நாட்டிலுள்ள விமான நிலையங்கள் பலவற்றைத்தனியாரிடம் ஒப்படைத்திட மத்திய அரசுமுன்வந்திருப்பதற்கு, மத்தியத் தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக மத்தியத் தொழிற்சங்கங்களான சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உட்பட அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்களும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
2020 ஆகஸ்ட் 18க்கு அறிவிப்புக்குப்பின்னர், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மத்திய அமைச்சரவைக்கு முன், ஆகஸ்ட் 19 அன்று ஜெய்பூர், குவஹாத்தி, திருவனந்தபுரம் ஆகியவற்றை பி-பி-பி (பொது-தனியார்-ஒத்துழைப்பு) மாடலில் தனியாரிடம் ஒப்படைத்திட, முன்மொழிவினை வைக்க இருப்பதாகவும், அதனை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொள்ளும் என்றும் கூறியிருக்கிறார். இதுவரை நாட்டிலுள்ள 12 விமான நிலையங்கள் இவ்வாறு தனியாரிடம் ஒப்படைத்திட முடிவு செய்யப்பட்டுள்ளன. லக்னோ, அகமதாபாத், ஜெய்பூர், மங்களூரூ, திருவனந்தபுரம், குவஹாத்தி ஆகியவை மேற்கண்டவாறு பிப்ரவரியிலும், அமிர்தசரஸ், வாரணாசி, புவனேஷ்வர், இந்தூர், ரெய்பூர், திருச்சி ஆகியவை செப்டம்பரில் ஒப்படைக்கப்படவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அனைத்து விமான நிலையங்களும் அதானி குழுமத்திற்கே இதுவரை ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.
ஒரு தனிப்பட்ட தனியார் நிறுவனத்திற்கே அனைத்து விமான நிலையங்களும் ஒப்படைக்கப்படுவது, அது அதன் ஏகபோகத்திற்கு இட்டுச்சென்று, பயணிகளிடமும், விமான நிறுவனங்களிடமும் மேலும் ஒட்டச்சுரண்டுவதற்கு வழிவகுத்திடும். ஏற்கனவே மும்பை மற்றும் தில்லி விமான நிலையங்களில் இந்திய ஏர்போர்ட் அத்தாரிட்டி நிறுவனத்திற்கு வரவேண்டிய வருவாயில் கணிசமான அளவிற்குக் கசிவு ஏற்பட்டிருக்கும் கசப்பான அனுபவம் நமக்கு உண்டு. எனவே, விமான நிலையங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவினை உடனடியாக நிறுத்த வேண்டும். ஏனெனில் இது பயணிகள் மற்றும் விமான நிறுவனங்களின் செலவுகளை அதிகரித்திடும்.
இந்திய ஏர்போர்ட் அத்தாரிட்டி என்னும் அரசு நிறுவனம் நாட்டில் 100க்கும் மேற்பட்ட விமான நிலையங்களைச் சொந்தமாக நிர்வகித்து வருகிறது. இவற்றில் எதுவும் நஷ்டத்தில் இயங்கவில்லை. இந்தியாவின் முதல் சர்வதேச விமான நிலையமான திருவனந்தபுரம் விமான நிலையம், ஒவ்வோராண்டும் 125 கோடி ரூபாய் லாபம் ஈட்டிவருகிறது. கேரள அரசாங்கம் அதனைத் தாங்கள் ஏற்று நடத்துவதாகக் கூறுகிறது. இப்போது இந்தப் பிரச்சனை நீதிமன்றத்தின் முன் நிலுவையில் இருக்கிறது. எனினும் மத்திய அரசாங்கம் கேரள அரசாங்கத்தை முன்கூட்டியைத் தடுத்துநிறுத்த முயற்சித்துக்கொண்டிருக்கிறது. கேரள மாநில சட்டமன்றத்தில் ஆகஸ்ட் 24 அன்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் இவ்வாறு அதானி குழுமத்திற்கு விமான நிலையத்ரைத ஒப்படைப்பதற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி இருக்கிறார்கள். இது மத்தியில் உள்ள பாஜக அரசாங்கத்தின் முகத்தின்மீது கொடுக்கப்பட்ட அறையாகும்.
இப்போது, ஆகஸ்ட் 21 அன்று, ஐஆர்சிடிசி எனப்படும் அரசு நிறுவனத்திலும் அதிக அளவில் பங்குகளைத் தனியாரிடம் ஒப்படைத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
மத்திய அரசு இவ்வாறு நாட்டின் சொத்துக்களைத் தங்களுடைய கூட்டுக்களவாணித் தனியார் முதலாளிகளிடம் ஒப்படைத்திடத் துடித்துக் கொண்டிருப்பதற்கு மத்தியத் தொழிற் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றன. இது பயணம் செய்திடும் சாமானிய மக்களின் நலன்களுக்கு எதிரானது என்று எச்சரிக்கின்றன. இந்த முன்மொழிவுகள் அனைத்தையும் மத்திய அரசு விலக்கிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
இவ்வாறு மத்தியத் தொழிற்சங்கங்கள் அறிக்கையில் கூறியுள்ளன.