திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி வட்டம் பாண்டி ஊராட்சியில் வசித்துவரும் பார்வை மாற்றுத்திறனாளி இளைஞர் அசோக்பாலா என்கிற ஐயப்பன். இவரது விடாமுயற்சியுடன் கூடிய தொடர் போராட்டத்தால் திருத்துறைப்பூண்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலம் ஏடிஎம் கார்டு கிடைத்துள்ளது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், தீக்கதிர் நாளிதழ் ஆகியவற்றின் உதவியுடன் ஏடிஎம் கார்டு கிடைத்தது குறித்து தனது நன்றியையும், மகிழ்ச்சியையும் ஐயப்பன் வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 13.7.2020 அன்று திருத் துறைப் பூண்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஏடிஎம் கார்டு கேட்டு விண்ணப்பித் திருந்தார். அதற்கு அந்த வங்கியின் கிளை மேலாளர் “கண்ணு தெரியாத உனக்கு எதற்கு ஏடிஎம் கார்டு” என்று கேட்டு இழிவான முறையில் பேசியுள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ஐயப்பன் தனது நிலை குறித்து வாட்ஸப்பில் பேசி நண்பர்களுக்கு பகிர்ந்தார். இது தமிழகம் முழுவதும் பல்வேறு குழுக்களில் பகிரப்பட்டு பரபரப்பானது. இவரது இந்த செய்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் கவனத்திற்கும் சென்றது. அவர் உடனடியாக திருவாரூர் மாவட்ட சங்க செயலாளர் டி.சந்திராவை தொடர்பு கொண்டு இப்பிரச்சனையில் தலையிட கோரினார்.
உடனடியாக சங்க மாவட்ட செயலாளர் டி.சந்திரா ஐயப்பனை தொடர்பு கொண்டு பேசி விபரங்களை கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து 20.7.2020 அன்று வங்கி கிளை மேலாளரைக் கண்டித்து திருத்துறைப்பூண்டியில் மாற்றுத்திறனாளி சங்கத்தின் சார்பில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தனது தவறுக்கு கிளை மேலாளர் வருத்தம் தெரிவித்தார்.பார்வை மாற்றுத்திறனாளிக்கு ஏடிஎம் கார்டு வழங்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் வங்கி கிளை மேலாளருக்கு வழங்கப்பட்டது. இதனால் தெளிவுபெற்ற கிளை மேலாளர் விரைவாக ஏடிஎம் கார்டுபெற்றுத்தர உறுதியளித்தார். இந்த செய்திஆக.4 அன்று தீக்கதிர் நாளிதழில் வெளியானது.
இந்த பின்னணியில் 27.8.2020 அன்று பார்வை மாற்றுத்திறனாளி அசோக் பாலா என்ற ஐயப்பனுக்கு ஏடிஎம்கார்டு கிடைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தனக்கு உதவி செய்த சங்க தலைவர்களிடமும், தீக்கதிர் மாவட்ட செய்தியாளரிடமும் ஐயப்பன் பகிர்ந்து கொண்டார்.