குவாலியர்:
கோட்சே-வை தேசியவாதி என்பவர்கள், இந்துக்களாக இருக்க முடியாது என்று சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த் சரஸ்வதி கூறியுள்ளார்.
இந்து மகாசபையின் செயலாளரான பூஜா சகுன் பாண்டே, கடந்த ஜனவரி 30-ஆம் தேதி, காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளில், மீண்டும் காந்தி உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்டு, ‘நினைவுதினம்’ கொண்டாடினார். அப்போது ‘கோட்சே வாழ்க’ என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டு, இனிப்புகளும் வழங்கப்பட்டன.இதற்கு அடுத்ததாக, போபால் தொகுதியின் தற்போதைய எம்.பி.யும், பாஜகவைச் சேர்ந்த பெண் சாமியாருமான பிரக்யா சிங் தாக்கூரும், கோட்சேவை ‘தேசியவாதி’ என்று புகழ்ந்தார். அவரைத் தொடர்ந்து இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த வேறுசிலரும் ‘கோட்சே மட்டுமே உண்மையான தேசியவாதி’ என்றும், மகாத்மா காந்தி பாகிஸ்தான் நாட்டுக்குத்தான் தேசத் தந்தையாக இருக்க முடியும் என்றும் கருத்துக்களை வெளியிட்டனர்.
இந்நிலையில்தான், குவாலியர் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள துவாரகா பீடத்தின் சங்கராச்சாரியாரான ஸ்வரூபானந்த சரஸ்வதி, ‘கோட்சேவை தேசியவாதி என்பவர்கள் இந்துவாக இருக்க முடியாது’ என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.“காந்தி எந்தவொரு ஆயுதமும் எடுக்காமல் போராட்டம் நடத்தியவர். அவர் தனது கொள்கைகளைத் தவிர, ஆயுதம் என்று வேறெதையும் கையில் எடுத்ததில்லை. வன்முறை கூடாது என்று இந்து மதம் கூறியதை வாழ்நாள் முழுவதும் அவர் கடைப்பிடித்தார்.
அப்படிப்பட்ட காந்தியை, துப்பாக்கியால் சுட்டுக் கொன்று வன்முறை நிகழ்த்தியவர் கோட்சே. ஆனால், இவரை இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் தேசியவாதி என்று புகழ்கின்றனர்.
ஆயுதம் மற்றும் வன்முறையைக் கையில் எடுத்த கோட்சேவைப் புகழ்பவர்கள் நிச்சயமாக இந்துக்களாக இருக்க முடியாது” என்று ஸ்வரூபானந்த சரஸ்வதி குறிப்பிட்டுள்ளார்.95 வயதாகும், சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர். மகாத்மா காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டு சிறையிலும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.