மத்தியக் குழு, கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவினைச் சரிசெய்வதற்காக எண்ணற்ற நடவடிக்கைகளையும் கடமைகளையும் நிறைவேற்றி இருக்கிறது.
மக்களிடம் மிகவும் நெருக்கமாகச் செல்லக்கூடிய விதத்திலும், எண்ணற்ற முன்னணிகளின் நடவடிக்கைகளை வலுப்படுத்தக்கூடிய விதத்திலும் குறிப்பிட்டு நடவடிக்கைகள் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன.
மக்களின் வாழ்வாதாரங்கள் பிரச்சனை தொடர்பான போராட்டங்களை, தலித்துகள்/பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் ஆகியோரின் மீதான சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களுடனும் இணைத்திடவும் குறிப்பிட்டு, தனிக் கவனம் செலுத்தப்படும். 2015இல் கொல்கத்தாவில் நடைபெற்ற கட்சியின் பிளீனத்தில் நிறைவேற்றப்பட்ட கட்சி ஸ்தாபனம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்த முக்கியமான முடிவுகள் அமல்படுத்தப்பட்டமை குறித்து ஓர் ஆய்வு மேற்கொள்ளப்படும். அந்த ஆய்வின் அடிப்படையில், (இவை மாநிலக் குழுக்களால் ஆகஸ்ட் இறுதிக்குள் நிறைவு செய்யப்படும்) கட்சியை வலுப்படுத்துவதற்கான விதத்திலும் மற்றும் முன்னணி ஊழியர்களை ஊக்குவிக்கும் விதத்திலும் எதிர்கால நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படும்.
இத்தேர்தல் அனுபவங்கள், தேர்தல் ஆணையத்தை சீர்திருத்த வேண்டியதன் உடனடித் தேவையுடன் தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டுவருவதன் அவசியத்தையும் காட்டியிருக்கின்றன. தேர்தல் ஆணையாளர்கள், குடியரசுத் தலைவரின் தலைமையின் கீழான கொலிஜியம் முறையால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதையும் இப்போது உள்ளதுபோல் ஆட்சியாளர்களால் நியமனம் செய்யப்படக்கூடாது என்பதையும் உத்தரவாதப்படுத்திட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து அரசியல் சக்திகளையும் அணிதிரட்டிடும்.
மின்னணு வாக்கு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்தும், இந்த எந்திரங்களில் தில்லுமுல்லுகள் மேற்கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் எண்ணற்ற முறையீடுகள் எழுந்துள்ளன. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதர அரசியல் கட்சிகளுடன் இணைந்து ஓர் ஆய்வினை மேற்கொள்ளும். இதன் மீதான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் தீர்மானித்திடும்.
தேர்தலுக்குப்பின்னர் மதச்சார்பற்ற அறிவுஜீவி டாக்டர் ராம் புனியானிக்கு மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருப்பதனை மத்திகயக் குழு கண்டிக்கிறது.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவி, டாக்டர் பயல் டட்வி, தற்கொலை செய்துகொண்டுள்ளது குறித்து மத்தியக் குழு ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திக் கொள்கிறது. சாதி வெறியின் அடிப்படையில் அவருக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தல்களின் அடிப்படையில் அவர் தற்கொலை செய்யத் தள்ளப்பட்டிருக்கிறார். இவர் தற்கொலை செய்துகொள்வதற்குக் காரணமாக இருந்த கயவர்களுக்கு எதிராகவும், இதற்காக வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் மகாராஷ்ட்ர மாநில அரசு உறுதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும்.