புதுதில்லி:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஓர் அங்கமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் என்றுகட்சியின் மத்தியக் குழு அறிவித்துள்ளது.
சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள 4 மாநிலங்களில் கட்சி மேற்கொள்ள உள்ள தேர்தல் நிலைப்பாடுகுறித்தும் மத்தியக் குழு அறிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் அக்டோபர்30, 31 தேதிகளில் இணைய வழியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கொரோனா நோய் பரவல் நிலவரம் குறித்தும், இந்திய பொருளாதாரம் மிக மிக மோசமான நிலைமைக்கு வீழ்ந்திருப்பது குறித்தும், இதை எதிர்கொள்ளத் திராணியற்ற மத்தியபாஜக அரசு தொழிலாளர் வர்க்கத் தின் மீதும், உழைக்கும் மக்கள் மீதும்,விவசாயிகள் மீதும் கட்டவிழ்த்துவிட்டுள்ள கொடூரமான தாக்குதல்கள்குறித்தும் விரிவாக விவாதிக்கப் பட்டது. இந்த நிலைமைகளை மக்களிடம் அம்பலப்படுத்தும் விதமாக நாடு தழுவிய பிரச்சாரத்தை மேற்கொள்வது என மத்தியக் குழு தீர்மானித்தது. நவம்பர் 26, 27 தேதிகளில் நடைபெறவுள்ள நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்திற்கும், நவம்பர் 26 அன்று நடைபெறவுள்ள நாடுதழுவிய மத்திய தொழிற்சங்கங்களின் பொது வேலைநிறுத்தத்திற்கும் முழு ஆதரவினை கட்சியின் மத்தியக்குழு தெரிவித்தது.
சட்டமன்ற தேர்தலுக்கான உத்திகள்
மேலும் கட்சியின் மத்தியக் குழு,எதிர்வரும் சட்டமன்ற தேர்தல்களில் பின்பற்ற உள்ள தேர்தல் நடைமுறைஉத்திகள் குறித்தும் விவாதித்தது. கூட்டத்திற்குப் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 4 மாநில சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக கூறியிருப்பதாவது:கேரளம், தமிழ்நாடு, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலக் குழுக்கள் அளித்துள்ள முன்மொழிவுகளுக்கு மத்தியக் குழு ஒப்புதல் அளித்தது.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடது ஜனநாயக முன்னணியின் ஓர் அங்கமாகத் தேர்தலில் போட்டியிடுவது தொடரும்.தமிழ்நாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக தலைமையிலானகூட்டணியின் ஓர் அங்கமாகத் தேர்தலில் போட்டியிடும். அசாமில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதவெறித் தீயை விசிறிவிட்டுக் கொண்டிருக்கிற - மக்களின் வாழ்க்கையில் சொல்லொண்ணா துன்ப துயரங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிற பாஜக அரசாங்கத்தை முறியடிப்பதற்காக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளுடனும் ஒத்துழைப்பு மேற்கொண்டு போட்டியிடும். மேற்குவங்கத்தில், பாஜக மற்றும்திரிணாமுல் காங்கிரசை முறியடித்திட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடது முன்னணியும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மதச்சார் பற்ற கட்சிகளுடனும் தேர்தல் புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ளும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.
(அறிக்கை முழு விபரம் நாளை வெளியாகும்)