tamilnadu

img

திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் கைப்பேசிகள், ஸ்டோரேஜ் சாதனங்கள் சிக்கியது!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் 5 கைப்பேசிகள், சிம் கார்டுகள், லேப்டாப், பென் டிரைவ் உள்ளிட்ட ஸ்டோரேஜ் சாதனங்களை சிபிசிஐடி காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.


இளம் பெண்கள், கல்லூரி மாணவிகள், உயரிய பொறுப்புகளை வகிக்கும் பெண்கள் உள்ளிட்டவர்களுடன் ஃபேஸ்புக்கில் நட்பாக பழகி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த கும்பலை பொள்ளாச்சி காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், விரைவில் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படவுள்ளது. 


இந்நிலையில் சிபிசிஐடி காவல்துறையினர் இரண்டு நாட்களாக பொள்ளாச்சியில் முகாமிட்டு பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இந்த விவகாரத்தில் முதல் குற்றவாளியான திருநாவுக்கரசின் பண்ணை வீடு, உள்ளிட்ட குற்றவாளிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் பல்வேறு முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக சிபிசிஐடி வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.  


பெண்களை வன்கொடுமை செய்து சித்ரவதை செய்யப்பட்டு வீடியோ பதிவு செய்யப்பட்ட இடம், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசுவுக்கு சொந்தமான சின்னப்பம்பாளையத்தில் உள்ள வீடு என்பது தெரியவந்துள்ளது. அங்கு நடைபெற்ற சோதனையில் 5 கைப்பேசிகள், லேப்டாப், பென் டிரைவ், ஸ்டோரேஜ் சாதனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது. 


நேற்று இரவு 7 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையில் முக்கிய தடயமாகக் கருதப்படும், லேப்டாப் மற்றும் பென்ட்ரைவ் ஆகியவை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இவ்வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசின் நண்பர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  


;