கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தாய்ப்பால் தருவதால் கொரோனா தொற்று பச்சிளம் குழுந்தைகளுக்கு பரவாது என ஜிப்பர் மருத்துவ மனையின் பச்சிளம் குழந்தைகள் பிரிவு தலைவர் ஆதி சிவம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது,
"தாய்ப்பால் குடித்து வரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியும், மூளை வளர்ச்சியும் நன்றாக இருக்கும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, நெஞ்சில் சளி, காதில் சீழ் போன்ற பொதுவான நோய்த்தொற்றுகள் ஏற்படாது. பச்சிளங் குழந்தைகளுக்கு மாட்டுப்பால், கிரைப் வாட்டர், பால் பவுடர் போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது. தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும், சேய்க்கும் இடையே பாசப்பிணைப்பு நன்றாக இருக்கும். தாய்ப்பால் கொடுக்கும் அன்னைக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படும்.
கொரோனா காலத்திலும் பச்சிளங் குழந்தைக்கு ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். தாய்ப்பால் மூலம் கொபரவாது. அக்கிருமியை எதிர்க்கும் சக்கி தாய்ப்பால் மூலம் குழந்தைக்குக் கிடைக்கும். கொரோனா தொற்று பாதிப்பு தாய்க்கு இருந்தாலும் தாயையும், சேயையும் பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை. தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னர், தங்கள் கைகளைச் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் அன்னையர் முகக்கவசம் அணிய வேண்டும். அவர்கள் வழக்கம்போல் தாய்ப்பால் தரலாம்.
ஜிப்மரில் 'அமுதம் தாய்ப்பால் மையம்' உள்ளது. பாலூட்டும் அன்னையர் அனைவரும் தாய்ப்பால் தானம் தரலாம். தங்கள் குழந்தைகளுக்குக் கொடுத்தது போக எஞ்சிய தாய்ப்பாலை வங்கிக்குத் தானம் தருவதால் அன்னைக்கு எப்பிரச்சினையும் ஏற்படாது. மாறாக அவர்களுக்குப் பால் சுரப்பது அதிகரிக்கும். தாயை இழந்த குழந்தைகளும், தாயிடமிருந்து தற்காலிகமாகப் பால் கிடைக்காத குழந்தைகளும் இதனால் பயன் அடைவார்கள். தானம் பெறப்பட்ட தாய்ப்பாலை நன்கு கொதிக்க வைத்துப் பதப்படுத்துவதால் அதிக கிருமிகள் இருக்க வாய்ப்பில்லை. சுத்திகரிக்கப்பட்ட தாய்ப்பால் பரிசோதிக்கப்பட்ட பின்னரே குழந்தைக்குத் தரப்படும்.
தாய்ப்பால் கொடுப்பதும், பெறுவதும் அவரவர் சொந்த விருப்பமேயாகும். இதில் பணப் பரிமாற்றம் ஏதும் கிடையாது" இவ்வாறு ஆதிசிவம் தெரிவித்தார்.