திருச்சிராப்பள்ளி, மே 12- திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் கொடியாலம் ஊராட்சியில் காவிரி குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி மற்றும் பொது குடிநீர் குழாய் அமைக்க வேண்டும். சப்பானி கோயில் தெரு மயானத்திற்கு அடிப்படை வசதிகள் மற்றும் சாலை வசதி அமைக்க வேண்டும். தெருவில் உள்ள பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பொதுமக்கள் திங்களன்று திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர். இதையடுத்து, மறியல் போராட்டம் ஆர்ப்பாட்டமாக நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு, கிளைச் செயலாளர்கள் பாரதிதாசன், சீனிவாசன், பரிமளம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநகர் மாவட்ட செயலாளர் கோவி. வெற்றிச்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா. லெனின் ஒன்றிய செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பேசினர். இதில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.