சீர்காழி, செப்.28- நாகை மாவட்டம் சீர்காழியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்காக 2016 ஏப்ரல் மாதம் பணிகள் துவங்கப்பட்டு பழைய உரிமையியல் நீதிமன்றம் கட்டடம் இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட கட்டுமான பெரிய கல் நீதிமன்ற வாசலில் போக்குவரத்துக்கு இடையூறாக மூன்று ஆண்டுகளாக கிடந்தது. கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி சீர்காழி நீதிமன்ற கட்டிடம் திறக்கப்பட்ட போது இந்த பெரிய கல்லை நீதிமன்றம் அருகில் சாலையோரம் உள்ள திருத்தோனிபுரம் பாசன வாய்க்காலின் ஓரமாக உருட்டி தள்ளி விட்டனர். இது போக்குவரத்துக்கு இடையூ றாகவும், சாலையில் தேங்கியுள்ள மழைநீர் நேராக பாசன வாய்க்காலுக்கு செல்ல தடையாகவும் உள்ளது. இதே போல் நீதிமன்றம் எதிரிலும் இதே போன்று ஒரு பெரிய கல் உள்ளது. இது பற்றி பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, காவல்துறை, நகராட்சி நிர்வாகம் போன்றவை இந்த கல்லை அப்புறப்படுத்தாமல் கண்டும் காணாமலும் உள்ளனர். போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இந்த கட்டுமான கல்லை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.