100 சத திறந்தவெளி கழிப்பிடமில்லா நாகரிக நிலையை உருவாக்குவது மத்திய- மாநில அரசுகளின் இயல்பான கடமை யாக இருக்க வேண்டும். ஆனால் 2.10.2014 அன்று நரேந்திர மோடியின் வாழ்நாள் வீர சபதமாக அவராலேயே துவக்கி வைக்கப்பட்டது. அதன் சாதனை இலக்கு 2.10.2019 என அவரால் தான் அறிவிக்கப்பட்டது. அதன் வெற்றியாக 2.10.2019 அன்று சபர்மதி ஆசிரமத்தில் ‘ஸ்வட்ச் பாரத் ஆவாஸ்’ அதாவது தூய்மை இந்தியா தினத்தை அவரே துவக்கி வைத்தார். அதில் பேசும்போது 60 மாதங்களில் 60 கோடி இந்தியர்களுக்கு டாய் லெட்டுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதாக அவரே அறிவித்தார்.
இப்படி எல்லாவற்றையும் அறிவித்த அவரே, திறந்த வெளி கழிப்பிடங்களை ஒழிப்பதில் 100 சத வெற்றியை நம்மால் எட்ட முடியவில்லை; இன்னமும் நாம் செல்லவேண்டிய தூரம் உள்ளது என்று தாமாகவே அறிவித்திருந்தால் அது தான் பாபுஜியின் ஆசிரமத்தில் கேட்கப்பட்ட மோடியின் உண்மையான மான் கீ பாத்தாக அமைந்திருக்கும். காந்திஜியின் ஆன்மா அன்று மட்டும் உயிர்த்தெழுந்து மோடிஜியின் அன்றைய பெர்பாமன்சை பார்த்திருந்தால் திரும்பவும் மீண்டு வராத மோன நிலைக்கு நிரந்தரமாகவே சென்றிருக்கும்.
முகப்பு வெளிச்சத்தில்...
2.10.2019 அன்று காலையில் மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்ட இணைய தளத்தை திறந்து பார்த்த போது 35 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்கள் திறந்தவெளி கழிப்பி டமில்லா மாநிலங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்திய எதார்த்தம் இதற்கு நேர்மாறாக இருந்தது. தமிழ்நாட்டின் நாமக்கல் லாரி மார்க்கெட்டிலிருந்து உயர் கனரக ஓட்டுநர்கள் வட இந்திய மாநிலங்களுக்கு ஆண்டு முழுவதும் சராசரியாக 25 டன் சரக்குகளை ஏற்றிச் சென்று கொண்டிருக்கிறார்கள். கர்நாடகா மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ம.பி. உ.பி. பீகார், ஹரியானா உள்ளிட்ட எல்லா மாநிலங்களின் புறநகர்கள், அதையொட்டிய கிரா மங்களில் தங்கள் லாரிகளின் நீண்ட முகப்பு வெளிச்சத்தில் திறந்தவெளியில் மக்கள் காலைக் கடனுக்காக உட்கார்ந்திருப்பதை இப்போதும் காண்பதாக கூறுகிறார்கள்.
2019 ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் திறந்தவெளி கழிப்பிடமில்லா கிராமம் என்ற பலகைகள் எல்லா இந்திய கிராமங்களிலும் அசுர வேகத்தில் நடப்பட்டன. இதில் சோகம் என்னவென்றால் அந்த அறிவிப்பு பலகை அருகா மையிலேயே திறந்தவெளி கழிப்பிடங்கள் இருந்தன. நாடாளுமன்றத்திலேயே தவறான அறிக்கைகள் வைக்கப்பட்டன.
வட இந்தியாவும், தென்னிந்தியாவும்
ஹரியானா, குஜராத், சண்டிகர், கேரளா, உத்தரகாண்ட், சத்தீஸ்கர் உள்பட பதினோரு மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் திறந்த வெளி கழிப்பிடங்களை முற்றாக ஒழித்து விட்டதாக மத்திய இணை அமைச்சர் ஜிகாஜிநாகி 8.2.2018 அன்றே நாடாளுமன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். இந்திய கிராமங்களின் சமூக வாழ்வியலை தொடர்ந்து எழுதும் வில்லேஜ் ஸ்கெயார் இணையதள சஞ்சிகை, மறுநாளே அதாவது 9.2.2018 அன்று வெளியிட்ட தனது கட்டுரையில் திறந்தவெளி கழிப்பிடமில்லாத கிராமம் என அறிவிக்கப்பட்ட தெற்கு குஜராத் வல்சாத் மாவட்டம் மேக்வாட் கிராமத்தின் 2160 வீடுகளில் ஒரு வீட்டில் கூட கழிப்பறையில்லை என்பதை அம்பலப்படுத்தியது.
“எவ்வளவோ முறையிட்டும் குஜராத் அரசு கழிப்பறை கள் கட்டிக் கொடுக்கவில்லை. நாங்கள் அருகில் இருக்கும் தாதர்- நாகர்ஹவேலி யூனியன் பிரதேசத்திற்கு குடிபெயர விருக்கிறோம் என்று அக்கிராமத்தின் தலைவர் லகானுபாய் கூறியதாகவும் அக்கட்டுரை மேலும் கூறியது. இது ஒரு வடஇந்திய உதாரணமாகும்.
தெற்கே தமிழ்நாட்டில் மன்னார்குடி 152 ஆண்டுகளைக் கடந்த நகராட்சியாகும். இந்த புராதன நகரம் 11.3..2019 அன்று திறந்தவெளி கழிப்பிடமில்லாத நகரம் என மோடி அரசால் அறிவிக்கப்பட்டது. இந்நகரத்தின் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் செயலாளர் எஸ்.ஆறுமுகம், நகரத்தில் திறந்தவெளி கழிப்பறைகள் பல பகுதிகளில் உள்ளதைப் பற்றி விவரித்து 10.10.2019 அன்று மாவட்ட ஆட்சியாளரிடம் ஒரு புகார் மனு அளித்திருந்தார். இந்த செய்தியை பிரசுரித்த தி இந்து ஆங்கில நாளிதழ் (15.10.2019), மன்னார்குடியில் திறந்தவெளி கழிப்பி டங்கள் இருப்பதையும் ஏராளமான பொது கழிப்பிடங்கள் ஒருங்கிணைந்த சுகாதார மையங்கள் பராமரிப்பின்றி, மக்கள் பயன்பாட்டில் இல்லாமல் கிடப்பதையும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மன்னார்குடி நகரில் குவிந்திருப்ப தையும் அவரது பகிரங்க அறிக்கையை குறிப்பிட்டுக் காட்டி பிரசுரித்திருந்தது. இது ஒரு தென்னிந்திய உதாரணமாகும்.
இதிலும் சாதிய மத துவேசம்
குறிப்பாக 2015 பிற்பகுதியிலிருந்து சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட, ஏழை, எளிய மக்களின் நேரடி பங்கேற்புடன் வெகுஜன இயக்கமாக தூய்மை இந்தியா திட்டம் மாற்றப்படா ததால் கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும் என்ற சமூக மனமாற்றம் உருவாகவில்லை. எனவே தான் தூய்மை இந்தியாவின் உறுதிமொழி தோல்வியடைந்தது. வட மாநிலங்களில் பாஜக செல்வாக்குள்ள இடங்களில் உயர் சாதிப் பிரிவினரின் ஆதிக்கமே தூய்மை இந்தியா திட்டத்தில் மேலோங்கியிருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உயர்சாதி பிரிவினருக்கும் இடையே உள்ள உறவு தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் மேலும் மோசமடைந்தது என்பதற்கு ஏராளமான தகவல்கள் உள்ளன.
இதன் உச்ச கட்டம் தான், மத்தியப் பிரதேச சிவகுரி மாவட்டத்தில் கழிப்பறை இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த தலித் சிறுமி ரோஷினியும் அவினாஷ் என்ற சிறுவனும் திறந்த வெளியில் மலம் கழித்தார்கள் என்பதற்காக 25.9.2019 அன்று ஆதிக்க வெறியர்களால்அடித்தே கொல்லப்பட்ட கொடூர சம்பவமாகும். பில்கேட்ஸ் அறக்கட்டளையின் உலக சாதனையாளர் விருது, கடுமையான சர்வதேச எதிர்ப்புகளுக்கு இடையே நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. மறுநாளே இந்தியாவில் நடைபெற்ற இந்தப் படுகொலை உலக அரங்கில் நாட்டிற்கு நேர்ந்த அவமானகரமான சம்பவமாக மாறியது.
கொல்லப்பட்ட அவினாஷின் தந்தை மனோஜ் வால்மீகி, ‘‘இதற்கு முன்பு சாதிரீதியாக இழிவுபடுத்தப்பட்டோர் எங்கள் குழந்தைகள் அவர்கள் குழந்தைகளுடன் விளையாட முடியாது’’ என்று கூறியதாக ராய்ட்டர் நிறுவனம் எழுதியது. (ராய்ட்டர் 26.9.2019). பொது கழிப்பறையை பயன்படுத்து வதற்கு எங்களை உயர்சாதியினர் அனுமதிப்பதில்லை என ஹரியானாவின் பல்வால் மாவட்டம் அம்ரோலி கிராமத்தின் தலித் ஒருவர் கூறியதாக எழுதிய டவுன்டுஎர்த் என்ற சுற்றுச்சூழல் அறிவியல் சஞ்சிகை சாதிப்பிரிவினையால் தூய்மை இந்தியா இயக்கம் தடம்புரள்வதாக தெரிகிறது என்றும் எழுதியது.
கழிப்பறை இல்லாத மக்கள் திறந்தவெளியை பயன்படுத்தும் போது அவர்கள், சாதி ஆதிக்க வெறியர்க ளால் பொதுவிடத்தில் கேமராக்கள் முன்பு சிறுமைப் படுத்தப்பட்டனர். தோப்புக்கரணங்கள் போட வைக்கப்பட்ட னர். தடிகளால் அடித்து துரத்தப்பட்டனர். திறந்தவெளியி லிருந்து ஒரு நடுத்தர வயது பெண் தரதரவென்று பலாத்காரமாக இழுத்து வரப்பட்டு வேனில் ஏற்றப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் நடந்தது. ஒரு முதியவர் தாக்கப்பட்டு அவர் கழித்த மலத்தை அவர் கையால் அள்ளச் செய்த கொடுமை உஜ்ஜயினியில் நடைபெற்றது. ராஜஸ்தான் பிரதாப்கார் நகரத்தின் ஆணையர் அசோக் ஜெயின் முன்னிலையில், திறந்தவெளியில் உட்கார்ந்திருந்த மூன்று பெண்கள் புகைப்படம் எடுக்கப்பட்டனர். இதை எதிர்த்த சமூக ஆர்வலர் ஜாபர் உசேன் தாக்கப்பட்டு சிறிது நேரத்தில் அவர் மரணமடைந்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் நிக்ராணி சமிதி என்னும் கண்காணிப்புக்குழு, ஏழை, எளிய மக்களை இழிவுபடுத்துவதிலும் துன்புறுத்துவதிலும் ஈடுபட்டது. தரமான ஒரு கழிப்பறை கட்டுவதற்கு சராசரி இந்தியா பணமதிப்பில் குறைந்தது ரூ.40 ஆயிரம் ஆகும். ஆனால் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு வெறும் ரூ.12 ஆயிரத்தை கொடுத்து விட்டு கழிப்பறை கட்டியே தீர வேண்டும் என மிரட்டப்பட்டனர். திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவலத்தைவிட காட்டு மிராண்டித்தனமான மனித உரிமை மீறல்கள் பரவலாக உ.பி. ம.பி. ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களில் நடைபெற்றன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் பாலும் தலித்துகளாக, சிறுபான்மையினராக இருந்தனர்.
கற்பனையான வெற்றி
2015 லிருந்து 2019 வரை ம.பி., உ.பி, ராஜஸ்தான், ஹரியானா, பீகார், குஜராத், கர்நாடகா உள்பட வடமாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு தூய்மை இந்தியாவின் கற்பனையான வெற்றி சங் பரிவாரத்திற்கு தேவைப்பட்டது. அதற்காகவே மோடியின் இந்திய சாதனை போலவும் அது பிரச்சாரம் செய்யப்பட்டது. 2015 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச கார்ப்பரேட் நிறுவ னங்களின் துணையோடு தூய்மை இந்தியா திட்டத்தைப் பற்றிய புள்ளி விபர புளுகு மூட்டைகள் தாராளமாக அவிழ்த்து விடப்பட்டன. இந்திய-சர்வதேச அரசியல் வானில் மோடியின் பிம்பத்தை உயர்த்திக் காட்டுவதற்கும் தூய்மை இந்தியா துடைப்பங்கள் அதிக உயரத்தில் தூக்கிப் பிடிக்கப்பட்டன.
மோடியால் அழைக்கப்படும் தூய்மை இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றிய நிறைய கேள்விகள் நம்மிடம் உள்ளன. கட்டப்பட்ட கழிப்பறைகள் தொடர்ந்து ஐந்து ஆண்டு களுக்காவது பயன்படுத்தப்படும் தரத்தில் உள்ளதா? கழிப்ப றைகளுக்கு தேவையான தண்ணீர் உள்பட இந்திய குடும்பங்க ளின் சராசரி தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டதா? அல்லது அதற்கான புதிய திட்டங்கள் ஏதும் உள்ளதா? கிராமப் புற ஏழைகளின் கழிவறை மண்டிகளை சுத்தப்படுத்தவும் பழுது பார்க்கவும் விடுபட்டுப் போன இந்திய ஏழை குடும்பங்க ளுக்கு தரமான கழிப்பறைகள் கிடைக்கக் செய்வதற்கும் மத்திய அரசின் மையப்படுத்தப்பட்ட கிராம சுகாதாரத் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? திறந்தவெளி கழிப்பிடமில்லா உன்னத நிலையை அடைவதற்கு தேவையான சமூக அமைதியும் நல்லி ணக்கமும் பாதுகாக்கப்படுமா? இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்காத வரை தூய்மை இந்தியாவின் எதிர்காலமும் கேள்விக்குறி தான்.