குடியுரிமை குறித்து விவாதங்கள் எழுந்துள்ள இந்த காலகட்டத்தில் மதச்சார்பற்ற இந்தியாவிற்கான மௌலானா ஆசாத்தின் போராட்டம் நினைவு கூறப்பட வேண்டும்
மௌலானா அபுல் கலாம் ஆசாத் விரக்தியில் இருக்கின்ற இந்தப் படத்தை பார்த்தபோது, இதை வரைந்த கார்ட்டூனிஸ்ட் அந்த தலைவரை முதுகெலும்பில்லாத இந்த தோரணையில் சித்தரிக்க வேண்டும் என்ற முடிவை ஏன் மேற்கொண்டார் என்று நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். பிரபல பத்திரிகையாளர் இர்ஷாத் ஹைதர் ஜைதியால் வரையப்பட்ட இந்த கார்ட்டூன். 1959 பிப்ரவரியில் உருது இதழான நுகூஷ் பத்திரிகையில் வெளியானது. இந்தப் படம் மனவேதனையில் இருந்த ஆசாத் 1948ஆம் ஆண்டில் டெல்லி ஜும்மா மசூதியில் ஆற்றிய கடைசி உரை குறித்ததாக இருக்கிறது. தேசப் பிரிவினைக்காக வருத்தம் தெரிவித்த ஆசாத், "உங்களுக்கு நினைவிருக்கிறதா?" நான் உன்னைப் பாராட்டினேன், நீ என் நாக்கைத் துண்டித்துவிட்டாய்; நான் என் பேனாவைத் தேர்ந்தெடுத்தேன், நீ என் கைகளைத் துண்டித்துவிட்டாய்; நான் முன்னேற விரும்பினேன், நீ என் கால்களை உடைத்தாய்; நான் திரும்ப முயற்சித்தேன், நீ என் முதுகை உடைத்தாய்… இன்று என்னுடைய இருப்பு உயிரற்றதாக, நம்பிக்கையிழந்த அழுகையுடன் இருக்கிறது. இன்று எனது சொந்த தாய்நாட்டில் நான் அனாதையாக இருக்கிறேன். எனக்காக நான் செய்து கொண்டிருந்த தேர்வில் தோற்றுப் போனதாக அர்த்தமில்லை. என்னுடைய கூட்டிற்கு இங்கே இடமில்லை என்றும் நான் நினைக்கவில்லை. இதன் பொருள் என்னவென்றால், உன்னுடைய ஆணவம் நிறைந்த கைகள் என்னைச் சோர்வடையச் செய்திருக்கின்றன. என்னுடைய உணர்திறன்கள் காயமடைந்துள்ளன, எனது இதயம் கனக்கிறது " என்று கூறி இந்திய முஸ்லீம்கள் தனது முதுகெலும்பை உடைத்து விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.
அமைதியைக் கொண்டு வருகிறோம் என்ற பெயரில், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகத்தை டெல்லி காவல்துறை முற்றுகையிட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் நியாயமான கோபத்துடன் தொடர்ந்து தெருக்களில் குவிந்து கொண்டிருக்கின்ரனர். என்னுடைய வீடு என்று நான் அழைக்கின்ற இடத்திலிருந்து 7,500 கி.மீ தூரத்தில் லண்டனில் எனது பிஎச்.டி ஆய்வறிக்கையை எழுதிக் கொண்டிருக்கும் நான் சோம்பலில் இருந்து விழித்தெழுந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, களஆய்விற்காக ஆறு மாதங்களை நான் கழித்திருந்த ஜாகிர் ஹுசைன் நூலகத்தின் ரத்தக் கறை படிந்த தாழ்வாரம் குறித்த சித்திரத்தை என் மனதிலிருந்து அகற்றிவிட நான் அதிகம் சிரமப்படுகிறேன். அங்கிருந்த பத்திரிக்கை பிரிவில் ஆசாத்தின் இந்த படத்தை நான் பார்த்திருக்கிறேன்.
ஆசாத் இந்திய அரசாங்கத்தின் முதல் கல்வி அமைச்சராக இருந்தார். 1920இல் ஜாமியா மிலியா இஸ்லாமியாவை நிறுவுவதற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளை குழுவின் உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1931ஆம் ஆண்டில் தராசன சத்தியாக்கிரகத்தின் முக்கிய நிறுவனர்களில் ஒருவராக இருந்த ஆசாத் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை, இந்தியாவின் மதச்சார்பற்ற நெறிமுறைகளை தீவிரமாக வழிநடத்துபவராக இருந்தார். பெரும்பாலும் "காங்கிரள் கோமாளி" என்று முகம்மது அலி ஜின்னாவால் அழைக்கப்பட்டு வந்த ஆசாத், ஹிந்து-முஸ்லீம் நட்புறவின் மீதான நம்பிக்கையை தொடர்ந்து தன்னிடம் வைத்துக் கொண்டிருந்தார். 1940ஆம் ஆண்டு அவர் ஆற்றிய உரையில், இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “நான் ஒரு இந்தியன் என்பதில் பெருமைப்படுகிறேன். இந்திய தேசியம் என்ற பிரிக்க முடியாத ஒற்றுமையின் ஒரு பகுதியாக நான் இருக்கிறேன். இந்த உன்னதமான மாளிகைக்கு நான் மிகவும் இன்றியமையாதவன். நான் இல்லாமல் இந்த அற்புதமான அமைப்பு ஒருபோதும் முழுமையடையாது. இந்தியாவை உருவாக்கிய இன்றியமையாத உறுப்பாக நான் இருக்கிறேன்.. இந்த கூற்றை நான் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டேன் ".
ஆசாத், ஜின்னா இவர்கள் இருவரும் வெவ்வேறு உலகக் கண்ணோட்டங்களைக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவருமே ஆரம்பத்தில் தாங்கள் ஆதரித்து வந்த கருத்துக்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட சித்தாந்தத்தை ஆதரிப்பவர்களாக மாறிப் போனார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை அவர்களின் ஆடைகளால் அடையாளம் காண முடியும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் நயவஞ்சகப் பேச்சின் வெளிச்சத்தில் பார்க்கும் போது, தங்களுடைய சித்தாந்தங்களை. மாற்றிக் கொண்டாலும், ஆசாத், ஜின்னா என்ற இவர்கள் இருவருமே தங்களுடைய தோற்றத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்பது தெரிய வரும்.
தார்ஸ் இ நிஜாமி இஸ்லாமிய பாடத்திட்டத்தை நிறைவு செய்து, குர்ஆன், ஹதீஸ், தப்சீர், ஃபிக்ஹ் குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட, இஸ்லாமிய இறையியலை மறுவிளக்கம் செய்கின்ற வகையில், மத ரீதியாக ஒருங்கு சேர்க்கப்பட்ட பல நெறிமுறைகளைக் கொண்ட இந்தியாவுடன் சமரசம் செய்து கொள்ளக் கூடிய முடிக்கப்படாத நான்கு தொகுதிகளைக் கொண்ட தர்ஜுமான்-உல்-குர்ஆனைத் தயாரித்த, ஷெர்வானி அணிந்த ஆசாத், மதச்சார்பற்ற காங்கிரஸுடன் இணைந்து இந்திய தேசியவாதத்தை ஆதரித்தார். இஸ்லாத்தைப் பற்றிய நிலைப்பாடு எதனையும் கொண்டிராத, சவிலே ரோ சூட் அணிந்து கொண்டிருந்த ஜின்னா, இஸ்லாத்தின் பெயரால் புதிய அரசை உருவாக்குகின்ற திட்டத்தை முன்வைத்தார்.
1888இல் மக்காவில் பக்தி மற்றும் மதப் புலமை குறித்து அறியப்பட்ட ஒரு குடும்பத்தில் ஆசாத் பிறந்தார். சையித் குலாம் முஹியுதீன் என்பது அவரது இயற்பெயர். சயீத் அஹ்மத் கான், ஷிப்லி நோமணி மற்றும் ஜமாலுதீன் ஆப்கானி போன்ற அறிஞர்களின் படைப்புகளைப் படித்தபோது , ஆசாத்தின் சிந்தனையில் முதல் மாற்றம் ஏற்பட்டது. ஆரம்பத்தில், முஸ்லீம்கள் அனைவரையும் ஒன்றிணைக்கின்ற இஸ்லாமியம் என்ற கருத்து அவரை மிகவும் கவர்ந்தது. 1913ஆம் ஆண்டு முஸ்லீம் லீக்கில் சேர்ந்த ஆசாத், 1920 வரை அதில் உறுப்பினராக இருந்தார். அந்த காலகட்டத்தில், 1919இல் மௌலானா ஹுசைன் அஹ்மத் மதானியுடன் இணைந்து ஜாமியத் உல் உலமா இ ஹிந்த் உருவாக்கப்படுவதற்கான உந்துசக்தியாக ஆசாத் இருந்தார்.
ஆசாத் அரபு, பாரசீகம், உருது மற்றும் துருக்கி மொழிகளை நன்கு அறிந்தவர். பிஞ்சிலே முதிர்ந்தவராக பத்திரிகை தொடர்பான திறன்களையும் அவர் கொண்டிருந்தார். தனது முதல் செய்தித்தாள் அல்-மிஸ்பாவை தன்னுடைய 12ஆவது வயதில் அவர் தொடங்கினார். 1903ஆம் ஆண்டில், ஆசாத்தின் மாத இதழான லிசான் உஸ் சிட்க் (சத்தியத்தின் குரல்) பிரபலமடைந்தது. முஸ்லீம்களின் மறுமலர்ச்சி மற்றும் உலக அளவில் அவர்களின் அரசியலுக்கான சவால்களின் மீதே அவரது கவனம் இருந்து வந்தது. பிரிட்டிஷ் எதிர்ப்பு நிலைப்பாட்டை காரணம் காட்டி, அவரது அல்-ஹிலால் மற்றும் அல்-பாலாக் ஆகிய பத்திரிக்கைகளை 1914ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கம் தடை செய்தது. தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளான அவர், இந்திய பாதுகாப்பு சட்ட விதிகளின் கீழ் வங்காளத்தை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்.
1920இல் ராஞ்சி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் ஆசாத்தின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. காந்தியைச் சந்தித்த அவர் கிலாபத் இயக்கத் தலைவர்களுடன் கைகோர்த்து ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். இந்த இயக்கத்தில் உறுப்பினரான ஆசாத், முஸ்லிம் லீக்கிலிருந்து பிரிந்தார். கலாச்சார நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை மற்றும் சுதந்திரம் பற்றிய புதிய சிந்தனைகளை ஏற்றுக்கொண்ட ஆசாத், முழு மனதுடன் காங்கிரஸுடன் இணைந்து தனது பங்கையாற்றினார். 1923ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த காங்கிரஸின் சிறப்பு அமர்வுக்கு அவர் தலைமை தாங்கினார். 1924 மார்ச் மாதம் ஒஸ்மான்லி கலிபாவை கேமலிஸ்ட் ஒழித்ததன் மூலம் தூண்டப்பட்ட, ஆங்கிலேயர்களுக்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைக்கின்ற இஸ்லாமியத்திற்கு எதிரான ஒற்றுமைக்காக அல் ஹிலால் மற்றும் அல் பாலாக் பத்திரிக்கைகளை ஆசாத் நடத்தியது மாறி, இப்போது மதச்சார்பற்ற தேசம் மற்றும் மத ஒற்றுமை போன்ற புதிய மரபுத்தொடர்களால் நிரம்பியது. 1940ஆம் ஆண்டு தனது ராம்கர் உரையில், இந்தியாவின் வரலாற்றை ஹிந்துக்களும் முஸ்லீம்களும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக ஒத்து வாழ்ந்த கூட்டுவாழ்வு என்றே அவர் விவரித்திருந்தார்.
தீவிர அரசியலில் காந்தியின் நுழைவு ஆசாத்தின் அரசியல் பார்வையில் கடல் அளவு மாற்றத்தை ஏற்படுத்தியிருந்த அந்த வேளையில், ஒரு காலத்தில் “ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமையின் தூதர்” என்று அழைக்கப்பட்ட ஜின்னா முஸ்லீம் தேசியவாதியாக , பிராந்திய தேசியவாதியாக மாறினார். 1929ஆம் ஆண்டில் அவர் சுதந்திர இந்தியாவில் முஸ்லீம் நலன்களைப் பாதுகாப்பதற்கென்று பதினான்கு கோரிக்கைகளை அறிவித்தார். இந்த இரண்டு தலைவர்களில் தங்கள் பார்வையை முழுமையாக உணர்ந்து கொள்வதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பது எளிதான பதில்கள் இல்லாத கேள்வியாகவே இருக்கும்.
ஜவஹர்லால் நேரு, தொழிலதிபர் ஜம்னாலால் பஜாஜ், சரோஜினி நாயுடு, கான் அப்துல் கஃபர் கான் ஆகியோருடன் 1940ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் ராம்கர் அமர்வில் கலந்து கொண்ட ஆசாத் இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை நாட்டு மக்களிடையே, குறிப்பாக மாணவர்களிடம் பலத்த எதிர்ப்பைத் தூண்டியுள்ளது. இந்த சட்டம் ஏற்படுத்தப் போகின்ற முழு தாக்கங்களும் இன்னும் உணரப்படவில்லை என்றாலும், இது மிகவும் மோசமானதாக மாறக்கூடும் என்று இந்திய குடிமக்கள் பலரும் கவலைப்படுகிறார்கள்.
டிசம்பர் 20 அன்று, வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, ஆயிரக்கணக்கானவர்களின் முழக்கங்களுக்கிடையே மற்றொரு ஆசாத் ஜும்மா மசூதியில் தோன்றினார். பீம் சேனாவின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் தனது கையில் வைத்திருந்த இந்திய அரசியலமைப்பிலிருந்து சில பத்திகளை வாசித்தார். இந்த மசூதியில் இருந்துதான் “நீங்கள் எங்கே போகிறீர்கள், ஏன் போகிறீர்கள்? உங்கள் கண்களை உயர்த்திப் பாருங்கள். ஜும்மா மசூதியின் மினார்கள் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகின்றன. உங்கள் வரலாற்றுப் பட்டியலிலிருந்த புகழ்பெற்ற பக்கங்களை எங்கே தொலைத்தீர்கள்? உங்கள் வணிகர் கூட்டம் நேற்று யமுனைக் கரையில் சுத்தப்படுத்திக் கொண்டது உண்மை இல்லையா? ” என்று பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த முஸ்லீம்களிடம் மௌலானா ஆசாத் தன்னுடைய கேள்விகளைக் கேட்டார்.
டெல்லி ஜும்மா மசூதிக்கு அருகேதான் மௌலானா ஆசாத் புதைக்கப்பட்டார். அவருக்கு அருகே, ஜும்மா மசூதியைத் தாண்டி பதினாறாம் நூற்றாண்டின் ஆர்மீனிய ஆன்மீகக் கவிஞரான சர்மத் கஷானி அடக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு வந்த அவர் கொண்டிருந்த வழக்கத்திற்கு மாறான மதக் கருத்துக்கள், பேச்சு சுதந்திரத்தால் அவுரங்கசீப் அவரது வாழ்க்கையை முடித்து வைத்தார். தனது ஹயாத் இ சர்மத் ஷாஹீத்தில் அவரைப் பற்றி ஆசாத் மிக நேர்த்தியாக எழுதியுள்ளார். அவர் மூலமாகவே அபுல் கலாம் (பேச்சின் தந்தை) என்றும் ஆசாத் (சுதந்திரம்) என்றும் ஆசாத் அடையாளம் காணப்பட்டார். தலை துண்டிக்கப்படுவதற்கு முன்பாக, சர்மத் பின்வரும் பாரசீக கவிதையை இயற்றினார்:”கூச்சல் எழுந்தது, ஆழ்ந்த தூக்கத்திலிருந்த நாம் கண்களைத் திறந்தோம்; துன்மார்க்கத்தின் இரவு நீடிக்கிறது என்பதைக் கண்ட நாம் மீண்டும் தூங்கிப் போனோம் ". அந்த வாள் சர்மத் மீது விழுந்தது.
இந்த துயரம் எப்போது முடிவடையும் என்று யாருக்குத் தெரியும்? இந்த கூச்சல் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எச்சரித்து மக்களை எழுப்பி, துண்டாடப்படாமல் நமது தலைகளைப் பாதுகாக்குமா? “சகோதரர்களே, மாற்றங்களை ஏற்றுக் கொள்ளத் தயாராகுங்கள். ‘மாற்றத்திற்கு நாங்கள் தயாராக இல்லை’ என்று சொல்லாதீர்கள். தயாராகுங்கள். நட்சத்திரங்கள் வீழ்ந்திருக்கலாம், ஆனால் சூரியன் இன்னும் பிரகாசித்துக் கொண்டுதான் இருக்கிறது. சூரியனிடமிருந்து சில கதிர்களை கடன் வாங்கி, அவற்றை உங்கள் வாழ்க்கையின் இருண்ட குகைகளுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்” என்ற உணர்ச்சிவசப்பட்ட ஆசாத்தின் வேண்டுகோள்களை ஜும்மா மசூதியின் மினாரெட்டுகள் இன்று நமக்கு நினைவுபடுத்துகின்றன.
பாரபட்சமான குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, மகிழ்ச்சியடைந்த பாகிஸ்தான் ட்விட்டர் பயனாளிகள், #ThankYouJinnah என்பதை ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தினர். “பாகிஸ்தான் உருவாவதை எதிர்க்கின்ற முஸ்லீம்கள், இந்தியாவிற்கான தங்களுடைய விசுவாசத்தைக் காட்டி நிரூபிப்பதற்காக தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவிட வேண்டியிருக்கும்” என்று ஜின்னாவை மேற்கோள் காட்டி நூற்றுக்கணக்கான சமூக ஊடகப் பதிவுகள் விவரித்திருந்தன.
நமது இதயங்கள் கனக்கின்றன. முதுகெலும்பு நொறுக்கப்பட்ட ஆசாத் மற்றும் இந்தியாவின் மதச்சார்பின்மையின் பிம்பங்கள் நம்மை உற்றுப் பார்க்கின்றன. இந்தியாவின் மதச்சார்பற்ற முதுகெலும்பை நேர்நிறுத்துவதற்கான போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மரியம் சிக்கந்தர், லண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள SOAS, தெற்காசியா துறையில் முனைவர் பட்ட ஆய்வாளர்.
- தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு