tamilnadu

img

மீரட் சதி வழக்கு 10 ஆயிரம் பக்கங்கள்... - முசாபர் அகமது

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்ப நாட்கள்  -  ..நேற்றைய தொடர்ச்சி

மீரட் சதிவழக்கின் கால கட்டத்திலிருந்து தான், கம்யூனிஸ்ட் கொள்கையும், கருத்தும் இந்தியாவில் உறுதிப்படுத்தப் பட்டன.  1932-ஆம் ஆண்டின் கடைசியில் பிலிப்ஸ்பிராட்டுக்கும், பென்பிராட்டிலிக்கும் எனக்கும் கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு அறிக்கைகள் அனுப்புவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. இந்த அறிக்கைகள் பயனளிப்பவையாக இருந்தன.

தரணிகாந்த் கோஸ்வாமி, கோபேந்திர கிருஷ்ண சக்கரவர்த்தி, கோபால் பாசக் ராதாரமன் மித்ரா ஆகியோர் மனச்சாட்சிப்படி தாங்கள் கம்யூனிஸ்டுகள்தான் என்பதை அறிவித்தனர். கட்சியின் ஆலோசனைப்படி பி.சி.ஜோஷியும் அத்தகையதொரு அறிக்கையை அளித்தார். அவ்வாறு அவர் அறிவிக்கக் காரணம், அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஓர் உறுப்பினர்தான் என்பதற்கு எவ்விடத்திலும் யாதொரு சான்றும் இருந்ததில்லை. சௌத்ரிதரம்பீர்சிங், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மூலம் விடுதலை செய்யப்பட்டார். சிவநாத் பானர்ஜியும், கிஷோரிலால் கோஷூம் செஷன்ஸ் நீதிமன்றம் மூலம் விடுதலையாயினர். எஞ்சியவர்களில் சிலரை ஆயுள்காலம் முழுவதும் நாடுகடத்துவதற்கும், மற்ற சிலரை 12 ஆண்டுகள், 10 ஆண்டுகள்  7 ஆண்டுகள், 5 ஆண்டுகள், 4 ஆண்டுகள் என சிறைத் தண்டனை அனுபவிக்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

செஷன்ஸ்கோர்ட் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன்பு, 68 வயதான பழைய இஞ்சினியர் பண்டிராஜ் தேஜ்டி காலமானார். ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட அவர் புனாவுக்குச் சென்றிருந்தார்.அவர் பம்பாயில் உள்ள தொழிலாளர்கள் - விவசாயிகள் கட்சியின் தலைவராக இருந்தார். வழக்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ‘கமிட்’ செய்யப்பட்ட பின்னர் அரசாங்கத் தரப்பு வக்கீல் லாங்போர்ட் ஜேம்ஸ் காலமானார்.     

உலகத்தின் மிகப்பெரிய வழக்குகளில் ஒன்று

1929மார்ச் 20ஆம் தேதிதான் நாங்கள் கைது செய்யப்பட்டோம். 1933 ஜனவரி 16ஆம் தேதியன்று செஷன்ஸ் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். இந்த வழக்கிற்காக அச்சிடப்பட்ட காகிதங்கள் பத்தாயிரம் முழுப்பக்கங்கள் வரும். மீரத் சதிவழக்கு என்பது உலகத்தின் மிகப் பெரிய வழக்குகளில் ஒன்றாயிருந்தது. ஆயுள் காலம் முழுவதும் நாடு கடத்தலும், ஆண்டுகள் பலவாக கடுஞ்சிறையும் கிடைத்தன. மீரட் சதிவழக்கின் கால கட்டத்திலிருந்துதான், கம்யூனிஸ்ட் கொள்கையும், கருத்தும் இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்டன.

வங்காளச் சிறைகளிலும், தனிமைச் சிறைகளிலும் நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் மார்க்சிய நூல்களைப் படிக்க ஆரம்பித்தனர். சிறையிலிருந்து விடுதலை ஆன பிறகு அவர்களில் பலர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர். 1929-ல் எங்கள் மீதான வழக்குகள் ஆரம்பமானதற்குப் பிறகு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து எம்.என்.ராய் வெளியேற்றப்பட்டார். ஒரு சமயம் அவர் கம்யூனிஸ்ட் அகிலத்தின் கிழக்குப்பிரிவின் தலைவராக இருந்தார். அவரைக் கட்சியிலிருந்து வெளியேற்றியதற்கான காரணம் என்னவென்பது எங்களுக்குத்தெரியவில்லை. எனினும் அவரது நடவடிக்கையில் எனக்கு ஆட்சேபனை இருந்தது. அவரை வெளியேற்றியதற்கான காரணங்களில் ஒன்றாக எனது ஆட்சேபனையும் இருக்குமோ என்பது பற்றிய விவரம் கிடைப்பதற்கு எனக்கு எவ்வித சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை.

கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு அவர் இந்தியாவுக்குத் திரும்பி வந்து ஏதாவது ஒருசெயலில் ஈடுபடுவார் என்று நாங்கள் கருதியிருந்தோம். உண்மையில் அவர் அவ்வாறே செய்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் ‘புரட்சிக் குழு’ என்பதன் பேரில் அவர் இரகசியக் குறிப்புக்களை விநியோகிக்க ஆரம்பித்தார்.

மீரட் சதி வழக்கிற்குப் பிறகு

1930-ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கம்யூனிஸ்ட் அகிலத்துடன் இணைக்கப்பட்டது. அதற்குப் பின்னர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் ‘புரட்சிக் குழு’வின் பேரில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதை எம்.என்.ராய் நிறுத்திக் கொண்டார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கம்யூனிஸ்ட் அகிலத்தில் இணைப்புக்கிடைத்த சமயத்தில்தான் இந்தோ - சீனாவிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட் அகிலத்தில் இணைக்கப்பட்டது. அந்தச்சமயத்தில் தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலுக்கான நகல் திட்டம் பிரசுரிக்கப்பட்டது. 1930 டிசம்பர் 19ஆம் தேதியன்று நகல் திட்டம் ‘இன்டர் நேஷனல் கரஸ்பான்டன்ஸ்’ என்ற பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது. பம்பாயைச் சேர்ந்த கட்சித் தலைவர்களுக்கு அகில இந்திய கட்சி விஷயத்தில் ஏற்பட்ட பிளவு, கருத்து வேறுபாடுகள் ஆகியவை காரணமாக இந்தச்சமயத்தில் கம்யூனிஸ்ட் அகிலம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுத்திருந்த இணைப்பை ரத்து செய்துவிட்டது. 

கல்கத்தாவை சேர்ந்த தோழர்கள் (ஹலீம் உள்பட) கல்கத்தா கமிட்டி ஆஃப் தி கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கல்கத்தா குழு) என்னும் பெயரில் செயல்பட ஆரம்பித்தனர். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருவிரிந்த கூட்டத்திலோ கம்யூனிஸ்ட் அகிலத்தின் மத்தியக்கமிட்டி கூட்டத்திலோ, கல்கத்தா கமிட்டியை குறித்து ஸ்டாலின் குறிப்பிட்டார். எந்தக்கூட்டத்தில் என்பது எனக்குத் தெளிவாக நினைவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓர் அகில இந்திய வடிவம் தரவேண்டுமென கல்கத்தா கமிட்டி எழுப்பிய வேண்டுகோளுக்கு பம்பாயிலிருந்து யாதொரு பிரதிபலிப்பும் உண்டாகவில்லை. அப்போது அவர்கள் பல வழிகளின் மூலம் கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு அறிக்கைகள் அனுப்பினர். 1932-ஆம் ஆண்டின் கடைசியில் பிலிப்ஸ்பிராட்டுக்கும், பென்பிராட்டிலிக்கும் எனக்கும் கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு அறிக்கைகள் அனுப்புவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. இந்த அறிக்கைகள் பயனளிப்பவையாக இருந்தன.

அடக்குமுறை கொடுமைகளுக்கிடையிலும் மீண்டும் கட்சியை புனரமைத்தல்

1932 மே மாதம் சீனா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் மத்திய கமிட்டிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு பகிரங்கக்கடிதம் அனுப்பின. அந்தக் கடிதத்தில் அக்கட்சிகள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கை முறைகளை கடுமையாக விமர்சித்திருந்தன. நடவடிக்கைக்கான நகல் திட்டத்தின் அடிப்படையில் அகில இந்தியக்கட்சியை உருவாக்க நிர்பந்திக்கவும் செய்தன. ஓராண்டுக்கு மேலான பின்னர், 1933 ஜூலை 16ஆம் தேதியன்று மீண்டும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் கடிதம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தது. இந்தக் கடிதத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் விமர்சனம் கிட்டத்தட்ட கடமையாகவும் உறுதியாகவும் இருந்தது.

... தொடரும்