tamilnadu

img

என்ன விலை கொடுத்தேனும் ரயில்வேதுறையை பாதுகாக்க வேண்டும்

(ஜூலை 3, 2020 தேசாபிமானியில் வெளியான ரயில்வே துறை தனியார்மயமாக்கல் குறித்து தலையங்கத்தைத் தழுவியது)

மக்களின் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த போக்குவரத்து அமைப்புகளில் ரயில் போக்குவரத்து முக்கியமான ஒன்றாகும்....

இந்தியா என்ற சிந்தனையை உருவாக்குவதிலும் இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் ரயில்வே துறைக்கு மிகப்பெரிய கதாபாத்திரம் உண்டு...

167 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்திய ரயில்வேத் துறை தழைத்தோங்கி வளர்ந்து இன்று ஒரு பிரம்மாண்ட நிறுவனமாக மாறி மக்களுக்கு சேவை செய்து பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்கிறது.

சுமார் 67000 கிலோமீட்டர்கள் நீளம் கொண்ட ரயில் பாதைகள்...
நாள் தோறும் 13,000 க்கும் அதிகமாக இயக்கப்படும் பயணிகள் ரயில்கள்...
9000 க்கும் அதிகமான சரக்கு ரயில்கள்....
7 ஆயிரத்துக்கும் அதிகமான ரயில் நிலையங்கள்...
சுமார் 14 லட்சம் ஊழியர்கள்...
ஏராளமான ரயில் பெட்டிகள் உள்ளிட்ட தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போன்ற பிரம்மாண்ட உட்கட்டமைப்பை சொந்தமாக கொண்டு செயல்படும் நமது நாட்டின் பிரம்மாண்ட பொதுத்துறை நிறுவனம்....
தினசரி சுமார் 2.3 കോടി பயணிகள் பயணம் செய்யும் உலகின் நான்காவது பெரிய ரயில் போக்குவரத்து நிறுவனம்....
ஒவ்வொரு இந்திய குடிமகனின் மனதிலும் மறக்க முடியாத பயண நினைவுகளால் பின்னிப் பிணைந்திருக்கும் உறவு இந்திய ரயில்வேக்கு உண்டு...

இத்தகைய பிரம்மாண்டமான அமைப்பை தகர்க்கும் வேலைகள் மோடி அரசால் துவங்கப்பட்டுவிட்டது.

ஒட்டுமொத்த நாடும் கொரோனா என்னும் தொற்று நோய்க்கு எதிராக இரவு பகல் பாராமல் போராடிவரும் இந்த இக்கட்டான வேளையில் திரைமறைவில் ரயில்வே துறையை தனியார் மயப்படுத்த, காய்கள் நகர்த்தும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன...

109 வழித்தடங்களில் 150 பயணிகள் ரயில்களை இயக்குவதற்கான ஒப்பந்தங்களை செய்ய ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன... கொரோனா நெருக்கடி நிலை காரணமாக கடந்த ஏப்ரலில் வெளியிடப்பட வேண்டிய ஒப்பந்தப்புள்ளி கோரிக்கைகள் தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது...
முக்கிய நகரங்களை இணைக்கின்ற வழித்தடங்கள் தான் தற்போது தனியார் மயப்படுத்தப்படுகின்றன...

நான்கு கட்டமாக 5 சதவீத வழித்தடங்கள் தனியார்மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது...இதற்கு முன்னோடியாக, சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் ஊழியர்களை நியமனம் செய்யவது போன்றவற்றுக்கு தடைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன...

நடைமுறையிலுள்ள வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கையில் ஒரு பகுதியை முடக்கவும், பின்னர் படிப்படியாக குறைக்கவும் ரயில்வே வாரியம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது.

சுதந்திர இந்தியாவில், ரயில்வே துறைக்கு சொந்தமான ரயில் தடங்களையும் ரயில்களையும் தனியார் மையப்படுத்திய மோசமான முன்னுதாரணத்தை மோடி அரசு தான் முதல் முதலாக ஆரம்பித்துள்ளது.

டெல்லி-லக்னோ வழித்தடத்தில் தேஜஸ் ரயில் சேவையை தனியார் மையப்படுத்தியதன் வாயிலாகத்தான் தான், இந்த வேலையை மோடி அரசு ஆரம்பித்து வைத்தது...

ரயில்வே பட்ஜெட் வேண்டாம் என்று மத்திய அரசு முடிவு மேற்கொண்டது கூட, ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை மனதில் வைத்துதான் தான் செய்ததோ என்று சந்தேகம் கொள்ள வைக்கிறது...

நாட்டு மக்களின் வரிப்பணத்தை உபயோகித்து பல ஆண்டு கால கடும் உழைப்பால் உயர்ந்த ரயில்வே நிறுவனத்தில் இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி வேறு எந்த முதலீடும் செய்யாமலேயே கொள்ளை லாபம் சம்பாதிக்க கார்ப்பரேட் நிறுவனங்களால் முடியும்...

பேரிடர் காலங்களில் மக்களின் கண்ணீரைத் துடைக்கும் விதத்தில் செயல்படும் பொதுத் துறை நிறுவனமான ரயில்வே துறையை சொந்தமாக்கிக் கொள்ளும் ஆசை எப்போதுமே கார்ப்பரேட்டுகளுக்கு உண்டு... அந்த ஆசையைத்தான் இப்போது மோடி அரசு நிறைவேற்ற துடிக்கிறது...

கொரோனா காலத்தில் பிற மாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு சேர்க்கும் வேலையை ரயில்வே தான் செய்ய முன்வந்தது.

கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்த டெல்லியின் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டபோது ரயில் பெட்டிகளை மருத்துவமனைகள் போன்று வடிவமைத்து பயன்படுத்த உதவும் வகையில் ரயில்வே முன்வந்தது...

நாடு முழுவதும் இது போலவே 5000 ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனை வார்டுகளாக மாற்றி பயன்படுத்திக்கொள்ள இந்திய ரயில்வே அனுமதித்தது...

வறட்சி காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லவும் வெள்ளப்பெருக்கு, புயல் போன்றஇயற்கை பேரிடர் காலங்களில் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்லும் பணிகளை ரயில்வே கடந்த காலங்களில் செய்துள்ளது...

தனியார் மயப்படுத்தும் போது நமக்கு ரயில்வே துறையின் இத்தகைய மனிதாபிமான செயல்பாடுகளையும் இழக்கும் நிலை ஏற்படும்....

இந்த கொரோனா காலத்தில் பலருக்கும் முறையான சிகிச்சை கிடைக்காமல் போனதன் முக்கிய காரணம் சுகாதாரத்துறை தனியார் மயமாக்கப்பட்டது மட்டுமே ஆகும்...

தனியார்மயமாக்கத்தின் இத்தகைய பின் விளைவுகளிலிருந்து கிடைத்த கசப்பான அனுபவங்களை, தாங்கள் பாடமாக உள்வாங்கப் போவதில்லை என்று மோடி அரசுபகிரங்கமாக விடுக்கும் அறிவிப்பு என்று கூட நாம் இதை கருதிக் கொள்ளலாம்...

இயல்பாகவே லாபம் அதிகமாக கிடைக்க வாய்ப்பு இருக்கும் வழித்தடங்களில் மட்டுமே தனியார் நிறுவனங்களுக்கு ஆர்வம் ஏற்படும்...
ஊரகப் பகுதிகளில் உள்ள வழித்தடங்களில் ரயில் சேவைகளை நடத்த தனியார் நிறுவனங்கள் ஒருபோதும் முன்வராது.
சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறினால்,
படிப்படியாக ரயில்வே துறையை தனியார் மயப்படுத்துவது மூலம் கிராமப்புற மக்களுக்கு ரயில் பயணம் என்பது கனவாக மாறும் நிலை ஏற்படும்...

கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களோடு நரம்பும் சதையுமாக பின்னிப் பிணைந்துள்ள உறவைத்தான் மோடி அரசு அறுத்தெறிய முயல்கிறது... தற்சார்பு இந்தியா என்னும் சங்கிலித் தொடரில் மிகப்பெரிய கண்ணி தான், ரயில்வே துறையை தனியார் மயப்படுத்துவதன் மூலம் அறுத்தெறியப்படுகிறது...

அத்துடன் தனியார்மயமாக்குதல் மூலம் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை நாம் இழக்க நேரிடும்.

ரயில் பயணம் பொருட்செலவு மிகுந்ததாக மாறிவிடும்...

எரிபொருள் விலை எண்ணெய்க் கம்பெனிகளால் நிர்ணயிக்கப்படுவது போல பயண கட்டணம் தனியார் ரயில் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படும் காலமும் வெகு தொலைவில் இல்லை...

புற்றுநோய் போன்ற கொடூரமான நோய்கள் தாக்கிய நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், மூத்த குடிமக்கள் போன்றவர்களுக்கு சேமநல அடிப்படையில் வழங்கப்பட்டு வந்த சலுகை கட்டண பயணங்களை முழுமையாக நாம் இழக்க வேண்டிய நிலை ஏற்படும்...

உலகின் எந்த நாட்டிலும் பொதுப்போக்குவரத்து தனியார் மயமாக்கப்பட்டதால் அந்தந்த நாடுகளின் சமூகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை...

முன்னர் தனியார் மயமாக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டின் ரயில்வே துறையை மீண்டும் அரசுடமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இங்கிலாந்து முழுவதும் போராட்டங்கள் பரவலாக நடைபெற்று வருகின்றன...பிரான்சிலும் ஏறத்தாழ இதே நிலை தான் நிலவி வருகிறது...

டெல்லியில் விமான நிலையத்தை இணைக்கும் சிறப்பு மெட்ரோ ரயில் சேவையை நடத்த ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது...அந்த சேவையை நடத்துவதால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அதிகமாக லாபம் ஈட்ட முடியாத நிலையில், தங்களால் இந்த சேவையை நடத்த முடியாது என்று ரிலையன்ஸ் நிறுவனம் அந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது...
பின்னர், டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த சேவையை நடத்தும் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை உருவானது...

இது நிகழ்காலத்தில் நமக்கு தனியார்மயமாக்கல் மூலம் கிடைத்திருக்கும் மிகப்பெரிய கசப்பான அனுபவமாகும்...

எனவே இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் முன்னோடி நிறுவனங்களில் ஒன்றான ரயில்வே துறையை தனியார் மயமாக்கல் என்ற அச்சுறுத்தலில் இருந்து என்ன விலை கொடுத்தாவது பாதுகாக்க வேண்டும்... அது நமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்ய வேண்டிய முக்கியமான கடமையும் ஆகும்....

#Save_Public_Sector_Institutions

Sadan Thuckalai