tamilnadu

img

ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் அதிகாரிகள் இரண்டாம் கட்ட ஆய்வு....

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைப்பது தொடர்பாக மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் குழுவினர் இரண்டாம் கட்டமாக சனிக்கிழமையன்று ஆய்வு செய்தனர்.தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனக் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் தெரிவித்திருந்தார். இதன்படி ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகளை மத்திய தொல்லியல் துறை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடத்தை இறுதி செய்வது தொடர்பாக திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையிலான மத்திய தொல்லியல் துறை குழுவினர் சனிக்கிழமையன்று இரண்டாம் கட்டமாக நேரில் ஆய்வு செய்தனர்.ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள 114 ஏக்கர் பகுதியில் டிரோன் கேமிரா மூலம் ஆய்வு செய்தனர். அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடத்தை இறுதி செய்வது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபால கிருஷ்ணனுடன் ஆலோசனை நடத்தினர்.

ஆய்வின் போது மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர்கள் எத்திஸ்குமார், முத்துக்குமார், அலுவலர் அறவாழி, பராமரிப்பு அலுவலர்கள் சங்கர், பாலகிருஷ்ணன், வரலாற்று ஆசிரியர் சிவகளை மாணிக்கம், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.தூத்துக்குடி மாவட்டம் கொற்கை அருகே உள்ள அகரம், மாறமங்கலம், ஆறுமுகமங்கலம் ஆகிய இடங்களிலும், ஆதிச்சநல்லூர் பகுதியில் கால்வாய் மற்றும் புளியங்குளம் பகுதியிலும், சிவகளை பகுதியில் சிவகளை செக்கடி, ஸ்ரீமூலக்கரை, பேட்மாநகரம், பேரூர் திரடு, வெள்ளி திரடு, பரக்கிராமபாண்டி, பொட்டல் கோட்டை திரடு, ஆவரங்காடு ஆகிய இடங்களிலும் அகழாய்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

;