1956 - இந்தியாவின் மாநில மறுசீர மைப்புச் சட்டம் நடை முறைக்கு வந்தது. வரலாறு முழுவதும் பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த, ஏராளமான அரசர்களாலும், சிற்றரசர்களாலும் ஆளப் படுவதாகவே இந்தியத் துணைக்கண்டம் இருந்து வந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் இவை பெரும்பாலும் மாற்றியமைக்கப்படவில்லை. ஒப்பந்தங்களின்மூலம் இணைந்திருந்த மன்னராட்சிப் பகுதிகள், பிற நாடுகளுடனான உறவைத் தவிர மற்றவற்றில் தன்னாட்சியுடன் இருந்தன.
நேரடியாக ஆங்கிலேயரின் ஆளுகையின்கீழிருந்த பகுதிகள் மாநிலங்களாக (பிரெசிடென்சி) பிரிக்கப்பட்டிருந்தன. ஒரிசாவில் 1895இல் ஏற்பட்டதே முதல் மொழி அடிப்படையிலான மாநிலத்துக்கான கோரிக்கையாகும். 1912இல் வங்கத்திலிருந்து பிரிக்கப்பட்டு, பீகார்-ஒரிசா மாநிலம் உருவாக்கப்பட்டதுடன், 1936இல் தனி ஒரிசா மாநிலமே உருவாக்கப்பட்டது. 1947இல் விடுதலைக்குப்பின், இந்திய ஒன்றியத்துடன் இணையத் தொடங்கிய மன்னராட்சிப் பகுதிகள் பெரும்பாலும் மாநிலங்களுடன் இணைக்கப் பட்டாலும், சில பகுதிகள் தனியாக, ராஜ்பிரமுக் என்ற பதவியுடன் பழைய அரசர்களாலும், மத்திய அரசு நியமித்த தலைமை ஆணையர்களாலும் நிர்வகிக்கப்பட்டன.
அந்தமான்-நிக்கோபார் தீவுகள் மட்டும் துணைநிலை ஆளுனரால் நிர்வகிக்கப்பட்டது. 1950இல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியல் சட்டம், நாடுகளின்(மாநிலங்களின்) ஒன்றியமே இந்திய அரசு என்று வரையறுத்தது. மெட்ராஸ் மாநிலத்திலிருந்த தெலுங்கு பேசும் பகுதிகளைப் பிரித்து, ஆந்திர மாநிலம் உருவாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் உண்ணாவிரதமிருந்து, பொட்டி ஸ்ரீராமுலு 1952 டிசம்பரில் உயிரிழக்க, அம்மாநிலத்தை 3 நாட்களில் அறிவித்தார் நேரு. மொழிவாரி மாநிலங்களுக்கான ஆணையம் 1948இலேயே அமைக்கப்பட்டிருந்த நிலையில், 1953இல் மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மாநில மறு சீரமைப்புச் சட்டம் 1956 அக்டோபர் 31இல் நிறைவேற்றப் பட்டு, நவம்பர் 1இல் நடைமுறைக்கு வந்தது. மெட்ராஸ் மாநிலத்திலிருந்து மலபார் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகள் திருவாங்கூர்-கொச்சியுடன் இணைக்கப்பட்டு, கேரளா என்ற மாநிலம் உருவாக்கப்பட்டது. திருவாங்கூர்-கொச்சியிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் பிரிக்கப்பட்டு மெட்ராசுடன் இணைக்கப்பட்டது.
குடகு உள்ளிட்ட கன்னடம் பேசும் பகுதிகள் மெட்ராசிலிருந்து பிரித்து மைசூருடன் இணைக்கப்பட்டு மைசூர் மாநிலமாகியது. ஹைதராபாத் இணைக்கப்பட்டு, ஆந்திரா, ஆந்திரப் பிரதேசமாகியது. மத்திய பாரதம் என்பதுடன் சில பகுதிகள் இணைக்கப்பட்டு மத்தியப்பிரதேசம் உருவாக்கப்பட்டதுடன், அசாம், பம்பாய் உள்ளிட்ட மாநிலங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. பலமுறை முயற்சித்து, தோல்வியுற்ற தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம், அண்ணாத்துரை முதலமைச்சரானபின் தமிழ்நாட்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, 1969 பொங்கலன்று நடைமுறைக்குவந்தது.