1282 - ஆர்வின் பாலம் என்ற இடத்தில் நடைபெற்ற யுத்தத்தில், வேல்சின் கடைசி சொந்த நாட்டு இளவரசர் லைவலின் கொல்லப்பட்டமை, வேல்ஸ் நிரந்தரமாக இங்கிலாந்தின் கட்டுப்பாட்டின்கீழ்வரக் காரணமாகியது. (வேல்ஸ் என்பது இளவரசரால் ஆளப்படும் வேள்பகுதியாகவே பொதுவாக இருந்துள்ளது.) கி.பி.43இல் இங்கிலாந்தின்மீது படையெடுத்த ரோமானியர்கள், அதன் மேற்கிலுள்ள வேல்சுக்குள் 48இல் நுழைந்து, அடுத்த 30 ஆண்டுகளுக்குள் முழுமையாகக் கைப்பற்றினர். அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு ஆட்சிசெய்த ரோமானியர்கள், 383இல் வெளியேறியதற்குப் பிந்தைய சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கு, வேல்ஸ் பல சிறு நாடுகளாகப் பிரிந்து கிடந்தது. இவற்றை ஆண்ட மரபுகளுக்கிடையே நடைபெற்ற திருமணங்கள்மூலம் ஒன்றிணைந்து,
1039இல் முழு வேல்சுக்கும் முதல் (கடைசியும்!) அரசராக க்ரஃபைட் ஆனார். 1066இல் முழுமையாக நோர்மன்களின் கட்டுப்பாட்டுக்குள் இங்கிலாந்து வந்ததையடுத்து, இங்கிலாந்திற்கு நோர்மண்டி மரபின் முதல் அரசராக முதலாம் வில்லியம் ஆனார். இவர், வேல்ஸ் பகுதியில் எல்லைகளைப் பாதுகாக்க ‘மார்ச்சர் லார்ட்’ என்றழைக்கப்பட்ட பிரபுக்களை நியமித்தார். அடுத்த சில ஆண்டுகளில் இவர்கள் வேல்சின் பகுதிகளை ஆக்கிரமிக்கத் தொடங்கினர். இவர்களது கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகள் இங்கிலாந்திற்கும், வேல்சுக்கும் இடையிலமைந்திருந்ததால், இரு நாடுகளின் சட்டங்களுக்கும் அப்பாற்பட்டவர்களாயினர்.
இவர்களுக்கும், வேல்சின் அரச மரபுகளுக்குமிடையே திருமணங்கள் நடைபெற்ற நிலையில், வேல்சைக் கைப்பற்ற இங்கிலாந்து பலமுறை முயற்சித்துத் தோற்றது. லைவலினுக்கும், இங்கிலாந்தின் முதலாம் எட்வர்ட் அரசருக்கும் பல ஆண்டுகளாகப் போர் நடைபெற்றுக்கொண்டிருக்க, லைவலின் மணக்கவிருந்த, எட்வர்டின் உறவிரான, எலீனார் ஃப்ரான்சிலிருந்து கப்பலில் வந்தபோது கடற்கொள்ளையர்களைக் கொண்டு அவரை எட்வர்ட் சிறைப்பிடித்ததார். இதனால், லைவலின் இறந்தபின் வேல்சின் தன்னாட்சி முடிவுக்குவரும் என்ற கட்டுப்பாட்டுடன், இங்கிலாந்தின் ஆளுகைக்குட்பட்ட தன்னாட்சி என்ற ஒப்பந்தந்தத்தை 1277இல் லைவலின் ஏற்கவேண்டியதாயிற்று. ஆனாலும், வேல்சின் பிற பகுதிகளின் சிறு இளவரசர்கள் லைவலினுக்கு எதிராக இருந்ததைப் பயன்படுத்திக்கொண்டு, எட்வர்ட் போர் தொடுத்தபோதுதான் லைவலின் கொல்லப்பட்டு வேல்ஸ் இங்கிலாந்தின் பிடிக்குள் சென்றது.
- அறிவுக்கடல்