tamilnadu

img

திறந்தவெளி சிறை என காஷ்மீரை அறிவித்துவிடுங்கள்

காஷ்மீர் சிபிஎம் தலைவர் முகமது யூசுப் தாரிகாமி வேதனை

புதுதில்லி, பிப்.12- காஷ்மீரை, திறந்தவெளி சிறை என்று மத்திய அரசு அறிவித்திடலாம் என்று மிகுந்த  வேதனையுடன் முகமது யூசுப் தாரிகாமி கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் புதன்கிழமையன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில்  முதலில் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசினார்.  இதன்பின்னர் முகமது யூசுப் தாரிகாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: காஷ்மீரில் நடைபெறும் நிகழ்வுகளை, இவை காஷ்மீரின் பிரச்சனைகள் என்று பார்க்கக் கூடாது. மாறாக, அவை நாட்டின் பிரச்சனைகளாகப் பார்க்கப்பட வேண்டும். காஷ்மீர் பிரச்சனையை ஆட்சியாளர்கள் ஒரு ரியல் எஸ்டேட் பிரச்சனை போன்று சுருக்கியிருக்கிறார்கள்.  இது மிகவும் கேலிக்கூத்தாகும். காஷ்மீர் ஒரு மாபெரும் மனித சோகமாகும். இந்தியாவின் ஒற்றுமைக்காக நின்றவர்கள் அனைவரும் ஜம்மு-காஷ்மீரில் சிறைகளுக்குப் பின்னே வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

மெஹ்பூபா முப்தியை சிறையில் அடைத்துவைத்திருப்பதிலிருந்து, பாஜகவின் மனோபாவத்தை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. இவர்கள் பார்வையில் ஜனநாயகமும் தேசியவாதமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகக் காட்டப்படுகின்றன. அது உண்மையல்ல. ஜம்மு-காஷ்மீர் மாநிலமும் ஜனநாயகக் கட்டமைப்புக்கான உரிமையைப் பெற்றிருக்கிறது. காஷ்மீர் மக்களும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ்  அனைத்து உரிமைகளையும் பெற்றிருக்கிறார்கள். மத்திய அரசாங்கம் அங்கே தேர்தல் நடத்தி மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்பளிக்க ஏன் மறுக்கிறது? மாறாக, நாடு முழுவதும் காஷ்மீருக்கு எதிராக அவதூறுப் பிரச்சாரத்தைச் செய்து கொண்டிருக்கிறது. அங்கேயுள்ளவர்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் என்று காட்டிக்கொண்டிருக்கிறது.

சுற்றுலாத்துறை மீது  கடும் தாக்குதல் 

சுற்றுலாத்துறை மீது கடும் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. அங்கேயுள்ள ஓட்டல்களும், விருந்தினர் இல்லங்களும் சிறைக்கொட்டடிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. இதனால் மத்திய அரசாங்கம், காஷ்மீரை ஒரு திறந்தவெளி சிறை என்றே அறிவித்திடலாம். ஏனெனில், எதார்த்தநிலை அதுதான். காஷ்மீர் மக்கள், அரசாங்கத்திடம் நம்பிக்கையிழந்து விட்டனர். ஆனால் அதே சமயத்தில் அவர்கள் இந்திய மக்கள் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்திருக்கின்றனர். தில்லி தேர்தல் முடிவுகள் பெரிய அளவிற்கு நிவாரணப் பெருமூச்சை விட வைத்திருக்கிறது. தில்லி தேர்தல் முடிவுகள் தில்லி மக்களுக்கு மட்டுமல்ல, காஷ்மீர் மக்களுக்கும் நம்பிக்கை ஒளிக்கீற்றை அளித்திருக்கிறது.

சென்ற ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் கடுமையான அளவில் பனிப்பொழிவு வீசியதால் ஆப்பிள் மரங்கள் நாசம் அடைந்தன. இவற்றின் விளைவாக ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.  இத்துடன் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் காரணமாக சந்தையும் முழுமையாக நிலைகுலைந்து, ஆப்பிள் பழ விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பழங்களை சந்தைக்கு அனுப்ப முடியவில்லை. 36 அமைச்சர்கள் வந்தும் மக்களுக்கு நிவாரணம் இல்லை இதுவரையிலும் 36 மத்திய அமைச்சர்கள் ஜம்மு-காஷ்மீருக்கு விஜயம் செய்திருக்கிறார்கள். 31 பேர் ஜம்முவிற்கும், 5 பேர் காஷ்மீருக்கும் வந்திருக்கிறார்கள். அவர்கள் வந்ததன் விளைவாக என்ன பயன் அம்மக்களுக்கு ஏற்பட்டது என்று எவருக்கும் தெரியாது. ஏனெனில் எவ்விதமான நிவாரணமும் மக்களுக்கு வழங்கப்படவில்லை. ஜம்மு மக்களும், லடாக் மக்களும் தாங்கள் முன்பு அனுபவித்து வந்த உரிமைகள் மீளவும் தங்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று இப்போது கோரத் துவங்கியிருக்கிறார்கள்.  லடாக் பகுதியினருக்கு பழங்குடியின அந்தஸ்து அளித்திட அரசாங்கம் இன்னமும் தீர்மானித்திட வில்லை. இந்தக் கோரிக்கைகள் புத்திஸ்டுகள், முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களுக்கும் பொதுவானவை. ஊடகவியலாளர்கள் காஷ்மீருக்கு வர வேண்டும். அங்கேயுள்ள நிலைமைகளை அவர்கள் தாங்களாகவே பார்த்து மக்களுக்குத் தெரிவித்திட வேண்டும். ஏனெனில் காஷ்மீர் தொடர்பான ஒவ்வொரு செய்தியையும் தற்சமயம் அரசாங்கம் தணிக்கை செய்தே வெளியிடுகிறது. அரசாங்கம் ஒருசிலருக்கு நிலங்கள் கொடுக்க முடிவெடுத்திருப்பதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அங்கே இணையத் தொடர்பை மீளவும்  அளித்திட வேண்டும். இவ்வாறு தாரிகாமி கூறினார்.   (ந.நி.)