tamilnadu

img

சூடாகும்பூமி என்ன செய்யபோகிறது அரசு? - ஐ.வி.நாகராஜன்

புவி வெப்பமடைவதால் ஏற்படும் பாதிப்புகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கிவிட்டது. ஆனால் இதை ஆட்சியாளர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

பருவநிலை மாற்றம் என்பது ஏற்கனவே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் அதன் விளைவுகளை அனுபவித்து வருகின்றனர். ஆபத்தின் விளிம்பு என்பது 350 புள்ளிகள் வரையிலான கரியமில வாயுவின் அளவே ஆகும். ஆனால் அது இன்றைய காலகட்டத்தில் 390 ஆக உள்ளது என்று அறிவியல் ஆய்வாளர்கள் விளக்குகின்றனர். இது இன்னும் நாளுக்கு நாள் உயரக்கூடும் என்றும் தெரிவிக்கின்றனர். ஆர்க்டிக் கடலில் உள்ள பனி உருகல், கிரீன்லாந்தை மூடும் இரண்டு கிலோ மீட்டர்க்கும் மேல் உள்ள மிகப்பெரிய பனி மூடல், ஆறுகளை உருவாக்கும் பனி பாறைகள் உருவாகாமல் தடுக்கும் மோதல் போன்ற இயற்கைக்கு மாறான நிகழ்வுகள் உலகை குலுக்கி வருகின்றன.

புவி வெப்பமடையும் பிரச்சனையில் இன்னமும் உலக நாடுகள் போதிய கவனம் செலுத்தவில்லை என்றே தோன்றுகிறது. 2019 ஜூன் மாதம் 10-ஆம் தேதி தலைநகர் டில்லியில் 48 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவனாது. கரியமில வாயு வெளியேற்றத்தினால்தான் புவி வெப்பம் அதிகதித்து வருகிறது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. கரியமில வாயு வெளியேற்றத்தில் முன்னிலை வகிப்பவை சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள்தான். இந்த நாடுகளில் உள்ள அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியாகும் கரியமில வாயுவின் பாதிப்பு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

புவி வெப்பமடைவதால் ஏற்படும் பாதிப்புகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கிவிட்டது. ஆனால் இதை ஆட்சியாளர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட தொடர் மழை, அதனால் ஏற்பட்ட நிலச் சரிவு பொருளாதார இழப்போடு 500 மனித உயிர்களும் இதற்குப் பலியான பின்னணியின் அடிப்படையை புரிந்துகொள்ளாமலேயே அன்றாட நிகழ்வு போல மறைந்துபோனதுதான் கொடுமையான சம்பவம்.
எல்லாம் வளர்ச்சிக்கான வழிகள் என்று நாம் கொடுக்கும் விலை அதைவிட பல மடங்கு என்பதை உணரவேண்டிய தருணமிது.
 

1800-1900 காலகட்டத்தில் இருந்து புவியின் வெப்பத்தை விட தற்போது புவியின் வெப்பம் 1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இதன் வெளிப்பாடாகத்தான் டில்லி வெப்பம் 48 டிகிரி செல்சியஸைத் தொட்டது. புவி வெப்பநிலை உயரும்போது பனிப்பாறை உருகி கடல் மட்டம் 2.8 அடி உயரும். இதனால் இந்தியாவின் கடலோரப் பகுதிகள் முழுவதும் காணாமல் போகும் என்று அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது இந்தியாவில் 2.65 பிபிஎம் அளவுக்கு ஆண்டுத்தோறும் கரியமில வாயு வெளியாகிறது. 2015 முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இது 412 பிபிஎம் அளவை எட்டியுள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்த 15 ஆண்டுகளில் 450 பிபிஎம் அளவ எட்டும். இது 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்க காரணமாகும். இதே நிலை நீடித்தால் 2050-இல் இந்தியாவில் வெப்ப நிலை 1.5 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும்.

கடந்த 18-08-2019 அன்று இரவு சென்னை திருவான்மியூர் பகுதியில் மெரினா கடற்கரையில் நடந்து சென்றவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. அது என்னவென்றால் கடலின் கடல்நீர் நீல நிறத்தில் ஜொலித்ததுதான். சிலர் ஆச்சரியத்துடன் பார்த்து அதை ரசித்தாலும் பலர் கடலில் ஏதோ பெரிய மாற்றம் நிகழப்போகிறது என்ற பீதியுடன் அங்கிருந்து நகர்ந்தனர். தகவல் அறிந்து காவல்துறையினரும் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்களும் கடற் கரைக்கு விரைந்தனர். பிறகு அவர்கள் நடத்திய ஆய்வில் அது நாக்டிலுகா என்ற ஒருவகை கடற் பாசி என்பது தெரியவந்தது. இதனால் ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டு கடல்வாழ் உயிரினங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று தெரியவந்தது. ஒரு லிட்டர் கடல் நீரில் 10 மில்லியன் முதல் 20 மில்லியன் டைனோபிளஜெல்லேட் என்ற செல்கள் மறு இனப்பெருக்கம் செய்யும். இதுபோன்ற நிகழ்வுக்கு புவி வெப்பமடைவதால் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து வருவதை இந்திய தேசிய பெருங்கடல் சூழல் நீர்வாகம் போன்ற இந்திய அமெரிக்க நிறுவனங்கள் உறுதிப்படுத்துகின்றன. 

புவி வெப்ப நிலை உயர்விலிருந்து பாதுகாக்க நெதர்லாந்தும், சிங்கப்பூரும் இப்போதே தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கென குறிப்பிட்ட தொகையை இருநாடுகளும் ஒதுக்கி நடவடிக்கை எடுக்கின்றன. இவ்விரு நாடுகளின் தனிநபர் வருமானம் இந்தியர்களின் வருமானத்தை விட 20 மடங்கு அதிகம். ஆனால் இயற்கை சீற்றத்தக்கு பணக்கார நாடு ஏழை நாடு என்ற பேதம் ஏதும் கிடையாது. கடல் மட்டம் உயரும் ஆபத்து இந்தியாவுக்கு அதிகம் என்று எச்சரிக்கை எழுப்பியும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காத ஆட்சியாளர்களின் அலட்சியத்துக்கு அடுத்து வரும் சமுதாயம்தான் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது மட்டும் தின்னம்.