ஹைதராபாத்:
கர்நாடகத்தைத் தொடர்ந்து தெலுங்கானாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜக தோல்வி அடைந்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 17 இடங்களில் 9 இடங்களில் மட்டுமே சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி வென்றது. இங்கு பாஜக முதல்முறை யாக தனித்து போட்டியிட்டு 4 இடங்களில் வென்றது. 2018 டிசம்பரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், 118 இடங்களில் போட்டியிட்டும், ஒரு இடம் மட்டுமே பாஜகவுக்கு கிடைத்தது. அப்படியிருக்க, மக்களவைத் தேர்தலில் 4 இடங்கள் என்பது, பாஜக-வினருக்கே ஆச்சரியமாக அமைந்தது.
எனினும், தெலுங்கானாவில் பாஜகவின் செல்வாக்கு கூடிவிட்டதாக அக்கட்சியின் தலைவர்கள் கூறிக் கொண்டனர்.இந்நிலையில், தெலுங்கானா மாநில உள்ளாட்சித் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. இங்கு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 32 மாவட்ட ஊராட்சி களையும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியே வென்றுள்ளது.
மாவட்ட ஊராட்சிகளில் மொத்தமுள்ள 538 இடங்களில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 445 இடங்களையும், காங்கிரஸ் 75 இடங்களையும் வென்றுள்ள நிலையில், பாஜகவுக்கு வெறும் 8 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. சுயேச்சைகள் 5 இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்.ஊராட்சி ஒன்றிய வார்டுகளைப் பொறுத்தவரை, மொத்தமுள்ள 5 ஆயிரத்து 816 இடங்களில் 3 ஆயிரத்து 557 இடங்களை டிஆர்எஸ் கட்சியும், 1377 இடங்களை காங்கிரசும் கைப்பற்றியுள்ளன. பிற கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் 636 இடங்களை வென்றுள்ளனர். பாஜகவுக்கோ 211 இடங்கள்தான் கிடைத்துள்ளன.
இதேபோன்ற தோல்விதான், கர்நாடகத்திலும் கிடைத்தது. ஏனெனில் மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் பாஜக 25 தொகுதிகளை கைப்பற்றியது. ஆனால், கடந்த மே 29-ஆம் தேதி நடைபெற்ற கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில், பாஜக தோல்வி அடைந்தது.
61 நகராட்சிகளில் இருக்கும் 1,221 வார்டுகளில் காங்கிரஸ் 509 வார்டு களிலும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 174 வார்டுகளிலுமாக மொத்தம் 683 இடங்களில் வென்ற நிலையில், பாஜகவுக்கு 366 வார்டுகள் மட்டுமே கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.