நாடு முழுவதும் வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்கள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் சூழலில் இடதுசாரிகளின் ஆட்சியின் கீழ்உள்ள கேரள மாநிலத்தின் நலன்களை பாதுகாக்கவும், சிறு மற்றும் குறு விவசாயிகள், பண்ணை தொழிலாளர்களின் வாழ்வுரிமைகள் மற்றும் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் புதியதாக பிரம்மகிரி வளர்ச்சி குழுமத்தின் (Brahmagiri Developmat Society)சார்பில் இப்புதிய திட்டம் துவங்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கேரளச் சந்தையில் வருடத்திற்கு 10 லட்சம் கோழிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் சந்தை மதிப்பு ரூ.10,000 கோடி. இக்கோழிச் சந்தையை பல பெரிய தனியார் நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த தனியார் பெரு நிறுவனங்களின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் கோழி வளர்ப்போருக்கு பெரிய அளவில் லாபம் கிடைப்பதில்லை. சந்தையின் விலை ஏற்ற, இறக்கங்கள் அவர்களை கடுமையாக பாதிக்கின்றன.
இத்தகைய நடைமுறைச் சூழலில் கேரள கோழி வளர்ப்பவர்கள் மற்றும் நுகர்வோரின் நலன்களை பாதுகாக்கும் வண்ணம் இப்புதிய நவீன கூட்டுறவு கோழி வளர்க்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேரும் கோழி வளர்ப்பவர்கள் ஒரு கோழிக்கு விதைப்பணமாக (Seed Money) ரூ. 130 வரை செலுத்தி குஞ்சுகள், தீவனம் மற்றும் மருந்துகளை பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு பல வங்கிகள் கடன் தர தயாராக உள்ளன. மேலும் இத்திட்டத்தில் காப்பீடு வசதி செய்யப்பட்டு உள்ளதால் நோய்த் தாக்குதல் மற்றும் இயற்கைச் சீற்றப் பாதிப்புகளினால் கோழிகள் பாதிக்கப்படும்போது கோழி வளர்ப்போரின் பொருளாதார நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன.
தற்போது இத்திட்டத்தின் இலக்காக வரும் ஐந்து ஆண்டுகளில் 2.5 லட்ச கோழிகள் உற்பத்தி செய்யவும் கேரள கோழிச் சந்தையில் 25 சதவிகிதத்தை பெறும் நோக்கில் 6000 கோழி பண்ணைகள் மற்றும் 2000 “கேரளச் சிக்கன்” கடைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக 10,000 குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் குறைந்தளவு ஊதியமாக ரூ.21,000 பெறவும் முடியும். தற்போது கோழி வளர்ப்பவர்கள் ஒரு குழுவாக இணைந்து தொழிலாளர்களின் தேவை இல்லாமல் 2500 முதல் 3000 கோழிகள் வரை வளர்க்கின்றனர். சுமார் 35 முதல் 42 நாட்களுக்குள் இக்கோழிகள் 2.3 கிலோ அளவை எட்டி விடுகின்றன. அதனால் வருடத்திற்கு ஆறுமுறை கோழி வளர்த்து, விற்பனை செய்யமுடியும். சுமார் 2 முதல் 3 சதவிகிதம் கோழிக் குஞ்சுகள் வளர்க்கும் போது இறந்தாலும் இதற்கு ஏற்ற எண்ணிக்கையில் கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டு, வளர்க்கப்படுகின்றன. ஒரு கோழி சராசரியாக 2 கிலோ என்று கணக்கிட்டாலும் வளர்க்கப்படும் 2,500 முதல் 3000 கோழிகள் வாயிலாக உயர் எடை (Live weight) 5000 கிலோ முதல் 6000 கிலோ வரை கிடைக்கும். இதற்கு வளர்க்கும் கூலியாக ஒரு கிலோவிற்கு ரூ.11 வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக வருமானமாக ரூ.55,000 முதல் ரூ.66,000 வரை பெற முடிகிறது. இது தவிர கோழி உரமாக ரூ.8000 கிடைக்கிறது. மொத்தமாக ஒரு முறை கோழி வளர்த்து விற்பனை செய்யும் போது ரூ.63,000 முதல் ரூ.74000 வரை கிடைக்கும். மாத அளவில் கணக்கீடு செய்யும் போது ரூ.31,500 முதல் ரூ.37000 வரை கிடைக்கும்.
இதர செலவினங்களான மின்சாரம், கடனுக்கு உரிய தவணை போன்றவற்றை கழித்து பார்க்கும் போது கோழி வளர்ப்பவர்களுக்கு மாதத்திற்கு குறைந்தளவு ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை கிடைக்கும். மேலும் கோழி வளர்ப்பவர்களை சந்தையில் ஏற்படும் விலை வீழ்ச்சிகளில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் “விலை நிலைப்படுத்தும் நிதி” (price Stabilisation fund) உருவாக்கப்பட்டு கோழி இறைச்சியின் விலை குறையும் போது அவர்களின் நலன் பாதுகாக்கப்படுகின்றது. இந்த நிதியில் இறைச்சி விலை உயர்வின் போது நிதி திரட்டப்பட்டு, சேமிக்கப்படுகிறது. தற்போது சந்தை ஆய்வுகளை பார்க்கும் போது கோழி சந்தைகளில் வருடத்தில் நான்கு மாதங்கள் சராசரி விலையும், நான்கு மாதங்களுக்கு விலை உயர்வு மற்றும் நான்கு மாதங்களுக்கு மிகவும் விலை குறைந்து காணப்படுகிறது. இதனை அடிப்படையாக கொண்டு விலை நிலைப்படுத்தும் நிதி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தைகளில் கோழி இறைச்சியின் விலை குறையும் போது கோழி இறைச்சி குளிர் பதப்படுத்தும் முறை வாயிலாக மலபாரில் உள்ள கோழி இறைச்சி தொழிலகத்தில் பதப்படுத்தப்பட்டு தற்போது உள்ள நூற்றுக்கு மேற்பட்ட சில்லரை விற்பனை மையங்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலமாக கோழி விலை வீழ்ச்சிகளில் இருந்து கோழி வளர்ப்போர் பாதுகாக்கப்படுகின்றனர்.
கடந்த 2018 டிசம்பர் மாதம் 30ஆம் தேதி கேரளாவின் முதல் அமைச்சர் பினராயி விஜயனால் துவங்கப்பட்ட இக்கூட்டுறவு பண்ணையின் சார்பில் தமிழகத்தில் பொள்ளாச்சியில் 24,000 தாய் கோழிகள் கொண்ட பண்ணை இன விருத்திக்காக அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 80 கோழி விவசாயிகள் இனவிருத்தி பண்ணைகளை (Breeder farm) அமைக்க தேவைப்படும் உதவிகள் கேரளாவில் வழங்கப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் 30, 2019 வரை ரூ.25.68 கோடி வரை விற்பனை செய்துள்ள இக்கூட்டுறவு முயற்சி, கடுமையான இயற்கைச் சீற்றங்களைத் தாண்டியும் கேரள அரசு தனது 2018-2019 நிதி நிலை அறிக்கையில் தெரிவித்த ரூ.20 கோடியை இயற்கைச் சீற்றங்கள் காரணமாக குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க முடியாத போது இச்சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளது. இக்காலகட்டத்தில் இக்கூட்டுறவு முயற்சிக்கு தேவைப்படும் நிதியை தொழிலாளர் சமூக வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.6 கோடி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வளர்ச்சிப் பணிகள் கோழிச் சந்தைகளில் கடும் வீழ்ச்சிகளை தாண்டி வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் கேரளாவில் நிதியமைச்சர் முனைவர் தாமஸ் ஐசக் மற்றும் கால்நடை அமைச்சர் ராஜூ ஆகியோரின் முன்மாதிரிச் செயல்பாடுகளும் ஆகும். தற்போது தங்களது இலக்குகளை அடையவும், கூட்டுறவு முயற்சியை விரிவாக்கம் செய்யும் நோக்கில் ரூ.43 கோடி அளவிற்கு நிதி பெறுவதற்கான திட்டங்கள் பல வளர்ச்சித் துறைகளால் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
தற்போது தவறான வேளாண் கொள்கைகளால் நாடு முழுவதும் வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகள் கடுமையான வீழ்ச்சிகளை சந்தித்து வரும் சூழலில் ஒரு மாற்று வளர்ச்சிப் பாதை வாயிலாக ஒரு நவீன கூட்டுறவுப் பண்ணையை வெற்றிகரமாக அமைத்து, செயல்படுத்தி மக்களை வீழ்ச்சியில் இருந்து பாதுகாக்கும் முயற்சியில் கேளராவின் இடதுசாரி அரசு வெற்றி கண்டுள்ளது என்பதே மறைக்க முடியாத உண்மையாகும்.
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி அக்.14-20).
தமிழாக்கம்: முனைவர் தி.ராஜ்பிரவீன், இணைப் பேராசிரியர், வேளாண் விரிவாக்கத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.