tamilnadu

img

ஜூன் 23-ல் இந்திய-சீன-ரஷ்ய அமைச்சர்கள் ஆலோசனை

புதுதில்லி,ஜூன் 19- இந்திய, சீன, ரஷ்ய நாடுகளின் அயல்துறை அமைச்சக ஆலோசனைக்கூட்டம் ஜூன் 23 ஆம் தேதி காணொலிக்காட்சி மூலம் நடைபெறவுள்ளது. முத்தரப்பு அமைப்பான ஆர்ஐசி அமைப்பின் தலைவராக தற்போது ரஷ்யா உள்ளது.  ஜூன் 23 கூட்டத்தில் உலகளாவிய கொரோனா தொற்று குறித்து மட்டும் விவாதிக்கப்படும் என்றும் பரஸ்பர பிரச்சனைகள் எதுவும் விவாதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ரஷ்ய அயல்துறை அமைச்சர் ஷெர்ஜி லாவாரோவ், சீன அயல்துறை அமைச்சர் வாங் யி, இந்திய அயல்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

லடாக் பகுதி கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15 ஆம் தேதி இந்திய, சீன துருப்புகள் இடையே கடும் மோதல் நடந்த பின்னணியில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதை இந்திய அயல்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிசெய்துள்ளார்.  இரண்டாவது உலகப்போரில் நாசிசத்தை தோற்கடித்தது மற்றும் ஐ.நா.அமைப்பு ஏற்படுத்தப்பட்ட தன் 75 ஆம் ஆண்டையொட்டி இந்த சிறப்புக்கூட்டம் நடத்துவதாக ரஷ்ய அயல்துறை அமைச்சர் கூறியுள்ளார். கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் பரஸ்பர அனுபவங்களை பகிர்ந்துகொண்டு ஒத்துழைக்க இந்த கூட்டம் உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.