tamilnadu

img

ஜலதரங்கம் வாசிக்கும் ஜாஃப்ரி ஏரி - நா.வே.அருள்

பயணக்குறிப்பு

கனடாவின் வான்கூவர் நகரத்தில் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் சாலைகளிலும் நடக்கிறபோது ஒன்றைக் கவனிக்க முடிந்தது. அதிகம் பிச்சைக்காரர்களைப் பார்க்க முடிவதில்லை.  ஒருமுறை மையப் பேருந்து நிலையத்தில் ஒரு ஓரமாக ஒரு பெண்மணியைப் பார்க்க முடிந்தது.  அவரும் ஒரு அட்டையில் எழுதி கவுரவமாகப் பிச்சை கேட்டு அமர்ந்திருந்தார்.  அப்படிப் பிச்சை எடுப்பவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பவர்களைப் போல தோற்றமளித்தனர்.  ஒருவேளை நான் பார்த்த ஓரிரண்டு நபர்கள் அத்தகையவர்களோ என்னவோ.  ஓரிருவரைத் தவிர அதிக நபர்களைப் பார்க்க முடியவில்லை.  ஒருமுறை ஒருவர் மிக போஷாக்கான நாய் ஒன்றினைக் கொஞ்சிக்கொண்டு ஒரு மெட்ரோ ரயில் தாழ்வாரத்தில் உட்கார்ந்திருந்தார்.  எதிரே குளிரினைத் தாங்கும் வகையிலான படுக்கை. அந்தப் பிச்சைக்காரரின் நாய் பராமரிப்பு எனக்கு  ஆச்சரியத்தை அளித்தது. இன்னொரு இடத்தில் முகத்தைத் தாடிப் புதர்கள் அடர்ந்திருக்க, படுக்கையில் மிகக் கனமான புத்தகம் ஒன்றினைப் படித்துக்கொண்டிருந்தார் ஒருவர். புத்தகம் படித்துக்கொண்டிருக்கும் பிச்சைக்காரரை அங்குதான் பார்க்க முடிந்தது. வாழ்க்கை ஓர் வாசிப்பாளனைக் கைவிட்டிருக்கிறது. ஆனால் நம் நாட்டைப்போல பேருந்து நிலையம், மெட்ரோ நிலையங்கள் பிச்சைக்காரர்களின் வாசஸ்தலங்களாக இருக்கவில்லை.

கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெரிய நகரமாக விளங்குவது வான்கூவர்.  இயற்கை எழில் நிறைந்த பிரதேசம். எங்கெங்கும் பச்சைப் பசேலென மரகதப் பாய் விரிக்கப்பட்ட புல்வெளிப் பிரதேசம்.  கறுப்பு நிறத்தில் அணில்களும் முயல்களும் ஒவ்வொரு பூங்காவிலும் பார்க்கலாம்.  பூங்காவை எப்படிப் பராமரிப்பது என்பது இவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய கலை.  அழகழகான செடிகொடிகள், புன்னகைக்கும் பூக்கள், வெட்டி நேர்செய்யப்பட்டப் புதர்கள், தாவர மலைகள்போன்ற மரங்கள்.  உள்ளே போனால் வெளிவரவே தோன்றாது.

வான்கூவரிலிருந்து மூன்று மணிநேரத்தில் பெம்பர்ட்டன் பகுதியிலுள்ள ஜாஃப்ரி ஏரிக்குப் போகலாம்.  போகிற வழியில் மூன்று மணிநேரமும் நமக்குப் பார்க்கக் கிடைப்பது பச்சை சொர்க்கம்.  மரங்கள் என்றால் வகை வகையான மரங்கள்.  பெரும்பாலும் மேப்பிள் மரங்கள்.  அதனால்தான் மேப்பிள் இலை கனடாவின் தேசிய சின்னமாகவே இருக்கிறது. எங்கெங்கெல்லாம் சாலைகளில் பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கிறதோ, அல்லது சுற்று வேலிகள், எல்லாமே மரங்களால் ஆனவை.  பிரதான நகரங்களின் சாலை ஓரங்களில் மண் தரையைப் பார்க்க முடியாது.  மரத்தூள்களைக் கொட்டி வைத்திருப்பார்கள்.  அதனால்தான் தூசு இல்லாத நகரமாக இருக்கிறது.   அழகின் குவியல்களாக அங்கங்கும் மலைகள்.  மலைகளை வெள்ளையடிக்க நினைத்துத் தோற்றுப்போனதுபோல் தெரியும் அதன்மேல் திட்டுத் திட்டாக இருக்கும் பனிப்பாளங்கள். வானம் உட்காருவதற்காகத் திட்டுத் திட்டாகப் போடப்பட்ட பனிப்பாளப் பாய்களாக கிளேசியர்கள். மலையுச்சிகள் இயற்கையின் ஊஞ்சல்கள்போலக் காட்சியளிக்கின்றன. இயற்கை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாகத் தோற்றம் தரும்.  கனடாவிலோ அது நிர்வாணமாகக் காட்சி தரும். பருவ நிலை இயற்கையைக் கட்டிலுக்குத் தயார்படுத்துவதுபோலத் தயார்படுத்திவிடுகிறது.

 ஜாஃப்ரி ஏரியை வந்தடைகிறோம்.  கீழ், நடு மற்றும் மேல் ஏரிகள் மலையின் மடியில் அமுத ஏரியாக அலைபாய்கிறது.  பெம்பர்டன் பகுதியின் வடக்குப் பக்கமுள்ள துஃபே ஏரிச் சாலையிலிருந்து ஒரு சில நிமிடங்களிலேயே கீழ் ஏரியைக் கண்டு களிக்கலாம்.  மலையின் அடிவாரத்தில் ஒரு மிகப் பிரம்மாண்டமான பச்சை சேலைதான் கீழ் ஏரி.  அங்கிருந்து திரும்பி ஏரிக்கு இடதுபுற காட்டுப் பாதையில் நடக்க ஆரம்பித்தால் மூன்றரை கி.மீ தூரத்தில் நடு ஏரி. ஒரு சிறு மரப்பாலத்தைக் கடந்து செல்ல வேண்டும். அடுத்த ஐந்து நிமிடங்களில் காட்டுப் பாதை மலை மீது ஏறத் தொடங்கும்.  குறுகிய பாதை ஒடுங்கலாக இருந்தாலும் ஏற முடிகிற அளவில் லகுவாகத்தான் இருக்கும். கால்களுக்கு சாகசம், கண்களுக்குத் தீவனம்.  ஏறுகிறபோது ஜாஃப்ரி அருவி இடதுபுறமாக ஓடும். அங்கிருந்து கீழ் ஏரி ஒரு பெரிய குளத்தைப்போலக் காட்சியளிக்கும்.  இன்னும் சிறிது தூரம்.  சமதளத்தில் நடந்து செல்லும் வகையில் பாதை.  இப்படியே நடந்தால் இருபது நிமிடங்களில் இரண்டாவது சொர்க்கத்தை அடையலாம். முதலில் மரங்களுக்கு நடுவில் கூச்சத்துடன் ஏரி குளித்துக்கொண்டிருக்கிற மாதிரி தோன்றும். எதிரே போய் நின்றால் நிர்மலமான காட்சி.  கீழ் ஏரியை விட இன்னும் சுத்தமாக, வெளிர் பச்சை வண்ணம். அங்கிருந்தபடியே கொஞ்சம் நிமிர்ந்தால் பளபளக்கும் பனிப்பாளங்கள். தகத்தகாயத் தகடுகள். அங்கிருந்து  நகர மனம் வராது. கால் விடாது.

நடு ஏரிக்கு முன்புறம் கொஞ்ச தூரத்தில் ஒரு மரப்பாலம். தொடரும் காட்டுப் பாதை. வழியில் நீரில் மிதக்கும் பெரிய மரம்.  அதன் மீது நடக்க வேண்டும்.  மேல் ஏரியையும் நடு ஏரியையும் இணைக்கும் ஆற்றுக்கருகில் மீண்டும் ஓர் அருவி.  மீண்டும் காட்டுப் பாதையில் நடக்க ஆரம்பித்தால் பதினைந்து நிமிடங்களில் ஒரு மரப்பாலத்தைக் கடந்தபின் மரங்களுக்கு மத்தியில் அழகான ஏரியை காணமுடியும்.   மேல் ஏரியைச் சுற்றி கொஞ்சம் நடந்தபின் மீண்டும் பாறைகளாலும் வேர்களாலும் பிணைந்த குறுகிய காட்டுப் பாதையை அடையலாம்.  அங்கிருந்து மேல் ஏரியையும் எதிரே  தக தகவென தகக்கும் பனிப்பாளங்களையும் கவர்ச்சி மிகுந்த கருநிற மலை காட்சிப்படுத்திக்கொண்டிருக்கும். பனித்தகடுகளுக்குக் கீழே ஏரியின் முடிவில் கேம்ப் அடித்துத் தங்குமிடங்கள் உள்ளன.  அங்கு உணவு அருந்தியபடியே அருவியையும் ஏரியையும் பார்த்து ரசிக்கத் தொடங்கினால் லோகத்திலேயே சொர்க்கம் இருக்கிறது என்பதை எல்லோரும் நம்பலாம். என்ன அங்கு போவதற்குக் கொஞ்சம் பணம் வேண்டும்.  பணம் வைத்திருந்தாலும் அங்கு போகவேண்டும் என்ற மனம் வேண்டும்.

-பயணிப்போம்