திருவண்ணாமலையில் தீபவிழா தொடங்கியது
திருவண்ணாமலை,டிச.1- திருவண்ணாமலை தீபவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. திருவண்ணாமலையில் சனிக்கிழமை மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கொடியேற்றத்தின் போதும் மழை பெய்தது. மழையை பொருட்படுத்தாமல் ஏராள மான மக்கள் கொட்டும் மழையில் நனைந்தபடியும், துவக்க விழாவில் கலந்து கொண்டனர். வருகிற 10 ஆம் தேதி தீபவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில், துணிப்பை, சணல்பை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகள் கொண்டு வரும் பொது மக்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசு வழங்கப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை தீபவிழாவின் போது, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும், பிளாஸ்டிக் தூக்கு பைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த துணி மற்றும் சணல் பைகளை எடுத்து வரும் மக்களை ஊக்கு விக்கும் வகையில் இந்த 2019 ஆம் ஆண்டு தீபவிழாவில் 12 நபர்களுக்கு தலா 2 கிராம் தங்கம் மற்றும் 72 நபர்களுக்கு தலா 10 கிராம் வெள்ளி நாணயங்கள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளைக் கொண்டு வந்து கூப்பன் பெறும் ஒவ்வொரு நபருக்கும், ஒரு துணிப்பை வழங்கப்பட இருக்கிறது. இத்திட்டம் குறித்தான விழிப்புணர்வினை ஏற்படுத்த 5000 ஸ்டிக்கர்கள் மற்றும் துண்டு பிரசுரம் தயாரிக்கப்பட்டு, அவை பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்துகள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் ஒட்டப்பட உள்ளது. மேலும், தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்துதல், மூலமாக தீபத்தினையொட்டி தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் மக்களுக்கு, சென்றடைவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கிராம நிர்வாக அலுவலர் மீது ஆசீட் வீசிய காவலர்
திருவண்ணாமலை,டிச.1- திருவண்ணாமலையில் முன்விரோத தகராறில் கிராம நிர்வாக அலுவலர் மீது காவலர் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை தென்றல் நகரை சேர்ந்தவர் சிவக்குமார். கிளிப்பட்டு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். வேங்கிக்கால் உண்ணாமலை நகரை சேர்ந்த காவலர் ஸ்ரீபால். இவரது மாமியார் விமலா வெறை யூர் வருவாய் ஆய்வாளராக உள்ளார். பணியின் காரணமாக சிவக்குமார் விமலாவின் வீட்டுக்குச் சென்றுவந்தார். இவர்கள் இரண்டு பேருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. வெள்ளியன்று, சிவக்குமார் விமலாவின் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். ஸ்ரீபாலிடம் விமலா இதுபற்றி கூறியுள்ளார். இரவு சுமார் 11 மணியளவில் ஸ்ரீபால் அவரது மாமியார் விமலா ஆகியோர் தென்றல் நகரில் உள்ள சிவக்குமார் வீட்டுக்கு சென்று தட்டி கேட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த ஸ்ரீபால் தான் கொண்டுவந்திருந்த ஆசீட்டை சிவக்குமார் மீது வீசினார். அவர் தடுக்க முயன்றபோது ஸ்ரீபால் மீதும் ஆசிட்பட்டது. இருவரும் படுகாயமடைந்தனர். திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 2 பேரும் சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.