தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பக்கிள் ஓடையில் வளரும் அமலைச்செடிகளை அகற்றக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தூத்துக்குடி மாநகர் குழு சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் மனுக்கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தூத்துக்குடி மாநகர் 31 வது வார்டு வழியாக செல்லக்கூடிய பக்கிள் ஓடை பழுதடைந்துள்ள காரணத்தினால் குப்பைகள்,கழிவுகள், அமலைச் செடிகள் அதிகமாக பரவி உள்ளன. இதனால் அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாகி, ஓடை பகுதியை சுற்றிஉள்ள பொதுமக்கள் நோய் வாய்ப்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அமலைச் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மாநகர் செயலாளர் சரோஜா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பூமயில், மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.