புதுதில்லி:
நடப்பு 2020-21 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மைனஸ் 9 சதவிகிதம் அளவிற்கு வீழ்ச்சி அடையும் என்று எஸ் & பி (Standard & Poor’s) தர மதிப்பீட்டு நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.மைனஸ் 5 சதவிகிதம் வீழ்ச்சி என்ற தனதுமுந்தைய கணிப்பையும் மாற்றிக் கொண்டது. இந்நிலையில், இந்தியப் பொருளாதாரம் தற்போதைக்கு மீண்டுவர வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ள நிறுவனம், இந்தியாவுக்கான கடன் மதிப்பீட்டைப் பொறுத்தவரையில் நீண்ட கால அடிப்படையில் ‘பிபிபி’(BBB)’ என்றும், குறுகிய கால அடிப்படையில் ஏ-3 (A-3) என்றும் குறைத்துள்ளது.
அதுவும் அந்நியச் செலாவணி கையிருப்பு நிலை சற்று மேம்பட்டதால்தான் இந்த மதிப்பீடு வழங்கப்படுவதாகவும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேலும் குறையும் பட்சத்தில் இந்தியாவின் கடன் மதிப்பீட்டை மேலும் குறைக்க வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் எஸ் & பி நிறுவனம் தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில் பெரும்விளைவுகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவைக் கடுமையாகப் பாதித்துள்ளதாகவும், ஆனால், கொரோனா வருவதற்கு முன்னரே இந்தியப் பொருளாதார வளர்ச்சி மோசமான நிலையில்தான் இருந்தது என்றும் எஸ் & பி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.கொரோனா பாதிப்பிலிருந்து இந்தியா மீண்டு வருவதற்கு பொருளாதாரச் சீர்திருத்தங்களும், முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளை உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் எஸ்&பி நிறுவனம் இந்தியாவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.